யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

ஞாயிறு, 28 ஜூலை, 2013

செம்மறியாடு மற்றும் முயல்களுக்கு பயனுடைய புல் மற்றும் தீவனப்பயிர்கள்

தென் மண்டல ஆராய்ச்சி மையம், தமிழ்நாட்டில் கொடைக்கானல் அருகில் உள்ள மன்னவனூர் கிராமத்தில் 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு உயர் ரக ஆடுகளை வளர்த்து அவற்றின் மூலம் தரமான செம்மறி ஆடுகளை உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

இங்குள்ள மேய்ச்சல் நிலங்களில் முயல் மற்றும் ஆடுகளுக்கு தேவையான உயர் ரக புற்களையும் உயர் ரக தீவனப் பயிர்களையும் வளர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதன்முதலாக 1973 ஆம் ஆண்டில் ஏறக்குறைய 56 ஹெக்டேர் நிலங்களில் களைச் செடிகள், புதர்கள் மற்றும் தடிமனான புல் புதர்கள் எரிக்கப்பட்டு நிலம் தயார் செய்யப்பட்டது. இந்நிலத்தில் சீமைக்கரையான் (Kikiyu), சிவப்பு குளோவர், குதிரை மசால் மற்றும் காக்ஸ்புட் என்னும் புற்களும், தீவனப்பயிற்சிகளும் பயிரிடப்பட்டன. இத்துடன், காய்கறி வகைகளான காரட், முட்டைகோஸ் மற்றும் பீட்ரூட் ஆகிய பயிர்கள் வளர்க்கப்பட்டன. இப்பயிருக்குத் தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் தேவையான உழவியல் செயல்கள் செய்யப்பட்டன. இதுவரை மேற்கொண்ட ஆராய்ச்சிகளினால் மன்னவனூர் ஒரு வளமான பூமி என அறியப்படுகிறது. இதில் சிறந்த முறையில் குறைந்த செலவுகளுடன் கீழ்க்காண்கின்ற பல்வகையான புல் மற்றும் இதர தீவனப் பயிர்களை விளைவித்து அதன் மூலம் லாபகரமான ஆடு மற்றும் முயல் வளர்ப்பை விவசாயிகள் மேற்கொள்ள முடியும்.

பயிர்களின் வளர்ச்சித் தன்மைகள் : பங்கோலா புல் (படர்புல்) (Pangola grass) :

இது படர்ந்து வளரக்கூடிய குறைந்த இலைகளையுடைய மற்றும் பனியினால் தாக்கப்படக்கூடிய புல்வகை என அறியப்பட்டது.

பாஸ்பேலம் டைலேட்டேட்டம் (அகன்ற இலைப்புல்) (Paspalum dilatatum) :

இது நல்ல இலை வளர்ச்சியும், தரையோடு தொட்டுக்கொண்டு வளரும் தன்மையும் கூடியது. இதன் இலை அகன்றும், மிருதுவாகவும், பனி எதிர்ப்பு சக்தியுடையதாகவும், எப்போதும் பசுமையுடனும் இருப்பதால் இது மன்னவனூர் நிலத்தில் ஓர் உபயோகமான புல் என அறியப்படுகிறது.

கினியா புல் (Guinea grass) :

இந்த மேல்நாட்டு புல் வகை மிவும் தடிமனாகவும், பனிப்பொழிவைத் தாங்க முடியாததாகவும் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

ஸ்டைலோசான்தஸிஸ் கிராசில்லிஸ் (Stylosanthesis gracilis) :

இத்தீவனப் பயிர் வளர்ச்சி குறைவாக இருந்த போதும் வருடம் முழுவதும் பசுமையாக இருக்கும்.

செடோரியா புல் (Setaria Sp.) :

இப்புல்லின் இலைகள் நீண்டும், அகன்றும், இளமையாகவும், மிருதுவாகவும், வளர்ந்த தன்மையுடையதாகவும், அதிக விதைகளை உருவாக்கும் தன்மையுடையதாகவும், பனி எதிர்ப்பு தன்மையும் இருப்பதால் இது மிகவும் பொருத்தமான புல் வகை என ஆய்வு மூலம் கண்டறியப்பட்டது.

சில்வர் வெள்ளி இலை டெஸ்மோடியம் (Silverleaf desmodium) :

இந்த தீவனப்பயிர், மழைக்காலத்தில் மிக அதிக அளவில் வளர்ந்து அதிகமான இலைகளுடன் எளிதில் மேய்ப்பு நிலத்தில் பரவக்கூடியது. ஆடுகள் இதை மிகவும் விரும்பி உட்கொள்கின்றன. ஆயினும், இது பனி எதிர்ப்பு தன்மையற்ற தீவனப்பயிர்.

டாலிகாஸ் ஆக்சில்லரீஸ் (Dolichos axilaries) :

இத்தீவனப்பயிர் மிக அதிக அளவில் வளர்ந்து, அகலமான மற்றும் மிருதுவான இலைகொண்டது. மேய்ச்சல் நிலத்தில் இவை நன்கு வளரும். ஆயினும், பனி எதிர்ப்பு திறன் குறைவு.

ஓட்ஸ் (Oats) :

இத்தீவனப் பயிர் அகன்ற மிருதுவான இலைகளைக் கொண்டதாகவும், நல்ல உயரத்துடன் வளர்கிறது. ஒரு முறை பயிரிட்டால் 3 அல்லது 4 முறை இவற்றிலிருந்து இலைகளை அறுவடை செய்து ஆடு மற்றும் முயல்களுக்கு கொடுக்கலாம். அவைகள் இத்தீவனத்தை மிகவும் விரும்பி சாப்பிடுவதால் அவற்றின் வளர்ச்சி அதிகமாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இது பனி எதிர்ப்பு திறன் உடையது.

குதிரை மசால் (Lucerne / Alfalfa) : 

பனி எதிர்ப்புத் தன்மை உடையது. நாடு முழுவதும் அதிக புரதசத்து வாய்ந்த தீவனப் பயிராக அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு முறை பயிரிட்டால் தொடர்ந்து அறுவடை செய்து கால்நடைகளுக்கு கொடுக்கலாம். இது அடர் தீவனத்திற்கு சமமான உணவாகும்.

அடைலோசியா (Atylosia) : 

இத்தீவனப் பயிர் பனி எதிர்ப்பு தன்மையுடையதாகவும், அதிகமான மற்றும் மிருதுவான இலைகளையுடையதாகவும் அறியப்படுகிறது. இவற்றின் இலைகளை ஆடும், முயலும் மிகவும் விரும்பி உட்கொள்கின்றன. அதிக விதைகள் கிடைப்பதால் இவற்றை மிக சுலபமாக இனவிருத்தி செய்யலாம்.

மல்பரி (Mulberry) :

பட்டுப் பூச்சி வளர்ப்பிற்கு பயன்படும் இச்செடிகளின் இலைகள் முயலிற்கும், ஆட்டிற்கும் மிக பயனுள்ள உணவாகும். மல்பரி மர வகையாக இருந்தபோதிலும், அவ்வப்போது அதிலிருந்து கிளைகளையும், இலைகளையும் பறித்து ஒரு புதர் போல் வளர்க்க முடியும். இதுவும் பனி எதிர்ப்பு திறன் கொண்ட அகன்ற மற்றும் மிருதுவான இலை கொண்ட தீவனப் பயிராகும்.

நேப்பியர் புல் (Napier grass) :

இத்தீவனப் பயிர் நாட்டில் எல்லா பகுதிகளிலும் பரவலாகப் பயிர்செய்யப்பட்டு கால்நடைகளுக்கு அளிக்கப்படுகிறது. இது ஓர் அடர்த்தியான புதராக நீண்ட மிருதுவான இலைகளை உடையதாக உள்ளது. ஒரு முறை பயிரிட்டால் 4 முதல் 5 வருடங்களுக்கு தொடர்ந்து அறுவடை செய்யலாம். மன்னவனூரில் முதன்முறையாக பயிரிடப்பட்டதில் இதன் பனி எதிர்ப்பு தன்மை சிறிது குறைவாக உள்ளதென அறியப்பட்டுள்ளது. இதன் இலைகளை ஆடும், முயலும் மிகவும் விரும்பி உட்கொள்கின்றன.

குதிரை மசால் மரம் (Tree Lucerne) :

இந்த மரக்கன்றுகள் ஊட்டியிலிருந்து எடுத்து வரப்பட்டு வளர்க்கப்பட்டது. இது நன்கு உயரமாகவும், அதிகமான கிளைகளையும் கொண்டதாக உள்ளது. இதன் இலைகள் சிறியதாகவும், மிருதுவாகவும் உள்ளதால் முயல் இதை விரும்பி உட்கொள்கிறது. இதில் அதிக விதைகள் உற்பத்தியாவதால் இப்பயிரை எளிதில் இனி விருத்தி செய்யலாம்.

தொடர்பு கொள்ள :

பொறுப்பு அலுவலர்
தென் மண்டல ஆராய்ச்சி மையம்
மன்னவனூர் (அஞ்சல்)
கொடைக்கானல் - 624 103
திண்டுக்கல் மாவட்டம்.
இறைச்சிக்காகவும், தோல் மற்றும் உரோமத்திற்காகவும் முயல்களை வளர்ப்பது உலகின் பல்வேறு நாடுகளில் முக்கியத்துவம் பெற்று வருகின்றது. நமது நாட்டிலும், முயல் வளர்ப்பதற்கான சாத்தியமான அம்சங்கள் நிறைய உள்ளன. மக்கள்தொகைப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப இறைச்சி உற்பத்தியை பெருக்கிட முயல் வளர்ப்பு மிகவும் ஏற்ற பண்ணைத் தொழிலாகும். முயல் கிராமப் புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வளர்க்கலாம். இவ்வளவு சிறப்பம்சங்கள் இருந்தும் ஏன் பலரும் முயல் வளர்க்க முன்வருவதில்லை என்பதை ஆராய்ந்தால் கீழ்க்கண்ட காரணங்கள் தெரிகின்றன. 

· முயல்களை வீட்டில் வளர்க்கக் கூடாது என்ற தவறான கருத்து மக்களிடையே நிலவுகிறது. 

· முயல் வளர்த்தால் வீட்டில் சண்டை சச்சரவுகள் வரும் என்ற தவறான கருத்து.

· முயலினை இறைச்சிக்காக வெட்ட அஞ்சுவது / பரிதாபப்படுவது. 

· முயல் பண்ணைத் தொடங்கிட போதுமான உதவிகள் கிட்டாமை. 

· விற்பனை வசதிகள் திறம்பட இல்லாத நிலை. 

· மானியத் திட்டங்கள் எதுவும் இல்லாத நிலை. 

மேற்கூறிய காரணங்கள் களையப்பட்டால் சிறப்பம்சங்கள் நிறைந்த முயல் வளர்ப்பு வெகு விரைவாக பிரபலம் அடையும். 

முயல் இனங்கள் மற்றும் சாதகமான சூழ்நிலை : 

ஐம்பதிற்கும் மேற்பட்ட முயல் இனங்கள் இருக்கின்றன. குறிப்பிட்டு சொல்லக்கூடிய இனங்கள் வெள்ளை ஜெயண்ட், சாம்பல் ஜெயண்ட், நியூசீலாந்து வெள்ளை மற்றும் அங்கோரா இனங்கள். இவற்றில் அங்கோரா இன முயல்களை உயர்தர உரோமத்திற்காக குளிர்ந்த மற்றும் மலைப் பிரதேசங்களில் வளர்க்கலாம். 

இறைச்சி முயல்களை மலைப் பிரதேசங்களிலும், சமவெளிப் பகுதிகளிலும் வளர்க்கலாம். தட்பவெப்பநிலை 36 ஊ வரைக்கும் இருக்கலாம். ஈரப்பதம் காற்றில் 70 சதவீதத்திற்கும் மேல் இருக்கக்கூடாது. அங்கோரா இன முயல்களை வெப்பம் குறைந்த (15-20 C) மலைப் பிரதேசங்களில் மட்டும் வளர்க்கச் சிறந்தது. 

முயல் இருப்பிடம் மற்றும் வளர்ப்பு :

முயல்களை கூண்டுகளில் வளர்ப்பதே சிறந்தது. (ஆழ்கூள முறையிலும் வளர்க்கலாம்). மூலதனம் குறைவான மரக்கூண்டுகளிலும் வளர்க்கலாம். வளர்ந்த ஆண் முயலுக்கு (1.5 x 1.5 x 1.5') அளவுள்ள கூண்டும், பெண் முயலுக்கு (2.0 x 2.5 x 3.0') அளவுள்ள கூண்டும் ஏற்றது. இதில் தீவனம் மற்றும் தண்ணீர் கொடுப்பதற்கு சிறிய பாத்திரம் அல்லது கொள்கலன்களை கட்டிவிட வேண்டும். கூண்டுகளை தினந்தோறும் பிரஷ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தீ உமிழி கொண்டு சுத்தம் செய்யலாம். முயல் சாணம் கூண்டுகளில் தங்காவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். 

முயல் மிகவும் சாதுவான பிராணியாதலால், பள்ளி சிறுவர்கள், பெண்கள், வயதானவர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் வளர்க்க ஏதுவானது. முயல் வளர்க்க ஆரம்பிப்போர் முதலில் ஓர் ஆண் மற்றும் மூன்று பெண் முயல்கள் கொண்ட சிறு குழுவாக ஆரம்பிக்கலாம். முயல் வளர்ப்பில் உள்ள தொழில்நுட்பங்களை அறிந்த பின்னரே அதிக அளவில் முயல் வளர்க்க எண்ண வேண்டும். கொல்லைப் புறத்தில் வளர்க்க 1 ஆண் மற்றும் 3 பெண் முயல்கள் போதும். இதிலிருநது வாரந்தோறும் ஒரு கிலோ இறைச்சி கிடைக்கும். இது குடும்ப தேவைக்கு போதுமானது. கொல்லைப் புறத்தில் முயல் வளர்க்கும் சமையலறைக் கழிவுகள் மற்றும் பசுந்தீவனம் கொண்டே பராமரிக்கலாம். 

முயல் வளர்ப்பின் சிறப்பம்சம் : 

பசுந்தீவனத்தை சிறந்ததொரு இறைச்சியாக மாற்றுவதில் முயலுக்கு நிகர் வேறெதும் இல்லை. முயல் இறைச்சி மருத்துவ குணங்கள் கொண்டது. கொலஸ்ட்ரால் மிக மிகக் குறைவு. இருதய நோயாளிகளும், முதியோர்களும் ஏற்கக் கூடிய இறைச்சி. முயல்களுக்கு தடுப்பூசிகள் ஏதும் தேவையில்லை. குறைந்த சினைக்காலம், அதிக குட்டிகள் ஈனும் திறன், துரித வளர்ச்சி அதிக தீவன மாற்றுத்திறன் ஆகிய குணங்கள் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள். நிச்சயம் லாபகரமான பண்ணைத் தொழில். ஆரம்பத்தில் சிறிய அளவில் பண்ணை அமைத்து, நல்ல அனுபவம் பெற்ற பின்னர் பெரிய அளவில் தொடங்கலாம். ஒரு நபர் 500 முயல்கள் வரைக்கும் பராமரிக்க முடியும். முன்னேற்றம் தரும் சிறந்ததொரு பண்ணைத் தொழில் முயல் வளர்ப்பு.

கிடைக்குமிடம் : 

கொடைக்கானல் தாலுக்கா, மன்னவனூரில் இயங்கிவரும் மத்திய அரசுப் பண்ணையில் இனவிருத்திக்கான முயல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. முன்பதிவின் பேரில் பெற்றுக் கொள்ளலாம். இறைச்சியின முயல்கள் வெள்ளை ஜெயண்ட், சோவியத் சின்சில்லா மற்றும் உரோம இன முயல் அங்கோரா ஆகியன உள்ளன. முயல் வளர்ப்பதற்கான பயிற்சியும், தொழில்நுட்ப உதவிகளும் வழங்கப்படுகின்றன. நீலகிரி மாவட்டம், சாண்டிநல்லா என்ற இடத்தில் இயங்கிவரும் ஆட்டின இனவிருத்தி ஆராய்ச்சி நிலையத்திலிருந்தும், காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் கால்நடை ஆராய்ச்சி நிலையத்திலிருந்தும் கூட முயல்களை இன விருத்திக்காக வாங்கலாம். 

வங்கியில் கடன் உதவி : 

அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் முயல் வளர்க்க கடன் உதவி பெறலாம். கடன் பெறுவதற்கு முன், வளர்ப்பதற்கான செலவுகள் மற்றும் நிகர லாபம் அடங்கிய திட்டத்தை சமர்ப்பித்து கடன் பெறலாம். ஆயுள் காப்பீடு வசதியும் முயல்களுக்கு உள்ளது.

முயல்களை இனவிருத்திக்காக விற்பனை செய்யலாம். உபரியான முயல்களை இறைச்சிக்குப் பயன்படுத்தலாம். உயிர் எடையில் குறைந்தபட்சம் 50ரூ இறைச்சி கிடைக்கும். முயல் தோலை பதப்படுத்தி, கைவினைப் பொருட்கள் செய்யலாம். இதில் தொப்பி, மேலாடைகள், பர்ஸ், சாவிக் கொத்து, கவர் முக்கியமானவை. முயல் எரு சிறந்த எருவாக கருதப்படுகிறது. இதிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கலாம். சொந்த நிலம், தண்ணீர் வசதி, பசுந்தீவன வசதியுடைய விவசாயிகள், முயல் வளர்ப்பை ஆரம்பித்தால் நிச்சயம் கூடுதல் வருவாய் கிடைக்கும். நமது நாட்டின் இன்றைய இறைச்சித் தேவையை பூர்த்தி செய்யலாம். 

முயல் வளர்ப்பு - ஆதாயம் : 

இரண்டு ஆண் முயல்கள் மற்றும் பத்து பெண் முயல்களடங்கிய சிறிய முயல் பண்ணை அமைக்க ஆகும் செலவினங்கள் மற்றும் வருவாய் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

அனுமானங்கள் :

· கூண்டுகளில் அடைக்கப்பட்ட முயல்கள் 500 எண்ணிக்கை வரையில் ஒரே நபர் அன்றாடம் பராமரிக்க முடியும் என்பதால் கூலிக்கு தனியாக ஆள் தேவையில்லை. 

· ஒவ்வொரு பெண் முயலிடமிருந்து வருடத்திற்கு 30 குட்டிகள் பெறலாம். 

· இரண்டு ஆண் முயல்கள் மற்றும் பத்து பெண் முயல்களடங்கியது ஒரு குழுவாகும். 

· சராசரியாக பத்து பெண் முயல்களை இனச்சேர்க்கை செய்தால் எட்டு முயல்கள் ஒவ்வொரு முறையும் சினையாகும். 

· குட்டிகளின் எண்ணிக்கை வருடத்திற்கு 240 (8 முயல்கள் ஒ 30 குட்டிகள்)

· குட்டிகளில் இறப்பு விகிதம் 10ரூ (24 குட்டிகள்)

· முயல் தீவனத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.13.00

· குட்டிகளை விற்கும் வயது - 3 மாதங்கள்

· குருணைத் தீவனம் உட்கொள்ளும் அளவுகள் (கிலோ)

ஆண் முயல்கள் 2 x 100 கி x 365 நாட்கள் = 73
பெண் முயல்கள் 10 x 150 கி x 365 நாட்கள் = 548
குட்டி முயல்கள் 216 x 50 கி x 60 நாட்கள் = 648
மொத்தம் = 1269

1. நிரந்தர மூலதனம் (ரூபாயில்)

முயல் கொட்டகை அமைக்கச் செலவு 
400 சதுர அடி. ஒவ்வொரு சதுர அடிக்கும் ரூ.25.00 வீதம் 10,000.00

முயல் கூண்டுகளின் விலை 
10 தனிக் கூண்டுகள் (1.5 x 1.5 x 1.5') ஒன்று ரூ.200 வீதம் 2,000.00

குட்டிகள் போடுவதற்கு 
கூண்டுகள் (2 x 2.5 x 3.0') 20 எண்ணிக்கை ஒன்று ரூ.400 வீதம் 8000.00

தீவன கலன்கள் 
50 எண்ணிக்கை ஒன்று ரூ.5.00 வீதம் 250.00

தண்ணீர் தட்டுகள் 
50 எண்ணிக்கை ஒன்று ரூ.5.00 வீதம் 250.00

இனவிருத்திக்கான 2 ஆண் = 10 பெண் முயல்களின் விலை ரூ.180 வீதம் 2160.00

இதர பொருட்கள் (தீ உமிழி, பக்கெட் முதலியன) 580.00

மொத்தம் 23,240.00

2. நிரந்தரச் செலவினங்கள் 

முதலீட்டிற்கு வட்டி 12% ஆண்டிற்கு = 2760.00
கொட்டகை மற்றும் கூண்டுகள் 
தேய்மானச் செலவு 12% ஆண்டிற்கு = 2460.00

மொத்தம் = 5220.00

3. நடைமுறைச் செலவுகள் 

அடர் தீவனத்தின் விலை ரூ.13.00
கிலோ வீதம் 1270 கிலோவிற்கு = 16510.00
மருத்துவச் செலவு = 1000.00
இதரவ செலவுகள் 
(சுண்ணாம்பு, தேங்காய் நார் முதலியன)= 1490.00

மொத்தம் = 19000.00

4. மொத்த செலவினங்கள் (2+3) = 24220.00

வருவாய் விவரங்கள் 

216 முயல் குட்டிகளை மூன்று மாத வயதில் ரூ.150 வீதம் விற்பதன் மூலம் 32,400.00
கழிக்கப்பட்ட முயல்களின் மூலம் 275.00
இறந்த குட்டிக்ளின் தோல் விலை ரூ.5 வீதம் 120.00
முயல் சாணத்தின் விலை 500.00
தீவனச் சாக்குகள் விலை 250.00

மொத்த வருவாய் 33,545.00

நிகர லாபம் 

ஆண்டு மொத்த வருவாய் 33,545.00

மொத்த செலவினங்கள் (நிரந்தரச் செலவு + நடைமுறைச் செலவு) 24,220.00

நிகர லாபம் ஒரு ஆண்டிற்கு 9,325.00

குறிப்பு :ஒரு நபரின் முழு நேர வேலை வாய்ப்பிற்கு குறைந்தபட்சம் 20 ஆண் முயல்கள் +100 பெண் முயல்கள் வளர்க்கும் பொழுது ஒரு ஆண்டிற்கு நிகர லாபம் ரூ.93,250.00 கிடைக்கும். 

தொடர்பு கொள்ள :

தென் மண்டல ஆராய்ச்சி மையம்
மத்திய செம்மறியாடு உரோம ஆராய்ச்சி நிலையம்
(இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்)
மன்னவனூர்
கொடைக்கானல் - 624 103
திண்டுக்கல் மாவட்டம்