யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

திங்கள், 20 ஜனவரி, 2014

வெள்ளாடு வளர்ப்


வெள்ளாடு வளர்ப்பு - சில பயனுள்ள குறிப்புகள்

 
தலைசேரி, சேலம் கருப்பு ரக வெள்ளாடுகள் லாபம் கொடுக்கக்கூடியதாகும். தலைச்சேரி ஆடுகளின் பெயர்காரணம் - இது கேரள மாநிலத்திலுள்ள தலைச்சேரியை பூர்வீகமாக்கொண்டதால் இந்த பெயர் பெற்றது. இந்த ரக ஆடுகள் தேவைப்படுவோர் கேரள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பெற முடியும். நம் தமிழிகத்தில் ஒரு சில கால்நடைப் பண்ணைகளில் இந்த ரக ஆடுகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இந்த தலைச்சேரி ரக ஆடுகளை பெற இந்த கால்நடைப் பண்ணைகளில் முன் பதிவு செய்து காத்திருக்க வேண்டும். உடனடியாக வேண்டுவோர் கேராளவிற்கு சென்று உடனே இந்த ரக ஆடுகளை வாங்கலாம். சேலம் கருப்பு ரகத்தை சார்ந்த ஆடுகளை தமிழகமெங்கும் எந்த பகுதிகளில் வளர்க்ககூடிய வகையைச் சார்ந்தது. சேலம் மாவட்டத்தில் மேச்சேரி, கொளத்தூர், மேட்டூர், வெப்பூர் ஆகிய ஊர்களில் இந்த ஆடுகள் விலைக்கு கிடைக்கும்.


ஆட்டுப்பண்ணைகள் வைக்க விரும்புபவர்கள் முதலில் அதற்கான முறையான பயிற்சி பெற வேண்டும். அதற்கு உங்களுக்கு அருகில் உள்ள கால்நடைமருத்துவ ஆராய்ச்சி நிலையங்களில் நடத்தப்படும் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சியில் கலந்துகொண்டு, அங்கே கிடைக்கும் பயிற்சியின் வாயிலாக நீங்கள் ஒரு சிறந்த வெள்ளாடு வளர்ப்பாளராக பரிமளிக்க முடியும்.
 

ஆட்டுப்பண்ணை வைக்க தற்போதைய சூழலில் 10 ஆடுகள் கொண்ட பண்ணையை அமைப்பதற்கு சுமார் 1 லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகும்.

 
வகைப்படுத்தப்பட்டு தனியாக பட்டியில் அடைத்து வைக்கப்பட்ட ஆடுகள்.

ஆடு வளர்ப்பது என்று நீங்கள் முடிவெடுத்துவிட்டால் அதற்கான மேய்ச்சல் நிலம் மற்றும் தீவன வகைகளை பண்ணை ஆரம்பிப்பதற்கு முன்பே தயார் செய்ய வேண்டும். ஆடுகளை வாங்குவதற்கு முன்பு அதற்குத் அடிப்படைத் தேவையான தீவனத்தை முதலில் தயார் செய்து கொள்ளவேண்டும். தீவன வகைகளை என்று எடுத்துக்கொண்டால் சுபா புல், அகத்தி, கல்யாண முருங்கை, கிளைரிசிடியா, வேம்பு என ஐந்து மரங்களாவது குறைந்த பட்சமாக இருக்கவேண்டும்.
 
தலைசேரி இன குட்டிகளுக்கென தனிப்பட்ட கொட்டகை..

இத்தீவன வகை மரங்களின் வளர்காலம் சுமார் இரண்டு ஆண்டுகள்.  வெள்ளாடுகளைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டாம். அது பலசுவை விரும்பிகள், பல்வேறு புற்களையும், இலைதழைகளையும் தின்று வளர்பவை.. எனவே தொடர்ந்து ஒரே வகையான தீவனத்தை கொடுப்பதற்கு மாற்றாக சில வகைகளை தீவனங்களை மாற்றி மாற்றி கொடுத்தால் அதற்கும் வயிறு நிரம்பிய திருப்தி இருக்கும். எனவே முதலில் இதை நீங்கள் உங்கள் நிலத்தில் வளர்த்துக்கொண்டு பிறகு ஆடுகளையும், பண்ணையையும் தயார் செய்யலாம்.
 
தீவன வகைகள்
இன்றைய கால கட்டத்தில் விற்கும் விலைவாசியில், எதுவும் விலைகொடுத்து வாங்கினால் அது இலாபத்தை தராது. எனவே முடிந்தளவு ஆடு வளர்ப்புக்குத் தேவையான தீவனங்களை நாமே உற்பத்தி செய்து கொடுத்தால் அதில் லாபம் பார்க்க முடியும்.

 
தீவன வகைகள்

ஆடு வளர்ப்பது என்று முடிவாகிவிட்டது. எப்படித் தொடங்குவது?

இதற்கு அரசும், அரசு சார்ந்த நிதி நிறுவனங்களும் வங்கிக் கடன் கொடுக்கிறது. வங்கிக் கடன் கொடுக்க முதலில் திட்ட அறிக்கை கேட்பார்கள்.. ஆடு வளர்ப்பிற்கான திட்ட அறிக்கையை, நீங்கள் நான் முன்பே கூறியபடி உங்கள் அருகாமையிலுள்ள கால்நடை ஆராய்ச்சி நிலையத்தை அணுகி, திட்ட அறிக்கையைப் பெற முடியும். ஆடு வளர்ப்பிற்கான பயிற்சியையும் அவர்களிடமே பெற்று , வேண்டிய விபரங்களையும், உதவிகளை பெற முடியும்.

 

இந்த கால்நடை ஆராய்ச்சி நிலையத்தால் நடத்தப்படும் வெள்ளாடு பயிற்சியில் கலந்துகொண்டு அவர்கள் கொடுக்கும் சான்றிதழ்களையும், மாதிரி திட்ட அறிக்கையும் உங்களுக்கு வங்கிக்கடன் வாங்க உதவியாக இருக்கும்.
மேலும் சில குறிப்புகள்: ஆடு வளர்ப்பில் முதலிடம் பெறுவது ஈரோடு மாவட்டம். இரண்டாம் திருநெல்வேலி. மூன்றாம் இடத்தில் சேலம் மாவட்டமும் இருக்கிறது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி, சிவகங்கை என பத்து மாவட்டங்களில் சிறப்பாக ஆடு வளர்ப்பு தொழில் நடந்துவருகிறது.

மேய்ச்சல் நிலங்கள் ரியல் எஸ்ட்டேட் போன்ற தொழில்களால் அருகி வருவதால் ஆடு வளர்ப்போர் , வேறு தொழில்களுக்கு மாற வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இதுபோன்றதொரு பண்ணை அமைத்து ஆடுவளர்ப்பதன் மூலம் தங்களின் தொழில்களைத் தொடரவும், வருவாயை இழக்காமலும் பார்த்துக்கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் பெரிய ஆட்டுச் சந்தைகள்
 : மேச்சேரி, மோர்பாளையம், திருச்செங்கோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஆத்தூர், திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம், தூத்துக்குடி மாவட்டம் சீவலப்பேரி, மணியாச்சி

மேற்கண்ட இடங்கள் அனைத்தும் அதிகளவு ஆடுகள் விற்பனை செய்யப்படுகிற பிரபலமான ஆட்டுச் சந்தைகளாகும்

கருத்துகள் இல்லை: