யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

பாதி விலையில் வான்கோழி குஞ்சுகள்: சுதந்திர தின உரையில் அமைச்சர் சந்திரகாசு

பாதி விலையில் வான்கோழி குஞ்சுகள்: சுதந்திர தின உரையில் அமைச்சர் சந்திரகாசு
காரைக்கால்: வறுமைக்கோட்டிக்கு கீழ் உள்ள குடும்பங்களூக்கு பாதி விலையில் வான்கோழி குஞ்சுகள் வழங்கப்படவுள்ளது என காரைக்காலில் நடைபெற்ற சுதந்திர தின உரையில் அமைச்சர் சந்திரகாசு அறிவித்தார்.
காரைக்கால் அரசு விளையாட்டுத் திடலில் இன்று காலை 9.05 மணிக்கு நாட்டின் 67ஆம் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில், புதுச்சேரி வேளாண் அமைச்சர் சந்திரகாசு தேசியக் கொடியை ஏற்றி வைத்த்உ காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், காவலர்கள், தீயணைப்புத்துறை, பள்ளி, கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து, கல்வித்துறை, காவல்துறை, தொழிலாளர் துறை மற்றும் பல்வேறு தனியார் அறக்கட்டளைகள் சார்பில் பரிசுகள் வழங்கி அமைச்சர் சந்திரகாசு சுதந்திர தின உரையாற்றினார்.
சுதந்திர தின உரையில் அமைச்சர் சந்திரகாசு பேசியதாவது:
"தலைவர் காமராஜரின் பெயரில், முதல்வர் ரங்கசாமி தலைமையிலான இந்த அரசு, மக்களுக்கு நல்ல குடிநீர், சாலை, மின்சாரம் மற்றும் பல்வேறு உள் கட்டமைப்பு வசதிகளை செய்து வருகிறது. காரைக்காலை ரயில், துறைமுகம், விமானத் தளம் கொண்ட சிறப்பான சுற்றுலாத் தலமாக மாற்றி வருகிறோம்.
வேளாண்துறை சார்பில், விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை நெல், உரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கால்நடை துறை சார்பில், வறுமைக்கோட்டிக்கு கீழ் உள்ள குடும்பங்களூக்கு, பாதி விலையில் வான்கோழி குஞ்சுகள் வழங்கப்படவுள்ளது. மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கி வருகிறோம். பொதுப்பணித்துறைச் சார்பில், காரைக்கால் மாவட்ட மக்களுக்கு மானிய விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படவுள்ளது. விரைவில் பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கப் படவுள்ளது. காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் புதிய சி.டி ஸ்கேன், இரு இரத்த சுத்திகரிப்பு கருவிகள் செயல்பாட்டில் உள்ளது. சுற்றுலாத்துறை சார்பில் ரூ.5 கோடி செலவில் நல்லம்பல் ஏரி சுற்றுலா பொழுது போக்கு மையமாக மாற்றி அமைக்கப்படவுள்ளது" என்றார்.
விழாவில், மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) முத்தம்மா, மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஆன்டோ அல்போன்ஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெங்கடசாமி, வாரியத் தலைவர்கள் கோவிந்தராஜ், சுரேஷ், உதயக்குமார் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், என்.சி.சி, இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள், தியாகிகள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அதே போல், காரைக்கால் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், அசட் மேலாளர் ஹர்கோவிந் தேசியக்கொடி ஏற்றி உரையாற்றினார். காரைக்கால் மார்க் கப்பல்துறைமுகத்தில் துணைத்தலைவர் வெற்றிவேல் ராமதாஸ் தேசியக்கொடி ஏற்றி, கீழவாஞ்சூர், மேலவாஞ்சூர் மற்றும் வடக்கு வாஞ்சூரைச் சேர்ந்த 550 மாணவர்களுக்கு லஞ்ச் பாக்ஸ் வழங்கினார்.

கருத்துகள் இல்லை: