யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

கழிவுகளிலிருந்தான மின்சார உற்பத்தி!

கழிவுகளிலிருந்தான மின்சார உற்பத்தி!

எங்கு பார்த்தாலும் சக்திப் பற்றாக்குறையை மையப் படுத்திச் செய்திகள் வரத் தொடங்கி விட்டன. மின் பாவனைக் கட்டணங்களின் மீளமைப்பு, புதிய புதிய சக்தி வளங்களின் அறிமுகம், அவற்றின் பாவனை, ஒட்டுமொத்த சக்தி வளங்களின் சிக்கனம் மிகுந்த பாவனையென சக்தித்துறை பல பரிமாணங்களை எடுத்துக் கொண்டிருக் கிறது. அவை தொடர்பான தகவல் களை நாமும் அன்றாடம் அறிகிறோம்.

மீள உருவாக்கப்படக் கூடிய சக்தி வளங்களின் பாவனையும் மீள உரு வாக்கப்பட முடியாத சக்திவளங்களின் சிக்கனமான பாவனையும் இன்றைய காலகட்டத்தில் ஊக்குவிக்கப்பட்டு கொண்டு வருகின்றன.

அந்த வகையிலே இன்று பிரபல மடைந்து வரும் மீள உருவாக்கப்படக் கூடிய சக்தி வளமாக, உயிரினங்களின் கழிவுகள் காணப்படுகிறது.

உயிர் வாயு என்றால் ‘மெதேன்’ என்று மட்டுமே அறிந்திருப்போம். ஆனால் உயிர் வாயு என்பது, மெதேன் வாயுவால் மட்டுமே ஆனதல்ல. அது மெதேன் வாயு உட்பட்ட சில வாயுக்களின் கலவையாகும்.

அடிப்படையில், உயிர்வாயு எனப் படுவது, சேதனப்பதார்த்தங்கள் ஒட்சிசன் இல்லாத நிலையில் உயிரியல் ரீதியாகப் பிரிகையடையும் போது வெளியேறும் வாயுவைக் குறிக்கும். அடிப்படையில் உயிர் வாயு இரண்டு வகைகளாகக் காணப்படுகிறது.

ஒன்று காற்றின்றிய பிரிகையால் உயிர்த்திணிவு, நகரக் கழிவுகள், பசுமைக் கழிவுகள், தாவரப் பகுதிகள், சக்தியைப் பிறப்பிக்கும் வல்லமையுடைய தாவரங்கள் போன்றவை பிறப்பிக்கும் வாயுவாகும். 

இது அடிப்படையில் மெதேன் மற்றும் காபனீரொட்சைட்டு வாயுக்களைக் கொண்டது.

மற்றையது மரக்கட்டைகள் வாயுவேற்றப்படும் (குறைதகனத்துக்குட் படும்) போது பெறப்படுவதாகும். அது அடிப்படையில் நைதரசன், ஐதரசன், காபன் ஆகிய வாயுகளைக் கொண்டிருக்கும். அத்துடன் குறிப்பிடத்தக்களவிலான மெதேன் வாயுவையும் கொண்டிருக்கும்.

மெதேன், ஐதரசன், காபன் மொனொக்சைட் போன்ற வாயுக்கள் குறைதகனத்துக்கும் உட்படும். அதே சமயம் ஒட்சிசனுடன் ஒட்சியேற்றப்படவும் செய்யும்.

இந்தக் குறைதகனம் அல்லது உயிர்ப்பொருட்களின் காற்றின்றிய பிரிகையால் உருவாக்கப்படும் உயிர்வாயு ஒரு எரிபொருளாகப் பயன்படுகிறது. உலகின் எந்த ஒரு நாடாயினும் மிகவும் செலவு குறைந்த எரிபொருளாக உயிர்வாயு காணப் படுகிறது. அத்துடன் இன்றைய நவீன உலகிலே, பலவழிகளிலும் பயன்படும். சுற்றுச்சூழல் மாசைக்குறைக்கும் வல்லமை மிக்க எரிபொருளாக காணப்படுகிறது. 

இவ்வாயுவைப் பயன்படுத்தி, வாகனங்களைக் கூட இயக்க முடியும். வெப்பத்தைப் பிறப்பிக்கும் இயந்திரங்களையும் இயக்க முடிவதுடன் இயக்க சக்தியையோ மின் சக்தியையோ பிறப்பிக்க முடியும். ஏன், தெரு விளக்குகள் கூட உயிர்வாயுவினால் ஒளியூட்டப்பட முடியும்.

உயிர் வாயுவொன்றும் எமக்குப் புதிதானதல்ல. பண்டைய காலத்திலே அழுகிய மரக்கறிகள் தீப்பற்றக் கூடிய வாயுவொன்றைப் பிறப்பிப்பதை பாரசீகர்கள் கண்டுணர்ந்திருக்கின்றனர். நாடுகாண் பயணியாகிய மார்க்கபோலோ, மூடிய கழிவு நீர்த்தாங்கிகளின் பயன்பாட்டை சீனாவில் கண்டதாகத் தனது குறிப்பேட்டில் குறித்திருந்தார். 

முதலாவது கழிவு நீர்த்தாங்கி இந்தியாவின் மும்பையில் 1859 இல் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அவ்வுயிர்க் கழிவுகளின் மூலம் உயிர் வாயுவை உற்பத்தி செய்யும் தொழில் நுட்பம் பிரித்தானியாவில் 1895 ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.

அழிந்த விலங்கினங்களும் தாவரங் களும் குளம் குட்டைகளினுள்ளேயே கிடந்து பல நாட்கள் ஆன பின் அந்நீர்ப் பரப்பிலிருந்து வாயுக்குமிழிகள் உருவாவதையும் அவை தீவைத்தால் எரியும் தன்மையுடையனவாக இருந்த மையையும் தொன்று தொட்டு மனிதர்கள் அறிந்திருந்தனர். ஆயினும் ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்பு தான் அதற்கான காரணம் கண்டறியப்பட்டது.

அழியாத, இயற்கைச் சக்தி முதலாகிய சூரியனிலிருந்து தாம்பெற்ற சக்தியைத் தாவரங்கள் இரசாயன சக்தியாகவும், அத்தாவரத்தை உண்ணும் விலங்குகள் தம் எருக் கழிவுகளில் உயிர்ச்சக்தியாகவும் பேணுகின்றன.

மனிதனானவன் கற்காலம் தொட்டு விலங்குகளின் எருக்களைக் கையாண்டு வருகின்றான் என்பது நாம் யாவரும் அறிந்த விடயமே. தாவரங்களின் பசளையாக ஆண்டாண்டு காலமாகப் பயன்படுத்தப்பட்ட அந்த எரு தான் இன்று கார்களையும் பஸ்களையும் ஒட்டவும் வீடுகளுக்கு ஒளியூட்டவும் பயன்படுகிறது என்றால் ஆச்சரியமாக இல்லையா?

இந்த விலங்குகளின் எரு ஒருங்கே சேகரிக்கப்பட்டு காற்றின்றிய நிலையிலேயே நுண்ணங்கிகளின் தாக்கத்துக்குட்படுத்தப்பட்டு உயிர் வாயு பிறப்பிக்கப்படுகிறது. பாரியளவில், நீர்மின் சக்தி பிறப்பாக்கம் போல உயிர் வாயுமூலமான மின்னுற்பத்தி நடைபெறுவது இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலே மிகவும் குறைவாகும்.

மாறாக, வீடுகளின் வெப்பமாக்கல், ஒளியூட்டல் தேவைகளுக்காக கிராமிய மட்டங்களிலே உயிர்வாயு மூலமான மின்னுற்பத்தியின் பயன்பாடு மிகவும் அதிகமாகவே காணப்படுகிறது. அத்தகைய உயிர் வாயுத் தொகுதிகளின் பாவனையானது, விவசாயச் சமூகங்களின் உற்பத்தித் திறனைப் பெருக்குவதில் பெருந்துணை புரிகிறது. 

ஏனெனில் விவசாய, கால்நடைகளின் பண்ணைக் கழிவுகள் உயிர்வாயுத் தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டு, அவற்றின் இறுதிவிளைவு விவசாய உரமாகவும் மண் வளமாக்கியாகவும் பயன்படுத்தப்படும். அதே சமயம், தயாரிக்கப்பட்ட உயிர் வாயுவானது சக்தித் தேவையை ஈடுசெய்யப் போதுமானதாக இருக்கும்.

மெதேன் என்பது ஒரு பச்சையில்ல வாயுவாகும். அந்நிலையில் மெதேன் வாயு மூலமான சக்திப் பிறப்பாக்கம் பச்சையில்ல விளைவைத்தோற்றுவிக்காதா? என்ற கேள்வி பலர் மத்தியிலும் எழத்தான் செய்கிறது. மெதேன் வாயுவின் வெப்பமாக்கும் தன்மை, காபனீரொட்சைட் வாயுவின் வெப்பமாக்கும் தன்மையைவிட 21 மடங்குகள் அதிகமாகும்.

கழிவுகளில் இருந்து மெதேனை உற்பத்தி செய்து, வெப்பத்தையோ மின்சாரத்தையோ பிறப்பிக்கும் போது மெதேன்வாயு குறைதகனத்துக்குள்ளாகி காபனீரொட்சைட்டாக மாற்றப்பட்டு சூழலுக்கு வெளிவிடப்படுகிறது. ஆகையால் பச்சை இல்ல விளைவு சாதாரண மெதேன் வெளியேற்றத்துடன் ஒப்பிடுகையில் 20 மடங்குகளால் குறைக்கப்படுகிறது.

அத்துடன், உயிர்வாயு உற்பத்தி செய்யப் பயன்படும் கழிவுகள் திறந்த சூழலில் உக்கவிடப்படுவதில்லை. ஆகையால் இம்முறைமை மூலம் வெளிச்சூழலுக்கு விடுவிக்கப்படும் மெதேன் வாயுவின் அளவும் குறைவாகவே காணப்படுகிறது.

உயிர்வாயு மூலமான சக்திப் பயன்பாடு காபன் நடுநிலையான சக்திப் பயன்பாடாகவே காணப் படுகிறது. ஏனெனில், இயற்கையான காபன் வட்டத்திலே தாவரங்களால் பதிக்கப்படும் காபனே உயிர்வாயு மூலமான சக்திப் பிறப்பாக்கத்தின்போது சூழலுக்கு வெளிவிடப்படவும் செய்கிறது.

1m3அளவிலான தூய உயிர் வாயுவானது 6kwh சக்தியைப் பிறப்பிக்கவல்லது. ஆனால் அதன் மூலம் மின்சாரத்தைப் பிறப்பிக்க முயலும் போது 2kwh அளவான பாவனைக்குட்படுத்தக்கூடிய மின்சாரம் பெறப்படுகிறது. மிகுதிச் சக்தி வெப்பமாக வெளியேற்றப்படுவதால், வெப்பமாக்கல் தேவைகளுக்காகப் பயன்படுகிறது. 2kwh சக்தி என்பது 100w மின்குமிழை 20 மணித்தியாலங்கள் எரிப்பதற்குப் போதுமானதாகும்.

எவ்வளவு கழிவு உயிர்வாயு மூலமான சக்திப் பிறப்பாக்கத்திற்குப் பயன்படுகிறதோ, சக்திப்பிறப்பாக் கத்தின் பின்னரும் திணிவின் அடிப்படையில் மீதமாக இருக்கும். ஆனால் அது சூழலை மாசடையச் செய்யும் தன்மை குறைந்ததாகவும் சிறந்த உரமாகவும் காணப்படும்.

எருக்களிலிருந்து உயிர்வாயு மூலமான சக்திப் பிறப்பாக்கமானது, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமியச் சமூகங்களுக்கு மிகவும் பயனுள்ள செலவு குறைந்த வழிமுறையாகக் காணப்படுகிறது. அவை சமைத்தல், வெப்பமாக்கல் நீரைக் கொதிக்கவைத்தல், தானியங்களை உலர்த்துதல், குளிரூட்டல், வீடுகளுக்கு, ஒளியூட்டல் போன்ற பல தேவைக ளுக்கு உயிர்வாயு மூலம் பிறப்பிக்கப் படும் சக்தியைப் பயன்படுத்துகின்றன.

உயிர்வாயுவை ஒடுக்கி, உழவு இயந்திரங்களின் எரிபொருளாகப் பயன்படுத்துவது என்பது சற்றுச் சிக்கலான, செலவு கூடிய முறைமையாகும்.

உயிர்வாயுவை உற்பத்தி செய்யும் போது அதிலே, மெதேன் அல்லாத வேறு வாயுக்களும் காணப்படும். அவற்றுள் பிரதானமானவை காபனீ ரொட்சைட்டு, ஐதரசன் சல்பைட்டு, நீராவி என்பனவாகும். ஐதரசன் சல்பைட்டு போன்றவை சுற்றுச்சூழலுக்கும் மனிதனுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியவை. ஆதலால் உயிர்வாயுவானது முதலில் தூயதாக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

அதேபோல உயிர்வாயு மூலமான சக்திப் பிறப்பாக்க அமைப்பில் ஏற்படும் சிறிய குறைபாடுகள் கூட, வெளிச்சூழலுக்கு மெதேன் வாயுவை வெளியேற்றுவதில் பங்காற்றத்தவறுவதில்லை. அத்தகையதொரு நிலை ஏற்படுமாயில் விளைவுகள் மிகவும் பாரதூரமானவை. ஏனெனில் மெதேன் வாயு நிறமற்றது. ஆகையால் எங்கிருந்து வெளியேறுகிறது என்பதைக் கண்டறிதல் மிகவும் கடினமாகும்.

அது மட்டுமன்றி அது தீப்பற்றி எரியும் ஆற்றல் மிக்கது. வளி மண்டலத்தின் மெதேன் அளவு 6-15% ஆக மாறுகையில் தானே தீப்பற்றும்.

எனவேதான், உயிர்வாயு மூலமான சக்திப் பிறப்பாக்க கட்டமைப்பின் கட்டடங்கள் காற்றோட்டம் மிக்கவையாக அமைக்கப்பட வேண்டும் எனவும் மின்னுற்பத்தியுடன் தொடர்புடைய சாதனங்கள் இலகுவில் எரியும், வெடிக்கும் தன்மை குறைந்தனவாக இருக்க வேண்டுமெனவும் வாயு வெளியேறும் பட்சத்தில் அதனை உணர்ந்து அறிவிக்கும் அலாரமுறை மைகளும் அமைக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிர்வாயு மூலமான சக்திப் பயன்பாடு கிராமிய மட்டத்தில் இலங்கையிலும் ஆரம்பிக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது. அத்தகைய தோர் பரீட்சார்ந்த முயற்சியில் லுணு விலவில் அமைந்துள்ள தென்னை ஆராய்ச்சி நிலையமும் இறங்கியுள்ளது.

விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் மாற்றுச் சக்திப் பிரிவுடன் இணைந்து இப்பரீட்சார்த்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இது மாதம்பே பகுதியிலுள்ள ரத்மாலகர தோட்டத்திலே 2005ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கிளிசிரிடியா எனப்படும் பல்தேவைகளுக்கும் பயன்படும் சீமைக்கிளுவையை உயிர்சக்திக்கும் உயிர்வளமாக்கியாகவும் பயன்படுத்துவதே இத்திட்டமாகும். சீனுமக்கிளுவைக்கும் உயிர்வாயு உற்பத்திக்கும் என்ன தொடர்பு? என்ற சந்தேகம் பலருக்கு உருவாகக்கூடும் அது நியாயமும் கூட. இத்திட்டம் இரண்டு இலக்குகளைக் கொண்டது. 

ஒன்று தென்னை, மந்தைகள், சீமைக்கிளுவை, வைக்கோல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட விவசாயத் தொகுதியின் செயற்பாட்டை விளக்குதலும் பால் உற்பத்தியைப் பெருக்குதலுமாகும்.

மற்றையது, பொருளாதார ரீதியாக இலாபகரமான, சீமைக்கிளுவையை அடிப்படையாகக் கொண்டு மந்தைகளின் எருக்களையோ அல்லது பசுமை எருக்களையோ பயன்படுத்தியும் சக்தித் தேவையைப் பூர்த்தி செய்தலும் விறகுத் தேவையைப் பூர்த்தி செய்தலுமாகும்.

இதற்காக 1 ha நிலப்பரப்பில் ஏறத்தாழ 150 தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டு செவ்வனே பராமரிக் கப்படுகின்றன. தென்னை மரங்களுக் கிடையிலான இடைவெளியிலே சீமைக்கிளுவை வளர்க்கப்படுகிறது. இத்தகைய சீமைக்கிளுவை மரங்கள் ஏறத்தாழ 7000 காணப்படுகின்றன. அத்துடன் பால் மற்றும் எருத் தேவைகளுக்காக ஆறு எருமை மாடுகளும் வளர்க்கப்படுகின்றன.



ஒன்றிணைந்த தீனியாக அவற்றிற்கு புற்கள், சீமைக்கிளுவை, வைக்கோல் ஆகியன வழங்கப்படுகின்றன. அத்துடன் இத்திட்டத்தின் ஒரு சிறு பகுதியாக உயிர்வாயு உற்பத்தி நடைபெறுகிறது. அடிப்படையில், ஒரு தென்னந்தோப்பை எப்படி உச்ச லாபம் மிக்க உயர் உற்பத்தித் திறனுடையதாக மாற்ற முடியுமென்பதை, சீமைக்கிளுவைகளின் பயன்பாட்டைக் கொண்டு விளக்குவதே இத் திட்டமாகும். 

இதன் ஒரு பகுதியான, உயிர்வாயு எருமூலமான உற்பத்திக்காக ஆறு எருமை மாடுகளும் எப்பொழுதும் தொழுவத்திலேயே கட்டப்பட்டிருக்கும். அங்கேயே அவற்றிற்குத் தீனி வழங்கப்படும். அவை தன்னிச்சையான மேய்ச்சலுக்கு அனுப்பப்படுவதில்லை.

அவற்றின் எருவை (உயிர்க் கழிவு) ஒரேயடியாகச் சேமிக்கும் வசதிக்காகவே அவ்வாறு செய்யப்படுகின்றன. அவ்வுயிர் கழிவுகள் ஒரு கான்வழியே சென்று நிலத்துக்குக் கீழிருக்கும் தொட்டியிலே அடையும். 

பின்னர் உயிர்வாயு உற்பத்திக்காக அமைக்கப்பட்ட தாங்கியினுள் நுண்ணங்கிகளுடன், பொருத்தமான பெளதீகச் சூழ்நிலையில் காற்றின்றிய பிரிகைக்குட்பட்டு உயிர் வாயு உற்பத்தி செய்யப்படும். அடிப்படையில் உயிர்வாயுவிலே கலந்திருக்கும் ஐதரசன் சல்பைட்டை ஒட்சியேற்றுவதற்காக 6 - 8 சதவீத ஒட்சிசன் உட்செலுத்தப்படும். அதேபோல் உயிர் வாயு நீரினூடு செலுத்தப்பட்டு சிறிய விட்டமுடைய குழாய்களினால் பின்பிறப்பாக்கியைச் சென்றடையும்.

அவ்வாறு நீரினூடு செலுத்தப்படுவதற்கான நோக்கம் உயிர் வாயுவிலே கலந்திருக்கும் காபனீரொட்சைட்டை அகற்றுதலாகும்.

குழாய் வழியாகச் செல்லும் தூயதாக்கப்பட்ட உயிர்வாயு பின்பிறப்பாக்கியை தானாகவே இயக்கும் வல்லமையற்றது என்பதையும் நாம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.

இன்னொரு எரிபொருளால் இயக்கப்படும் மின்பிறப்பாக்கி தொடர்ந்து இயங்குவதற்கு உயர்வாயு துணை புரிகிறது. இத்திட்டத்திற்கமைவான உயிர்வாயு உற்பத்தியால் ஒரு வீட்டின் அடிப்படை சக்தித் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. ஆனால் உயர் சுமையுடைய குளிர்சாதனப் பெட்டி போன்றவற்றின் பாவனை இயலாத காரியமாகும். தொலைக்காட்சியின் பாவனை சாத்தியமானது.

இத்திட்டத்திலே, உயிர் வாயு சேமிக்கப்படுவதில்லை. அதற்கான செலவு அதிகமாதலால் தேவைக்கு மேலதிகமாக உற்பத்தி செய்யப்படும் உயிர் வாயு பயனற்றுக் காணப்படுகிறது. உயிர்வாயு உற்பத்தியின் போது எஞ்சும் கழிவுகள் திறந்த நிலக்கீழ்த் தாங்கியில் சேமிக்கப்பட்டு தேவையேற்படும் போது உரமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதேசமயம், திறந்த தாங்கியிலே சேமிக்கப்படுவதால் வளியிலான ஒட்சியேற்றமும் நடைபெறுகிறது.

6 எருமை மாடுகளும் ஒரே இடத்தில் கட்டப்பட்டு வைத்திருப்பது மனிதாபிமானிகளையும் விலங்கு நல ஆர்வலர்களையும் வருத்தவே செய்யும். அவ்வெருமை மாடுகள் தன்னிச்சையான மேய்ச்சலுக்கு விடப்படுவதே இல்லை. அந்த வாயில்லா ஜீவன்களின்

வாழ்வுரிமையைப் பறித்து சகல வல்லமையும் படைத்த மனிதனின் வாழ்வுரிமையை மெருகூட்டுவதா என்ற கேள்வி அவர்களின் மனதைத்துளைத்திருக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை. இது பரீட்சார்த்த முயற்சி ஆகையால், ஏற்றுக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ முயல்கிறோம்.

ஆனால் இம்முயற்சி நிஜமாகவே நடைமுறைக்கு வரும்போது அது எவ்வளவு தூரம் மனிதாபிமானமானது என்பதும் நியாயமானது என்பதும் சிந்திக்கப்பட வேண்டிய விடயங்களே.

ஆகையால்தான் மிருகக்காட்சிச்சாலைகளுக்கு இத்திட்டம் பொருத்தமாக அமையுமோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

நாம் மனிதராக இப்பூவுலகில் ஜனித்துவிட்டதால் எதையும் செய்யலாம் என்ற உணர்வும் எம்மை வெல்ல எவருமில்லை என்ற உணர்வும் எம்முடனேயே வந்துவிடுகிறது. ஒருகாலத்தில் ஆட்சிசெய்த இனமாகிய, டைனசோர் இனம் இன்று சுவடுகளாக மட்டுமே மாறிய கதையை நாம் அறிவோம்.

ஆகையால், எம் முயற்சிகள் ஒவ்வொன்றும் எந்த உயிரையும் பாதிக்காத வகையிலே அமைய வேண்டும். உயிர்களுக்குள் பேதமில்லை என்ற உணர்வு எம்மத்தியில் உருவாக வேண்டும். எரு மூலமான உயிர்ச்சக்தியின் பிரயோகங்களும் உற்பத்தியும் சிறந்த சிந்தனைகள்தான். ஆனால் அவை மேன்மேலும் விருத்தி செய்யப்பட்டு எந்த உயிரினத்தின் வாழ்வுரிமையும் பறிக்கப்படாத வகையிலே அவை பிரயோகிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மனித இனம் சிறக்க முடியும்.

கருத்துகள் இல்லை: