யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

திங்கள், 6 மே, 2013

வெள்ளாடு வளர்ப்பு & ஆட்டுக் கொட்டில் பராமரிப்பு


மிகக்குறைந்த செலவில் பசு, எருமை போன்ற கால்நடைகளில் வளர்க்க முடியாத சூழலில் கூட வெள்ளாடுகளை வளர்க்கலாம். இதற்கு முதலீடு மிகவும் குறைவு. மேலும் வெள்ளாடுகள் மழை அளவு குறைவாக உள்ள வறண்ட நிலங்களில் கூட வளர்த்தல் எளிது. எனவே தான் வெள்ளாடுகளை “ஏழைகளின் பசு” என்று அழைக்கின்றனர்.
வெள்ளாடுகள் (மாமிசம்) இறைச்சி மற்றும் பால் தேவைக்காக வளர்க்கப்படுகின்றன. நிலமற்ற மற்றும் குறுநில ஏழை விவசாயிகளுக்கு வாழ்வுக்கு சிறந்த வழிகாட்டியான ஆடுகள் அதிக ஊட்டச்சத்துள்ள பாலை வழங்குகின்றன. வெள்ளாடுகள் ஆங்காங்கு இருக்கும் புதர்ச்செடிகளில் மேயும். அசாதாரமாண தட்பவெப்ப சூழ்நிலைகளையும் தாண்டி கிடைக்கும் புல் பூண்டுகளைக் கொண்டே உயிர் வாழக்கூடியது. உலகில் மாட்டுப் பாலை விட சில இடங்களில் ஆட்டுப்பாலையே விரும்பி அருந்துகின்றனர். அது போல் ஆட்டு இறைச்சியும், ஒரு முக்கிய உணவாகும். உலக சுகாதார நிறுவனப் கருத்துப்படி பசும்பாலை அருந்துவதால் வயிறு, தோல், காது போன்றவற்றில் வரும் ஒவ்வாமை 70 சதவிகிதம் பசும்பாலினால் வருவதில்லை. வரலாற்றுக்கூற்றுப்படி ஆடுகளே முதன் முதலில் வளர்க்கப்பட்ட மிருகம் ஆகும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பிருந்தே மனிதர்கள் ஆட்டின் பால், இறைச்சி, முடி, தோல், போன்றவற்றைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
Goat_flock
வெள்ளாடு வளர்ப்பின் நன்மைகள்
  1. வெள்ளாடு வளர்ப்பில் முதலீடு மிகவும் குறைவு.
  2. இவை அளவில் சிறியதாக உள்ளதால் கொட்டகைப் பராமரிப்புச் செலவு குறைவு.
  3. ஆடுகள் மிக்குறைந்த காலத்தில் 10-12 மாதங்களில் பருவ வயதை அடைந்து விடும். இவை 16-17 மாதங்களில் குட்டி ஈன்று விடும்.
  4. பொதுவாக ஆடுகள் ஒரு தருணத்தில் 2 குட்டிகள் மட்டுமே போடும். 3 அல்லது நான்கு குட்டிகள் போடுவது மிகவும் அரிது.
  5. வறண்ட நிலங்களில் மற்ற கால்நடையை விட வெள்ளாடு வளர்ப்பே சிறந்ததாகும்.
  6. ஆடுகள், பலவகைப்பட்ட பயிர்களையும் உண்பவை. இவை முட்புதர்கள், பூடுகள், வேளாண் பயிர்க்கழிவுகள் மேலும் வேளாண் உப விளைப்பொருட்கள் போன்ற அனைத்தையும் உண்பதால் தீவனப் பராமரிப்புக் குறைவு.
  7. ஆட்டு இறைச்சியில் பன்றி இறைச்சியை விட கொழுப்பு குறைவாகவே உள்ளது. மேலும் இதன் குளிர்ச்சி மற்றும் மென்று உண்பதில் எளிதாகையால் வெயில் காலங்களுக்கு மிகவும் ஏற்றது.
  8. பசும்பாலை விட வெள்ளாட்டுப்பால் எளிதில் செரிக்கக்கூடியது. இதில் ஏதும் ஒவ்வாமை ஏற்படுவதில்லை. மேலும் வெள்ளாட்டுப்பாலில் சிறிய கொழுப்பு திரள்களே உள்ளன. பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பொருட்கள் அதிகளவு உள்ளதால், நோய் எதிர்ப்பாற்றல் குறைவு.
  9. வெள்ளாடு செம்மறி ஆட்டுடன் ஒப்பிடும் போது 2.5 மடங்கு பொருளாதார அளவில் மிதவெப்பம் பகுதிகளுக்கு ஏற்றவை.
  10. ஆட்டிலிருந்து கிடைக்கும் தோல், முடி ஆகியவையும் பதனிடு தொழிற்சாலைகளில் பயன்படுகின்றன.
கிராமப்புறப் பகுதிகளில் கூலி வேலை செய்வோர் மற்றும் ஏழை மக்களுக்கு இவ்வளர்ப்பு மிகவும் உகந்தது. கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பால் பொருட்கள் சம்பந்தமான குடிசைத் தொழில்களின் வளர்ச்சிக்கு இந்த ஆடு வளர்ப்பு பெரும் உதவி புரிகின்றது.
வெள்ளாட்டு இனங்களின் தெரிவு
மலபாரி (டெல்லிச்சேரி) அட்டபாடி, சேனன் மலபாரி கலப்பு இனங்கள் அதிகம் காணப்படுகின்றன.
வயது முதிர்ந்த ஆடுகள் வாங்கும் போது அதன் பால் உற்பத்தித் திறனை அறிந்த பின் வாங்குதல் நலம். ஒரு நாளின் உற்பத்தி அளவு என்பது அடுத்தடுத்த இரண்டு கறத்தலில் பாலின் அளவு 0.5 கிகி அதிகமாக இருப்பதாகும். இந்த அளவுக் குட்டிகள் ஊட்டியது போல மீதமுள்ள அளவாகும்.
இளம் ஆடுகளை வாங்கும் போது அதன் குட்டி ஈனும் உற்பத்தி அளவைப் பார்த்து வாங்குதல் வேண்டும். அதோடு ஆடு எந்த ஒரு உடல் குறைபாடும் இன்றி இருக்கவேண்டும்.
ஆடுகளின் 120 நாள் பால் உற்பத்தி அளவை வைத்தும், 2 வருட வயதில் அது ஈன்ற குட்டிகள் எண்ணிக்கையை வைத்தும் ஆட்டின் செயல்திறனைக் கணிக்கலாம்.

ஆட்டுக் கொட்டில் பராமரிப்பு

ஆடுகளுக்கு எளிமையான கொட்டில் அமைப்பே போதுமானது. வெள்ளாடுகளைப் பொறுத்தவரை கடும் மழை, வெயில், பனி மற்றும் உனி, பேன் போன்ற ஒட்டுண்ணி ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் அளவு எளிய கொட்டகை அமைப்பே போதுமானது. கிராமங்களில் பெரும்பாலும் மரத்தடி (அ) குடிசை நிழலில் தான் ஆடுகளை வளர்க்கின்றனர்.
ஆட்டுக்குட்டிகள் வளர்ந்து ஓடும் வரை ஒரு பெரிய தலைகீழான கூடையைப் போட்டு மூடப்படுகின்றன. பொதுவாக ஆண் மற்றும் பெண் குட்டிகள் ஒன்றாகவே அடைக்கப்படுகின்றன.
வெள்ளாடுகளின் பால், இறைச்சி, உற்பத்திக்கு ஏற்றவாறு உள்ள ஒரு எளிமையான அமைப்பே போதுமானது. நகரங்களில் வசிப்போர் அல்லது அதிக அளவில் ஆடுகளை வளர்ப்போர் நல்ல காற்றோட்டமுள்ள, வடிகால் வசதியுடன், தேவையான இட வசதியுள்ள கொட்டகை அமைத்தல் நலம்.
நீண்ட முகப்பு கொண்ட முறை

இம்முறை மிகவும் குறைந்த செலவில் வெள்ளாடுகளுக்கு ஏற்ற வகையில் அமைக்க வல்லது. ஏற்கெனவே உள்ள கட்டிடத்தில் 1.5 மீட்டர் அகலமும் 3 மீ நீளமும் கொண்ட இடம் இரண்டு ஆடுகளுக்கு போதுமானது. இதில் 0.3 மீ அளவு தீவனத் தொட்டிக்கும் 1.2 மீ ஆட்டிற்கும் இடம் ஒதுக்கப்படுகிறது. 1.5 மீ இடம் இரண்டு பெட்டை ஆடுகளுக்கும் இடையே ஒரு சிறிய பிரிப்புச் சுவருடன் அமைக்கலாம். ஓடு அல்லது அட்டையிலான, குடிசை போன்ற மேற்கூரை அமைக்கலாம். பக்கங்களில் அடைக்காமல் உள்ளே ஆடுகளைக் கயிற்றில் கட்டி வைக்கலாம். அல்லது பெரிய ஜன்னல் போன்ற அமைப்புகளுடன் ஆடுகளைக் கட்டாமலும் விட்டு விடலாம். தரைப்பகுதி மண்ணாக இருப்பதை விட சிமெண்ட் பூச்சாக இருந்தால் குளிர்காலங்களில் ஆடுகளுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.
Goat_housing_Lean to type
ஆடுகளைத் தனித்தனியே பராமரிப்பதானால் 1.8 மீ x 1.8 மீ இட அளவுடன் நல்ல காற்றோட்டமுள்ள 2.5 செ.மீ தடிமனுள்ள ஓட்டைகளுடன் கூடிய பலகையின் பக்கங்களிலும் இரும்பு வாளி போன்ற அமைப்பை தீவனத்திற்காகவும், நீருக்காவும் பயன்படுத்தலாம். இந்த வாளியை தரையிலிருந்து 50-60 செ.மீ அளவு உயரத்தில் வைக்கலாம்.
வெப்பப் பகுதிகளிலும், மழை அதிகமுள்ள பகுதிகளிலும் தரையிலிருந்து சிறிது உயரத்தில் கொட்டகையை அமைத்தல் நலம். அப்போது நல்ல காற்றும் கிடைக்கும், மழைக்காலங்களில் மழை நீர் கொட்டகையிலும் தேங்காமலும், சாரல் அடிக்கமால் இருக்கவும் இம்முறை மிகவும் ஏற்றது. தரையானது மரக்கட்டைகளால் சிறு இடைவெளியுடன் அமைந்து இருந்தால் ஒட்டுண்ணிகள் போன்ற நோய் பரப்பும் கிருமிகள், எளிதில் ஆடுகளைத் தாக்காமல் பாதுகாக்கலாம்.
கூரைகள் மூங்கில், தென்னங்கீற்று, பனை இலை, கோரைப்புல், வைக்கோல் போன்றவைகளில் ஏதேனும் ஒன்று கொண்டு அமைக்கலாம். ஆடுகளின் புழுக்கை, சிறுநீரை வெளியேற்றுவதற்கு சரியான அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
கிடா ஆடுகளின் கொட்டில்

கிடா ஆடுகளுக்கென தனியான கொட்டில் அமைத்து பாதுகாக்கவேண்டும். ஒரு கிடாவிற்கு 2.5 மீ / 2.0 மீ அளவுள்ள நீர் மற்றும் தீவனத் தொட்டியுடன் அமைந்த கொட்டில் போதுமானது, இரண்டு கிடாக்களை ஒரே கொட்டிலில் அடைத்தல் கூடாது. அதுவும் குறிப்பாக இனச்சேர்க்கைக் காலத்தில் அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்வதைத் தவிர்க்க, தனித்தனியே அடைப்பதே சிறந்தது.
தனி அறைக் கொட்டில்

0.75 மீ அகலமும் 1.2 மி நீளமும் கொண்ட மரத்தால் அல்லது உலோகத்தாலான ஒரு தனி அறை போன்ற பகுதி தனிக்கொட்டில் எனலாம். அதுவே இட அளவு 2 மீ ஆக இருந்தால் ஆடுகள் நீண்ட நேரம் தங்க வசதியாக இருக்கும்.
சினை ஆடுகள் மற்றும் குட்டிகுளுக்கான அறை          

குட்டிகள் தனியான அறையில் கட்டப்படாமல் சுதந்திரமாக அதே சமயம் தாய் ஆடுகளை அனுமதியின்றி அணுகாதவாறு வைக்கப்பட்டிருக்கவேண்டும். குட்டிகளின் கொட்டில் உயரம் 1.3 மீ கதவும், சுவர்களும் இருக்கவேண்டும். அல்லது கூடை, உருளை போன்ற அமைப்புகளைப்  பயன்படுத்தலாம். 1.8 மீட்டர் அளவுள்ள இடத்தில் 10 குட்டிகள் வரை அடைக்கலாம். இந்த கொட்டில் கன்று ஈனும் சமயத்தில் பெட்டை ஆடுகளைச் சுதந்திரமாக விடவும் உதவும். இம்முறையில் கொட்டகை அமைப்புச் செலவு மற்றும் ஆட்கூலிகள் குறையும்.
Goat_Goat and Kid Stall
மேய்ச்சல் / திறந்த வெளி

12 மீ x 18 மீ அளவுள்ள திறந்த வெளி அமைப்பானது 100-125 ஆடுகளுக்குப் போதுமானது. இந்தத்திறந்த வெளியானது நன்கு கம்பிகளால் பின்னப்பட்ட வேலிகளைக் கொண்டிருக்கவேண்டும். நிழல் தரும் மரங்கள் ஆங்காங்கு வளர்க்கப்பட்டிருக்கவேண்டும். நிறைய கம்பிகள் கொண்டு வேலி நன்கு பின்னப்பட்டதாக இருக்கவேண்டும். ஏனெனில் ஆடுகள் வேலிகளில் உராயும் தன்மை கொண்டவை. கூர்மையான கம்பிகள், நீட்டிக்கொண்டு இருந்தால் அவை ஆடுகள் உரசும் போது காயங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 1 x 1 மீ அளவுள்ள இரும்பாலான 60 செ.மீ உயரமுள்ள உருளை போன்ற அமைப்புகள்,  திறந்தவெளி மைதானத்திற்கு ஏற்றவை.
பிரித்து வைக்கும் கொட்டில்

மந்தை பெருகப் பெருக இடப்பற்றாக்குறை ஏற்படலாம். இதற்கென ஆடுகளின் எண்ணிக்கை அதிகமாகும் போது பிரித்து வைப்பதற்கென 3.6 மீ x 5 மீ அகலமுள்ள ஒரு தனிக்கொட்டில் அவசியம். இதை இரண்டு அல்லது மூன்று அறைகளாகப் பிரித்து, ஒவ்வொன்றிலும் நீர் மற்றும் தீவனத் தொட்டில்கள் அமைக்கவேண்டும்.
தீவனத் தொட்டி

வெள்ளாடுகள் கீழே விழுந்த தீவனங்களையோ, புற்களையோ சாப்பிடாது. எனவே 5 செ.மீ தடிமனுள்ள மரப்பலகையாலான ஒரு பெட்டியை தீவனம் கட்டும் கயிற்றின் கீழே வைக்கவேண்டும். ஆடுகள் தீவனம் சாப்பிடும் போது கீழே விழும் துண்டுகளை இப்பெட்டியில் சேகரித்தால், மண்படாத அவற்றை மீண்டும் ஆடுகள் உண்டுவிடுவதால், தீவனம் வீணாகாமல் தடுக்கப்படுகிறது.
மேய்ச்சல் முறைகள்

கயிற்றில் கட்டி மேய்த்தல்


குறிப்பிட்ட இடத்தில் சில ஆடுகளை மேய விடுவதற்கு, இம்மேய்ச்சல் முறையே சிறந்தது. கொட்டிலின் வெளியில் வைத்து குறைந்த எண்ணிக்கையுள்ள அடுகளை மரத்திலோ அல்லது வேறு சில கட்டைகளிலோ கயிறு கொண்டு கட்டி மேய்க்கும் முறையில் அந்த இடங்களின் புற்கள் நன்கு மேயப்படுகின்றன.
இம்முறையில் காலை மற்றும் மாலை வேளைகளில் மேய்த்தல் சிறந்தது. கயிற்றின் நீளம் 35-50 செ.மீ நீளம் இருக்கவேண்டும். மற்ற மதிய நேரங்களில் கொட்டிலில் அடைத்து வைக்கலாம். இம்முறையில் நோய்களைப் பரப்பும் ஒட்டுண்ணிகள் போன்றவை பரவுவது குறைவு.
மேய்ச்சல் முறை

8-10 மணி நேரம் மேய்ச்சலுக்கு அனுப்பி இரவு நேரங்களில் மட்டும் பட்டிகளில் அடைப்பது.
கொட்டில் முறை

நாள் முழுவதும் கொட்டகையினுள் அடைத்து தீவனம் கொடுத்து வளர்ப்பதாகும். இம்முறையில் ஆழ்கூளங்களை போட்டு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை எடுத்து விட்டு புதிய ஆழ்கூளத்தை நிரப்பினால் சிறுநீர் மற்றும் சாணத்தின் அமோனியா வாயு ஆடுகளை அதிகம் பாதிக்காது.
மேய்ச்சல் கலந்த கொட்டில் முறை

4-5 மணி நேரம் வரை மேய்ச்சலுக்கு அனுப்பிப் பிறகு கொட்டகையில் வைத்துத் தேவையான பசுந்தீவனங்களையும், அடர் தீவனங்களையும் அளிக்கவேண்டும்.
பயிர் வயலில் விட்டு மேய்த்தல்

மலைத்தோட்டப் பயிர்கள் அல்லது அறுவடை முடிந்த வயல்களில் ஆடுகள் மேயச்சலுக்கு விடப்படுகின்றன. இதனால் ஆட்டின் கழிவுகள் வயல்களில் விழுவதால் மண்ணிற்கு நல்ல சத்துக் கிடைக்கிறது.

கருத்துகள் இல்லை: