யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

சனி, 19 அக்டோபர், 2013

வான்கோழி வளர்ப்பு முறைகள்

வான்கோழி வளர்ப்பு முறைகள்

வான்கோழிகள் வளர்த்திட கீழ்க்கண்ட வளர்ப்பு முறைகளைக் கடைப்பிடிக்கலாம்.

1.புறக்கடை வளர்ப்பு(Backyard system)
2.மிதத்தீவிர முறை அல்லது மேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்ப்பு (Semi-intensive system)
3. ஆழ்கூள முறையில் கொட்டகையில் வளர்ப்பு(Deeplitter rearing)
4.கம்பி வலை மேல் வான்கோழிகள் வளர்த்தல்(Slate floor rearing)

புறக்கடை வளர்ப்பு:

நம்முடைய கிராமபுறங்களில் விவசாயிகள் வீட்டுத் தோட்டங்களில் வான்கோழிகளை வளர்ப்பதை பார்த்திருப்பீர்கள். வீடுகளில் இருக்கும் நெல், அரிசி, குறுணை, கம்பு, சோளம், தவிடு, எஞ்சிய சமைத்த உணவு, சமையல் அறைக் கழிவுகள் ஆகியவை வான்கோழிகளுக்கு உணவாக அமைகின்றன.

புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகளுக்குத் தானியங்கள், கீரைகள், களைகள் போதுமான அளவு கிடைத்து விடும். ஆனால் புரதச்சத்து தேவை நிறைவு பெறாது. இதை ஈடுகட்ட கடலைப் பிண்ணாக்கு / எள்ளுப் பிண்ணாக்கு/ சூரியகாந்திப் பிண்ணாக்கு இவற்றில் ஏதாவது ஒன்றினைத் தண்ணீரில் ஊறவைத்து இத்துடன் சிறிதளவு தவிடு வகையினைச் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரே சமயத்தில் அதிகமாக வைக்காமல் சிறிது சிறிதாகத் தீவனம் வைக்க வேண்டும். தண்ணீரில் ஊற வைத்து ஒரிரு நாட்கள் கழித்து அக்கலவையினை தீவனமாகப் பயன்படுத்தக் கூடாது. பழைய, ஊற வைத்த பிண்ணாக்கில் பூஞ்சக்காளான் வளர்ச்சி ஏற்படுவதால் வான்கோழிகளுக்கு இது தீங்களிக்கும்.

இடவசதி:
வீட்டைச்சுற்றி 5 செண்ட் நிலம் இருந்தால் அது ஒரு ஜோடிக்கு இடவசதி போதுமானதாக இருக்கும். இரவு நேரத்தில் அடைத்து வைத்திட ஒரு சிறிய அறை தேவைப்படும். அல்லது பெரிய கூடைகள் தேவைப்படும். முட்டைகளிட ஒரு சிறிய இருட்டான இடம் தேவைப்படும்.

மேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்க்கும் முறை:
வியாபார முறையில் வான்கோழிப் பண்ணை அமைத்திட, மேய்ச்சலுடன் கொட்டகை கட்டி வளர்க்கும் முறை, புறக்கடை முறையைவிடச் சிறந்ததாகும். ஒரு ஆண் வான்கோழிக்கு, கொட்டகையில் 5-6 கொட்டகையில் சதுர அடியும், ஒரு பெட்டை வான்கோழிக்குச் சுமார் 4 அடி இடவசதியும் தேவைப்படும்.

இந்தக் கொட்டகையில் நெல் உமி அல்லது கடலைத் தோல் போட்டு, ஆழ்கூளம் அமைத்து விட வேண்டும். சுமார் 100 வான்கோழிகள் கொண்ட பண்ணை அமைத்திட 20 ஆண் வான்கோழிகள் தேவை. இதற்காகச் சுமார் 20 அடி அகலம், சுமார் 25 அடி நீளம் கொண்ட ஒரு கொட்டகை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தக் கொட்டகையைச் சுற்றிச் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பிற்கு கம்பிவலை கட்டப்பட்ட பகுதியில் மேய்ச்சலுக்கு விடலாம். புல் பூண்டுகள், களைகளை ஒரிரு நாட்களில் தின்று விடும். இந்த இடத்தில் அருகம்புல் கொண்டு வந்து போடலாம். கலப்புத் தீவனம் இரண்டு அல்லது மூன்று முறை தினமும் அளிக்கலாம்.


ஆழ்கூள முறையில் கொட்டகையில் வான்கோழி வளர்ப்பு:
கோழிகளை வளர்ப்பது போல் வான்கோழிகளையும் ஆழ்கூளமுறையில் கொட்டகையில் வளர்க்கலாம். ஆழ்கூளம் அமைப்பதற்கு நெல்உமி அல்லது கடலைத் தோலை, சிமெண்ட் தரையின் மீது ஆறு அங்குலத்திற்கு பரப்பவேண்டும். இம்முறையில் வான்கோழிகளை வியாபார நேர்கிகல் வளர்க்க வேண்டுமானால் குறைந்தது 200 வான் கோழிகள் கொண்ட பண்ணையை அமைக்கவேண்டும்.

இம்முறையில் 40 ஆண் வான்கோழிகளுக்கு, 160 பெட்டை வான்ாகழிகள் என்ற விகிதத்தில் வளர்க்கலாம். ஒரு சேவல் வான்கோழிக்கச் சுமார் 5-6 சதுர அடி இடவசதியும் ஒரு பெட்டை வான்கோழிக்குச் சுமார் 4 சதுர இடவசதியும் தேவை. 40 ஆண் கோழிகளுக்கு 200 முதல் 240 சதுர இடவசதியும் 160 பெட்டை வான்கோழிகளுக்கு 640 சதுர இடவசதியும் தேவை. வளர்ந்த வான்கோழிகள் வளர்ப்பதற்கு தனிக் கொட்டகையும் குஞ்சுகள் வளர்ப்பதற்கு தனிக்கொட்டகையும் அமைத்திடவேண்டும்.


கம்பி வலைச் சட்டங்களில் மேல் வான்கோழிகள் வளர்ப்பு:

அதிகமாக மழைபெய்யும் இடங்களிலும், ஆழ்கூளம் காய்ந்த நிலையில் வைக்க முடியாத இடங்களிலும் கம்பிவலைச் சட்டங்களைப் பொருத்தி அதன் மேல் வான்கோழிகளை வளர்க்கலாம். இதற்கான கொட்டகையினை அமைப்பதை ஆழ் கூளமுறையில் போன்றே கட்டிக் கொள்ள வேண்டும். ஆனால் சிமெண்ட் காங்கிரிட் கொண்ட தரை அமைக்க வேண்டிய அவசியமில்லை.

ஏனென்றால் கோழிகளைக் கம்பி வலைகளின் மேல் விட்டுத் தானே வளர்க்கப்போகின்றோம். பக்கவாட்டுச் சுவர், கம்பிவலைச் சட்டத்திற்கு மேல் 11/2 அடி உயரத்திற்கு அமைத்துக் கொள்ள வேண்டும். சட்டமானது ஒரு அங்குலத்திற்கு 2 அங்குலம் இடைவெளி கொண்ட கம்பி வலையினை 2 அடிக்கு 2 அடி மரச்சட்டங்களை அமைத்துக் கொண்டு அதன்மேல் பொருத்திவிட வேண்டும்.

இந்தக் கம்பி வலைச் சட்டங்களை மண் தரைமீது ஒவ்வொன்றாக அடுக்கி வைத்து விடலாம். அவற்றின் மீது வளர்ந்த வான்கோழிகளை வளர்த்திடலாம். சிறிய குஞ்சுகளை, கம்பி வலைச் சட்டத்தின் மீது வளர்க்க வேண்டுமானால் ஒரு அங்குலத்திற்கு 2 அங்குலம் கொண்ட கம்பி வலையை மரச்சட்டம் மீது பொருத்திக் கொள்ளலாம். கம்பிவலைச் சட்டத்தின் மேல் விட்டு வான்கோழிகளை வளர்த்தால் பலவிதமான நோய்க்கிருமிகளிலிருந்து பாதுகாப்பு அளித்திடலாம்.

பெரிய வான்கோழிகள் இனவிருத்திக்காக வளர்க்கும் பட்ச்த்தில் பண் வான்கோழிகளின் மார்புப் பகுதி கம்பிவலையினால் காயம் ஏற்படலாம். இதைத் தடுத்திட, பாதி இடம் கம்பிவலைச் சட்ட அமைப்பு கொண்ட கொட்டகை அமைக்கும் பொழுது ஒரு குஞ்சுக்கு 2 சதுர அடி இடவசதியும், ஒரு வளர்ந்த வான்கோழிக்கு சுமார் 5 சதுர அடி இடவசதியும் போதுமானது. முடிந்த அளவிற்கு வளர்ந்த வான்கோழிகளை ஆழ்கூளத்தில் வளர்க்க முயற்சிக்கலாம்.

கம்பிவலைக் சட்டத்தின் மேல் குஞ்சுகளை வளர்க்கலாம்
கம்பி வலைச் சட்டத்தின் மேல் இனவிருத்திக்கான வான்கோழிகளை வளர்க்கும் பட்சத்தில் தீவனத்தில் குறைந்தது 2.5 தாது உப்பும், 3 கிளிஞ்சலும் கலந்து இருக்க வேண்டும். இந்த அளவில் குறைவு ஏற்பட்டால் கால்களில் வாதம் ஏற்பட்டு நடக்க முடியாமல் கஷ்டப்படும். மேலும் முட்டையிடக்கூடிய பகுதி ஆழ்கூளமாக இருப்பது சிறந்தது.

அப்பொழுதுதான் முட்டைகள் உடையாமல் இருக்கும். சுத்தமான ஆழ்கூளமாக இருந்தால் மட்டுமே சுத்தமான முட்டைகள் பெற முடியும். சுத்தமான முட்டைகளையே குஞ்சு பொரிக்க அவயத்தில் வைத்திட இயலும்.

வான்கோழித் தீவனப் பராமரிப்பு:

வான்கோழிகளுக்குச் சிறந்த கலப்புத் தீவனமளிப்பதன் மூலமே அதிகமான முட்டைகளும் இறைச்சியும் பெற முடியும். வான்கோழிப் பண்ணையில் செலவிடப்படும் தொகையில் 70 சதவிகிதம் தீவனத்திற்காகவே செலவிடப்படுகின்றது. ஒரு பெட்டை வான்கோழியின் எடையோ சராசரியாக 3 கிலோகிராம் உள்ளது. வான்கோழி வருடத்திற்கு 70 கிராம் எடைக்கொண்ட 100 முட்டைகள் இடவேண்டும் என்றால் (அதாவது 7 கிலோ எடையுள்ள முட்டைகள்) நல்ல தரமான ஊட்டச்சத்துக்கள் மிகுந்த தீவனம் அளிக்கப்படவேண்டும். அதேபோல் 45 கிராம் எடையுள்ள ஒரு நாள் வயதுள்ள குஞ்சு 84 நாடகளுக்குள் (12 வார வயதிற்குள்) 2.5-3.0 கிலோ எடை பெற வேண்டுமெனில் நல்ல தரமான சத்துள்ள தீவனம் அளிக்கப்படவேண்டும்.

வான்கோழிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கீழ் வருமாறு.
தண்ணீர்
மாவுப்பொருள்
புரதம்
கொழுப்பு
நார்ப்பொருள்
தாது உப்புக்கள்
உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின்கள்)


வான்கோழிக் குஞ்சுகளுக்கான தீவனப் பராமரிப்பு:

ஆண், பெட்டை வான்கோழிகளுக்கான சத்துக்கள் தேவை. வேறுபடுவதால் இவைகளை குஞ்சு பொரித்தவுடன் தனித்தனியாகப் பிரித்து வளர்ப்பது நல்லது. வான்கோழிகளுக்குத் தீவனம் தயாரிக்க சாதாரணமாக மற்றக் கோழிகளுக்குப் பயன்படுத்தப்படும் தீவன மூலப் பொருட்களையே பயன்படுத்தலாம். குஞ்சு பொரித்தவுடன் எவ்வளவு விரைவில் தீவனம் அளிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் வான்கோழக் குஞ்சுகளக்குத் தீவனத்தைப் பிரகாசமான வெளிச்சத்தில் வைக்கவேண்டும். சில சமயங்களில் தீவனம் மற்றும் தண்ணீர் தொட்டிகளில் பளிச்சென்று பீங்கான் குண்டுகளைப் போடுவதால் தீவனம் மற்றும் தண்ணீர் உட்கொள்ளக் குஞ்சுகள் தூண்டப்படுகின்றன. முதல் இரண்டு நாட்களுக்குத் தீவனத்தைச் சுத்தமான பழைய செய்தித்தாள் மேல் தூவிவிடலாம்.

ஆரம்ப நாட்களில் தீவனத்தைப் பாத்திரத்தில் நிறையக் குவித்து வைத்து, தீவனம் உட்கொள்ளத் தூண்ட வேண்டும். பொதுவாக குஞ்ச பருவத்தில் இறப்பு விகிதம் 10 விழுக்காடு வரை இருக்கும். குஞ்சுப் பொரித்த முதல் நாளில் இருந்து கால்சியம், பி வைட்டமின் மருந்தினைத் தண்ணீரில் கலந்து இரண்டு மாதங்கள் வரைத் தவறாமல் கொடுக்கவேண்டும்.

நாம் சொந்தமாகத் தீவனம் தயாரிக்கும் போது உள்ளூர் சந்தையில் கிடைக்கும் விலை மலிவான தீவனப்பொருட்களைக் கொண்டு குறைந்த விலையில் தீவனம் தயார் செய்து கொள்ளலாம்.

குஞ்சுத்தீவனம்:
வான்கோழிக் குஞ்சுகளுக்கு முதல் நான்கு வாரங்களுக்கு 28 விழுக்காடு புரதமும், 2800 கிலொ கலோரிகள் (1 கிலோவிற்கு) எரிசக்தி அடங்கிய தீவனம் அளித்தல்வேண்டும். இத்தீவனத்தைத் தயாரிக்கும் முறைபற்றி இங்குக் காண்போம்.

மக்காச்சோளம் / வெள்ளைச் சோம்பு / கம்பு-40 பங்கு
சோயாபிண்ணாக்கு / கடலைப் பிண்ணாக்கு-38 பங்கு
மீன் தூள்-9 பங்கு
தவிடு வகைகள்-10 பங்கு
எண்ணெய்-1 பங்கு
தாது உப்பு-2 பங்கு

இத்துடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள (வைட்டமின் ஏ, எ 25 கிராம் மற்றும் பி வைட்டமின் 50 கிராம்) கலந்து தரவேண்டும்.

நான்கு முதல் எட்டு வாரங்களுக்கு 26 விழுக்காகடு புரதமும், 2900 கிலோ கலோரிகள் (கிலோவிற்கு) எரிசக்தியும் அடங்கிய தீவனம் அளித்தல் வேண்டும்.

இத்தீவனத்தைத் தயாரிக்கும் முறைப்பற்றி இங்கு காண்போம்.

மக்காச்சோளம் / வெள்ளைச் சோம்பு / கம்பு-45பங்கு
சோயாபிண்ணாக்கு / கடலைப் பிண்ணாக்கு-30 பங்கு
மீன் தூள்-10 பங்கு
தவிடு வகைகள்-10 பங்கு
எண்ணெய்-2 பங்கு
தாது உப்பு-3 பங்கு

இத்துடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின் ஏ,டி -20 கிராம் மற்றும் பி வைட்டமின் 40 கிராம்) கலந்து தரவேண்டும்.

வளரும் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு:
வளரும் பருவத்தில் வயது அதிகமாகும் சமயத்தில் புரதச் சத்தின் தேவைப் படிப்படியாகக் குறைகிறது. அதே சமயத்தில் எரிசக்தியின் தேவை படிப்படியாகக் கூடுகிறது. எனவே அந்தந்த வளர்ச்சிப் பருவத்திற்கு ஏற்ற சமச்சீர் தீவனம் அளிப்பது அவசியமாகிறது. வளரும் வான்கோழிகளுக்கான தீவனத்தை 8 முதல் 14 வாரங்கள் வரை அளிக்கவேண்டும். இத்தருணத்தில் 22 விழுக்காடு புரதமும் 3000 கிலோ கலோரிகள் (1 கிலோவிற்கு) எரிசக்தியும் அடங்கிய தீவனம் அளித்தல்வேண்டும்.

தீவனக்கலவை
மக்காச்சோளம் / வெள்ளைச் சோம்பு / கம்பு -45 பங்கு
சோயாபிண்ணாக்கு / கடலைப் பிண்ணாக்கு-31 பங்கு
மீன் தூள்-10 பங்கு
தவிடு வகைகள்-10 பங்கு
எண்ணெய்-1 பங்கு
தாது உப்பு-3 பங்கு

இத்துடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின் ஏ,டி -20 கிராம் மற்றும் பி வைட்டமின் 40 கிராம்) கலந்து தரவேண்டும்.

முட்டைக்காக வளர்க்கப்படும் இளம் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு:

இத்தீவனமானது 14 முதல் 28 வார வான்கோழிகளுக்கு அளிக்கப்படவேண்டும். இத்தீவனத்தில் 14 விழுக்காடு புரதமும் 3200 கிலோ கலோரிகள் (1 கிலோவிற்கு) எரிசக்தியும் அடங்கிய தீவனம் அளித்தல்வேண்டும். இத்தீவனத்தை தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மக்காச்சோளம் / வெள்ளைச் சோம்பு / கம்பு-50 பங்கு
சோயாபிண்ணாக்கு / கடலைப் பிண்ணாக்கு-20 பங்கு
மீன் தூள்-10 பங்கு
தவிடு வகைகள்-15 பங்கு
எண்ணெய்-2 பங்கு
தாது உப்பு-3 பங்கு

இத்துடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின் ஏ,டி -20 கிராம் மற்றும் பி வைட்டமின் 20 கிராம்) கலந்து தரவேண்டும்.

இத்தீவனத்தைப் பொடியாகவோ அல்லது குச்சித் தீவனமாகவோ அளிக்கலாம். இத்துடன் தீவனத் தட்டுக்களில் கிளிஞ்சல் எந்நேரமும் கிடைக்குமாறு போட்டு வைக்கலாம்.
குச்சித் தீவனம் அளிப்பதால் ஏற்படும் நன்மைகள் அனைத்துச் சத்துக்களும் சமச்சீர் அளவில் வான்கோழிகளுக்குக் கிடைக்கின்றன.

தீவன விரயம் குறைவு மற்றும் சத்துக்கள் உபயோகிக்கும் திறன் அதிகம்.

நச்சுத் தன்மை குறைக்கப்படுகிறது அல்லது நீக்கப்படுகிறது.

தீவனம் உட்கொள்ளும அளவம் தீவன மாற்றுத் திறனும் அதிகரிக்கின்றன.

கோழிகளின் உடல் எடை சமச்சீராக இருக்கும்.

முட்டைக் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு:

சுமார் 30 வார வயதில் வான்கோழிகள் முட்டையிட ஆரம்பிக்கின்றன. வான்கோழிகளின் முட்டைகள் சுமார் 70 கிராம் இருக்கும். முட்டையிடும் கோழிகளுக்கு 14 விழுக்காடு புரதமும், 2900 கிலோ கலோரிகள் (1 கிலோவிற்கு) அடங்கிய தீவனம் அளித்தல் வேண்டும். இத்தீவனத்தைத் தயாரிக்கும் முறைப்பற்றி இங்கு காண்போம்.

மக்காச்சோளம் / வெள்ளைச் சோம்பு / கம்பு-50 பங்கு
சோயாபிண்ணாக்கு / கடலைப் பிண்ணாக்கு-22 பங்கு
அரிசித் தவிடு-19 பங்கு
மீன் தூள்-5 பங்கு
எண்ணெய்-1 பங்கு
தாது உப்புக் கலவை

(டிசிபி 1.0 சதவிகிதம், கால்சைட் 1.0 சதவிகிதம் மற்றும் கிளிஞ்சல் 1.0 சதவிகிதம்)-3 பங்கு
இத்துடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின் ஏ,டி -20 கிராம் மற்றும் பி வைட்டமின் 40 கிராம்) கலந்து தரவேண்டும்.

மேலும் முட்டைக்கோழிகளுக்குக் கிளிஞ்சல் தூள் 1 சதவிகிதம் சேர்த்துக் கொடுக்கவேண்டும். இதிலிருந்து முட்டை உற்பத்திக்குத் தேவையான கால்சியச் சத்து கிடைக்கிறது.

இனப்பெருக்கக் கோழிகளுக்குத் தீவனம் அளித்தல்:

முதல் 12-16 வாரங்களுக்கு இறைச்சி உற்பத்திக்காக வளர்க்கப்படும் வான்கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தையே இனப்பெருக்கக் கோழிகளுக்கும் அளிக்கலாம்.

அதன் பின்னர் இக்கோழிகள் கூடுதல் உடல் எடை அடைவதை தடுக்கக் தீவனக் கட்டுப்பாட்டு முறை அல்லது குறைவான புரதத் தீவனம் அளித்தல் முறை மூலம் உடல் பருமன் அடைவதைத் தடுக்கவேண்டும்.

இனப்பெருக்கக் கோழிகளுக்கு 12 விழுக்காடு புரதமும், 2900 கிலோ கலோரிகள் (1 கிலோவிற்கு) எரிசக்தியும் கொண்ட தீவனம் அளிக்கவேண்டும். இத்தீவனத்தைத் தயாரிப்பது எப்படி என்பதைப் பற்றிக் காண்போம்.

மக்காச்சோளம் / வெள்ளைச் சோம்பு / கம்பு-55 பங்கு
சோயாபிண்ணாக்கு / கடலைப் பிண்ணாக்கு-20 பங்கு
அரிசித் தவிடு-17 பங்கு
மீன் தூள்-5 பங்கு
தாது உப்புக் கலவை

(டிசிபி 1.0 சதவிகிதம், கால்சைட் 1.0 சதவிகிதம் மற்றும் கிளிஞ்சல் 1.0 சதவிகிதம்)-3 பங்கு
இத்துடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின் ஏ,டி -20 கிராம் மற்றும் பி வைட்டமின் 50 கிராம்) கலந்து தரவேண்டும்.

இனப்பெருக்கக் கோழிகளில் இருந்து கிடைக்கும் கருமுட்டைகளை அடை வைக்கும் போது சுமார் 10 சதவிகிதம் முட்டைகள் கரு உற்பத்தியாகாமல் இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு முக்கியக் காரணம் இனப்பெருக்கக் கோழிகளின் தீவனத்தில் போதிய அளவு வைட்டமின்கள் பி,இ மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் இல்லாமல் இருப்பதாகும்.

பெட்டைக் கோழிகளுக்கு மேற்கண்ட சத்துக்களுடன் மெக்னீசயம் சத்தும் கூடுதலாகச் சேர்த்து அளிக்கவேண்டும். வான்கோழிகளின் கருமுட்டை வளர்ச்சியின் போது 5-15 விழுக்காடு வரை கருக்கள் இறந்து விட வாய்ப்புள்ளது.

அதே போல் 10 விழுக்காடு வரை இளம் குஞ்சுகள் குஞ்சு பொரித்த ஓரிரு நாட்களில் இறந்து விடுவதும் உண்டு. இளம் குஞ்சுகள், அதிக எண்ணிக்கையில் இறப்பதைத் தடுக்க இனப்பெருக்கக் கோழிகளின் தீவனத்தில் தேவையான அனைத்துச் சத்துக்களும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும்.


வான்கோழி பராமரிப்பு முறைகள்:

நாட்டுக் கோழிகள் அல்லது வான்கோழிகள் மூலமாகக் குஞ்சுகள் பொரித்திருந்தால் தாய்க்கோழிகளே தம் குஞ்சுகளுக்குத் தீவனத்தைப் பொறுக்கி எடுத்துக் கொள்வதைக் கற்றுக் கொடுத்து விடும். தன்னுடைய காலால் கிளறி, தான் ஓரிரு தானியங்களைப் பொறுக்கிச் சாப்பிடுவதை பார்த்துக் குஞ்சுகளும் தான் ஓரிரு தானியங்களைப் பொறுக்கிச் சாப்பிடுவதைப் பார்த்து குஞ்சுகளும் தானியங்களை சாப்பிடப் பழகிவிடும்.

அடைகாத்தல்:
இயந்திரங்கள் மூலமாகப் பொரிக்கப்படும் குஞ்சுகளை கோழிக்குஞ்சுகள் வளர்ப்பது போல்
அடைக்காப்பான் அமைத்து மின்சார குண்டு விளக்கைப் பொட்டு தரையில் உமியிட்டு அதன் மேல் செய்தித்தாள்களை பரப்பிவிட்டு அதன் மேல் குஞ்சுகளை விடலாம்.

திறந்த தட்டுக்களில் தீவனம் வைத்திடவேண்டும். தண்ணீர்ப் பாத்திரங்களும் வைத்திட வேண்டும். தண்ணீர்ப் பாத்திரங்களும் வைத்து விட வேண்டும். இளம்குஞ்சுகளுக்குப் போதுமான வெப்பம் அளித்திடவேண்டும்.

தாய்க்கோழி எந்த அளவிற்கு வெப்பத்தைத் தன் குஞ்சுகளுக்கு தேவைப்படும் பொழுது அளிக்கிறதோ அந்த அளவிற்கச் செயற்கையாக வெப்பம் அளித்திடவேண்டும்.
நான்கு தீவனத்தட்டுகள், நான்குத் தண்ணீர்த் தட்டுகள் வைத்திடவேண்டும்.

வெப்பம் அளித்திட 100 வாட் மின்விளக்கு நான்குத் தரையிலிருந்து சுமார் 2 அடி உயரத்தில் தொங்கும் படி அமைத்துக் கொள்ளலாம். இதற்கு 2 அடி நீளமுள்ள இரண்டு மரப்பலகைகளை அல்லது பிளாஸ்டிக் பைப்களை எடுத்துக் கொண்டு கூட்டல் குறி வடிவத்தில் (+) பொருத்திக் கொள்ளலாம். ஓரங்களில் மின்விளக்கு பொருத்தக்கூடிய வகையில் மின் இணைப்பு கொடுக்கவேண்டும்.

இந்தக் கூட்டல் குறி வடிவ அமைப்பினைக் கயிற்றால் கட்டித் தொங்கவிடவேண்டும். அடைகாப்பானுக்குள் தரையிலிருந்து 2 அடி உயரத்தில் தொங்கும்படி விடலாம். இரு கட்டைகளின் நான்கு முனைகளிலும் மின்விளக்குகளைப் பொருத்தி மின்இணைப்பு கொடுத்து எரிய விடலாம். இரண்டு மின்விளக்குகளுக்கு ஒரு சுவிட்சு என்றக் கணக்கில் அமைத்துக் கொள்ளவும்.

தேவையான பொழுது நான்கு மின் விளக்குகளையும் எரிய விடலாம். அல்லது இரண்டு மின் விளக்குகளை அணைத்து விடலாம். இந்த அமைப்பினைத் தான் 'அடைகாப்பான்' என்று அழைக்கின்றோம். இதை ஆங்கிலத்தில் 'புருடர்' என்று அழைக்கின்றோம்.
இந்த புருடருக்குள் வான்கோழி, குஞ்சுகள் பொரித்த நாளிலிருந்து சுமார் 10 முதல் 14 நாட்கள் வரை வளர்க்கலாம்.

வெயில் காலமாக இருந்தால் செயற்கையாக மின்விளக்குகள் மூலமாக அளிக்கப்படும் வெப்பத்தைக் குறைத்துக் கொள்ளலாம். அதாவது 2 மின்விளக்குகள் மட்டும் எரிய விடலாம். மழைக்காலமாக இருந்தால் 4 மின்விளக்குகளையும் எரியவிடலாம். பகல் நேரத்தில் அதிக வெப்பம் இருந்தால் மின்விளக்குகளை அணைத்து விடலாம். இதைக் கண்டறிவது மிகவும் எளிது. உஷ்ணம் புருடரில் போதவில்லையெனில் எல்லாக் குஞ்சுகளும் ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து இருக்கும்.

அப்பொழுது சூட்டை அதிகப்படுத்திடவேண்டும். செயற்கை வெப்பம் அதிகமாக இருந்தால் அடைக்காப்பானின் ஓரத்திற்குச் சென்று விடும். சுறுசுறுப்பற்ற நிலையுடன் காணப்படும். மின்விளக்குகளுக்கு அடியில் வருவதற்கு தயங்கும். இதை உற்றுக் கவனித்தால் போதுமான சூடு அடைகாப்பானில் இருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளமுடியும.
தாய்க்கோழி அளிக்கும் அளவிற்கே சூடு கொடுத்திட வேண்டும்.

புருடருக்குள் வான்கோழி குஞ்சுகள்:

குஞ்சுகளின் இறகுகள் முழுமையாக வளருவதற்கு பொரித்த நாளிலிருந்து சுமார் 3 வார காலமாகும். அதுவரை தன்னுடைய உடல் வெப்பத்தை ஒரே சீராக வைத்துக் கொள்ளக் கூடிய அளவிற்கு மூளை வளர்ச்சி பறவையினத்திற்கு கிடையாது. அதற்காகத் தான் செயற்கை முறையில் வெப்பத்தை அளித்து வளர்க்கச் செய்கிறோம். அடைகாப்பான் பொருத்துவது தாய்க்கோழியின் அரவணைப்பில் இருப்பது போன்ற அமைப்பை ஏற்படுத்துவதற்குத் தான் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவேண்டும்.

வான்கோழிக் குஞ்சுகள் மிகக் குறைந்த காலத்தில் அதிக எடை பெறுவதால் அதனுடைய 2வது வார வயதிற்குள் உடல் முழுவதும் இறகுகள் வளர்ந்து விடும்.


ஆழ்கூள முறையில் வளர்க்கும் சமயத்தில் இரண்டாவது வாரத்திற்குப் பறிகு அதாவது 10 முதல் 14வது நாளுக்குப் பின் அடைகாப்பானை நீக்கிவிட்டு ஒரு குஞ்சுக்கு 0.5 சதுர அடி இடவசதி அளித்து வளர்க்கலாம்.

வான்கோழிக் குஞ்சுகள் மூன்று வார வயதிலிருந்து சுமார் ஐந்து வார வயதை அடையும் வரை படிப்படியாக இடவசதியை அதிகரித்து ஒரு சதுர அடி இடவசதியும் அதற்குப்பின் 8 வார வயதினை அடையும் சமயத்தில் 2 சதுர அடியும், 12 வார வயதினை அடையும் சமயத்தில் 3 சதுர அடியும், 12 வார வயதினை அடையும் சமயத்தில் 3 சதுர அடியும் கொடுக்கவேண்டும். இடவசதி குறைவாகக் கொடுத்தால் ஆழ்கூளம் ஈரமாகிவிடும். மேலும் பல நோய்ப்பிரச்சினை ஏற்படும்.


இனப்பெருக்கம்

செயற்கை முறைக் கருவூட்டல்:

சாதாரணமாக ஆண் வான்கோழிகள் அதிக எடை இருப்பதாலும், இனச்சோர்க்கையில் அதிக நாட்டம் இல்லாமல் இருப்பதாலும் பெரும்பாலான சமயங்களில் முறையான இனச்சேர்க்கை நடைபெறுவதில்லை. நல்ல முறையில் இனச்சேர்க்கை நடைபெறாத சமயத்தில் இடும் முட்டைகள் கருவுற்ற முட்டைகளாக இருக்காது.

எனவே இது போன்ற பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காகவே செயற்கை முறைக் கருவூட்டலைக் கையாளலாம்.

ஆண் கோழிகள் 9 மாத வயதானவுடன் அவைகளைப் பிடித்து மடி மீது உட்கார வைத்து ஒரு கையால் அவற்றின் வயிற்றுப் பகுதியையும் தேய்த்து விட்டால் ஆண் விந்து வெளிப்படும். இவ்வாறு தொடர்ந்து பழக்கப்படுத்தி வந்தால் ஒரு மாதக் காலத்தில் ஆண் கோழிகள் நல்ல முறையில் செயற்கையாக விந்தினை அளிக்கத் தொடங்கிவிடும்.

விந்துவுடன் எச்சம், சிறுநீர், தூசி, இரத்தம் ஆகியவை கலந்திருப்பதாலும் அதனைச் செயற்கைக் கண்ணாடிக் குவளையில் சேகரித்து, உடனடியாக 10 முதல் 15 நிமிடத்திற்குள் ஊசியாக செலுத்தப்படும் குழாயின் மூலம் பெட்டைக் கோழியின் கருப்பையினுள் செலுத்திவிடவேண்டும்.


முட்டையிடும் பருவக் காலத்தில் வாரம் ஒரு முறை மாலை வேளைகளில் முட்டையிட்ட பிறகு, செயற்கை முறைக் கருவூட்டல் செய்தால், கிடைக்கும் முட்டைகள் அனைத்தும் கருவுற்று இருக்கும்.


ஒவ்வொரு முறையும் ஒரு ஆண் வான்கோழியிலிருந்து செயற்கையாகக் கால் முதல் முக்கால் மில்லரி வரை விந்தினைப் பெற முடியும். இதைக் கொண்டு 10 முதல் 12 கோழிகளுக்கு செயற்கை முறைக் கருவூட்டல் செய்யலாம்.

மேலும் செயற்கை முறைக் கருவூட்டல் செய்யும் பொழுது அனைத்து வான்கோழிகளுக்கும் ஒரே நாளில் செய்யாமல் சுழற்சி முறையில், குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் செய்வது நல்லது.


வான்கோழிகளைகத் தாக்கும் நோய்களும், தடுப்பு முறைகளும்:

வான்கோழிகளைப் பராமரிக்கும் முறைகளில ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலோ அல்லது அவற்றின் உடல்களில் எதிர்ப்புச் சக்தி குறைந்தாலோ நோய்கள் அதிக அளவில் தாக்குகின்றன. ஆனால், வான்கோழிகள் சில குறிப்பிட்ட நோய்களுக்கு, கோழிகளைக் காட்டிலும் அதிக நோய் எதிர்ப்புச் சக்திக் கொண்டவை.

உதாரணமா நச்சுயிரி நோய்களான மேரக்ஸ் நோய் மற்றும் சிறு மூச்சுக் குழல் நோய், வான்கோழிகளைப் பெருமளவில் தாக்குவதில்லை. இராணிக்கெட், கோழி அம்மை மற்றும் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் இரத்தக் கழிச்சல் நோய் வான்கோழிகளைக் குறைந்த அளவிலேயே தாக்குகின்றன. நோய் எதிர்ப்புச் சக்தி இருப்பினும், சில வகை நோய்களிலிருந்து வான்கோழிகளால் தப்ப முடிவதில்லை.

குறிப்பாகக் கோழிக் காலரா, கோழி, டைபாய்டு, மைகோபிளாஸ்மா, நீலக் கொண்டை, கருப்புத்தலை, ஏரிசிபிலஸ் மற்றும் குடற்புழுக்களால் ஏற்படும் நோய்கள் மற்றும் தடுக்கும் முறைகளைத் தெரிந்து கொள்வோம்.


நோய்களால் பாதிக்கப்பட்ட வான்கோழிகளில் காணப்படும் அறிகுறிகள்
எந்தவகை நோயாக இருப்பினும், நோய் தாக்கப்பட்ட வான்கோழிகள் சோர்ந்தும், சுறுசுறுப்பில்லாமலும், தீவனம் உட்கொள்ளாமலும், தண்ணீர் அருந்தாமலும் இருக்கும். இவைகள் பொதுவான அறிகுறிகள்.


ஆனால், வான்கோழிகள் சில குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்படும் போது, அவற்றின் தன்மைக்குத் தகுந்தாற்போல் அறிகுறிகள் தென்படும். குறிப்பாக, சுவாச உறுப்புகள் சம்பந்தமான நோயினால் பாதிக்கப்படும் போது, மூக்கிலிருந்து சளி ஒழுகிக் கொண்டும், கண்கள் வீங்கியும், நீர் வடிந்து கொண்டும் இருக்கும். ஆனால், உணவுக் குழாய் சம்பந்தமான நோய்களால் அல்லது குடற்புழுக்களினால் பாதிக்கப்பட்டிருப்பின், வான்கோழிகளின் எச்சம் வழக்கத்தை விடக் கழிச்சலாகவோ அல்லது இரத்தம் கலந்தோ அல்லது வேறு நிறுத்துனோ காணப்படும்.

அதே சமயம் வெளிப்புற ஒட்டுண்ணிகள் அதிக அளவில் வான்கோழிகளைத் தாக்கும் போது, அவற்றின் இறகுகள் பளபளப்பின்றி வறண்டும், தத்தம் அலகுகளினால் இறக்கைப் பகுதிகளையும், உடலையும் அடிக்கடி தேய்த்து விட்டுக் கொண்டிருப்பதையும் காணலாம். சிலநேரங்களில், இந்த ஒட்டுண்ணிகள் இறகுகளில் ஒட்டிக் கொண்டிருப்பதையும் காணலாம்.
இளம் வான்கோழிக் குஞ்சுகளைப் பொறுத்தவரையில், எந்த ஒரு நோயினால் பாதிக்கப்படும் போதும், போதிய அளவு வெப்பம் இருந்தாலும் ஒன்றொடொன்று, கூட்டமாக மோதிக் கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காணலாம்.


இராணிக்கெட் நோய்

நச்சுயிரி (வைரஸ்) கிருமியினால் உண்டாகும் இந்த வகை நோயினால் பாதிக்கப்பட்ட வான்கோழிகள், வெள்ளை நிறத்தில் எச்சமிடுவதால், இது வெள்ளைக் கழிச்சல் நோய் எனவும் கூறப்படுகிறது. முட்டையிடும் பருவத்தில் இருக்கும் வான்கோழிகள் பாதிக்கப்படும் போது முட்டையின் தரம் குறைவதுடன் அவைகள் இடும் முட்டைகளின் எண்ணிக்கையும் அதிக அளவில் குறைந்து விடுகின்றது.

அதிக எண்ணிக்கையில் இறப்பும் ஏற்படும். மீதமுள்ள பிழைத்த முட்டையிடும் வான் கோழிகள் சுமார் நான்கு வாரங்களுக்குப் பின், பழைய எண்ணிக்கையை அடைந்து விடும். அத்துடன், லேசான சுவாசக் கோளாறுகளுக்கான அறிகுறிகளும் தென்படும். தேவையான தடுப்பூசியைப் போடுவதன் மூலம் இந்நோயிலிருந்து கோழிகளைக் காப்பாற்றலாம்.
அம்மை நோய்
இது வான்கோழிகளை அதிகமாகப் பாதிக்கும் நோயாகும். ஒரு வகை நச்சுயிரியால் ஏற்படும் இந்நோய். கோழி அம்மை வகையைச் சார்ந்தது. பாதிக்கப்பட்ட வான்கோழிக் குஞ்சுகளின் மூக்கு, வாய், தலை, கண், இமை ஆகிய பகுதிகளில் கொப்புளங்கள் போன்று கட்டிகள் தோன்றும். தடுப்பூசி போடுவதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம். இருப்பினும், கோழிகளைப் போல் நோய் எதிர்ப்பு சக்தியானது நீண்ட நாட்களுக்கு நீடித்து இருப்பதில்லை. மேலும் 3 அல்லது 4 மாத இடைவெளியில் மீண்டும் தடுப்பூசி போடுவதன் மூலம் நோய்த் தாக்குவதைத் தடுக்கலாம். நோய் வந்த பின் போரிக் களிம்பை வேப்பெண்ணையில் கலந்து கொப்புளங்களில் தடவலாம்.


மூக்கு மற்றும் மூச்சுக் குழல் வலை

நச்சுயிரியால் உண்டாகும் இந்த நோய், இளம் வான்கோழிக் குஞ்சுகளையே அதிகம் தாக்கக்கூடியது. மூக்கின் உட்பகுதியில் உள்ள எலும்புப் பகுதி பாதிக்கப்படுவதுடன் மூக்கின் சுவாசப் பாதை முழுவதும் சளி அடைத்துக் கொள்வதால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். இவ்வாறு பாதிக்கப்பட்ட வான்கோழிகளில் சுமார் 10 முதல் 15 சதவிகிதம் வரை, இத்துடன் எச்செரிச்சியா கோலை என்னும் பாக்டீரியா கிருமிகள் சேர்ந்து தாக்கும் போது, மூக்கில் இருக்கும் சளியானது சீழ்போன்று மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகமுண்டு. அத்துடன், கல்லீரலும், இதயமும் வீக்கத்துடன் இருப்பதையும் காணலாம்.

எரிசிபெலஸ்

இந்நோயினால் பாதிக்கப்பட்ட 13 வார வயதுக்கு மேற்பட்ட வான்கோழிகளின் தலைப்பகுதியின் தோளில் சொறி போன்ற புண்கள் ஏற்படும். தலையின் மீது இருக்கும் சிறிய சதைப் பகுதி வீங்கிக் காணப்படும். இந்நோயினால் பாதிக்கப்பட்ட ஆண் வான்கோழிகளின் விந்திலுள்ள உயிரணுக்கள், கருவுறச் செய்யும் தன்மையை இழந்து விடுகின்றன. நோயினால் பாதிக்கப்பட்ட வான்கோழிகளுக்கு, பென்சிலின் போன்ற உயிர்க்கொல்லி மருந்தை ஊசி மூலம் செலுத்தலாம்.

கோழிக் காலரா”

பாஸ்சுரெல்லா மல்டோசிடா என்னும் பாக்டீரியா கிருமிகளால் ஏற்படும் இந்த நோய், பத்து வாரங்களுக்கு மேற்பட்ட வான்கோழிகளையே அதிக அளவில் தாக்கும். அப்போது, 50 சதவிகிதத்திற்கு மேலாக இறப்பு நேரிடும். பாதிக்கப்பட்ட வான்கோழிகளுக்கு நுரையீரல் பாதிப்பினால் சளிக்காய்ச்சல் ஏற்படும்.

மேலும், நோய்வாய்ப்பட்ட வான்கோழிகள் சோர்ந்தும், தீனி எடுத்துக் கொள்ளாமலும், மூக்கு மற்றும் கண்ணிலிருந்து நிர் வடிந்து கொண்டும் இருக்கும். துர்நாற்றத்துடன் கூடிய கழிச்சலும் ஏற்படும். நாள்பட்ட நோயாக இருப்பின் மூச்சுத் திணறல், கால் நொண்டுதல், கழுத்து திருகிக் கொள்ளுதல் போன்ற அறிகுறிகளும் தென்படும்.

இறப்பறிசோதனை மேற்கொள்ளும் போது உடல் பகுதி முழுவதும் அதிக அளவில் சிவந்து இருப்பதுடன் உள்ளுறுப்புகள் அனைத்தும் இரத்தப் புள்ளிகளுடன் காணப்படும். குறிப்பாக, கல்லீரலின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டு வெள்ளை நிறப்புள்ளிகளாகத் தோன்றும்.


கோழி டைபாய்டு:

சால்மொனெல்லா கேலினேரம் எனும் பாக்டீரியா கிருமிகளால் ஏற்படும் இந்நோய் குறிப்பாக வளரும் மற்றும் வளர்ந்த நிலையிலுள்ள வான்கோழிகளைத் தாக்கும். தீவனம் உண்ணாமை, சோர்வு, குறவைாக முட்டையிடுதல் போன்ற பொதுவான அறிகுறிகள் காணப்பட்டாலும், நீர்த்த மற்றும் சளிக் கலந்தாற்போன்ற எச்சமே இந்த நோய்க்கான முக்கியமான நோய் அறிகுறியாகும். இந்த இளங்குஞ்சுகள் பாதிக்கப்படும் போது, மஞ்சள் நிறத்தில் எச்சம் காணப்படும். இறந்த கோழிகளைப் பரிசோதிக்கும் போது, உடல் பகுதிகள் மஞ்சள் நிறத்துடனும், குறிப்பாகக் கல்லீரல் கருமைக் கலந்த சிவப்பில் மினுமினுப்பாகக் காணப்படும்.


சுவாச நோய்கள்”

கொரைசா என்றழைக்கப்படும் இந்நோய் போர்ட்டெல்லா ஏவியம் என்னும் பாக்டீரியா கிருமிகளால் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட வான்கோழிக் குஞ்சுகளின் கண்கள் சிவந்தும், மூக்கில் நீர்வடிந்து கொண்டும் காணப்படும். அவைகள் மூச்சு விடும் போது இலேசான இரைச்சல் ஏற்படும். இறந்த கோழிகளில் இறப்பறி சோதனை மேற்கொள்ளும் போது, மூக்கின் துவாரங்களில் சளி அடைத்துக் கொண்டிருப்பதைத் தெளிவாகக் காணலாம். சுமார் 5 வார வயதுடைய கோழிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. இருப்பினும், முட்டையிடும் தருணத்தில் இந்த நோய் காணப்படும் போது தும்மல் அதிக அளவில் ஏற்படுகிறது.
இரத்தக் கழிச்சல் நோய்

அடினோ வைரஸ் எனப்படும் நச்சுயிரியால் ஏற்படும் இந்த நோய் 35 முதல் 50 நாட்களுக்குட்பட்ட வான்கோழிகளைத் தாக்கும் . பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு இரத்தத்துடன் கூடிய கழிச்சல் ஏற்படும். அதனால் கோழிகளின் பின்பக்க இறகுகள் இரத்தம்பட்டுக் காய்ந்து இருப்பதைக் காணலாம். இரத்தப் போக்கு அதிகம் இருப்பதால், கோழிகள் அதிகம் இறப்பதற்கு வாய்ப்புண்டு. இறந்த கோழிகளைப் பரிசோதிக்கும் போது, இரத்தச் சோகையால் உடல் வெளிறிக் காணப்படும்.

முகவீக்க நோய்:

மைக்கோப்ளாஸ்மா என்னும் கிருமிகளால் ஏற்படக்கூடிய இந்நோயானது மூக்குப் பகுதியில் காணப்படும் மென்மையான குருத்தெலும்புகளைப் பாதிக்கின்றது. அப்போது, அதிக அளவில் அப்பகுதியில் சளி கட்டிக்கொள்வதால், முகம் வீக்கமடைந்து காணப்படும். இறந்த கோழிகளைப் பரிசோதிக்கும் போது, கண்ணாடி போல் காட்சியளிக்க வேண்டிய காற்றுச் சவ்வானது சற்றே அழுக்கடைந்த நுரையுடன் காணப்படும். இந்நோயானது, மேலும் நாள்படும் போது காற்றுச் சவ்வுகளில் மாவு போன்ற பொருட்கள் ஒட்டிக் கொண்டு இருப்பதைக் கண்கூடாகக் காணலாம். இதுவே, இந்நோய்க்கான முக்கிய அறிகுறியாகும். மேலும் காலில் மூட்டுகளும் பாதிக்கப்பட்டு நீர் கோர்த்துக் கொள்ளும்.


பூஞ்சை நோய்கள்:

அஃப்ளோ நச்சு என்பது, ஒரு வகைப் பூஞ்சைக் காளானிலிருந்து உற்பத்தியாகக் கூடியது. கல்லீரலையே குறியாக வைத்துத் தாக்கக்கூடிய இந்த நச்சினால் பாதிக்கப்பட்ட வான்கோழிகள் சோர்ந்தும், தீனி எடுத்துக் கொள்ளாமலும், இறக்கைகள் தளர்ந்தும் காணப்படும். மேலும், இறந்த வான்கோழிகளைப் பிரேத இறப்பறிசோதனை செய்து பார்த்தால், உடல்பகுதி முழுவதும் சிவந்து வீக்கத்துடன் இருப்பது தெரியவரும். கல்லீரல் அளவில் பெருத்தும் சற்று தொட்டுப் பார்த்தால் கடினமாகவும் இருக்கும்.


கருப்புத்தலை நோய்:

இந்து நோய் ஹிஸ்டோமோனாஸ் மெலியாகிரிடிஸ் எனும் ஓரணு உயிரணுவால் ஏற்படக்கூடியது. இக்கிருமிகள், குடல் மட்டும் ஈரலை, கடுமையாகப் பாதிப்பதால், இரண்டு அல்லது மூன்று நாட்களில் வான்கோழிகள் அதிக அளவில் இறந்து விடும். அவைகள் மஞ்சள் நிறத்தில் எச்சமிடும். இந்நோய், உருண்டைப் புழுவின் முட்டைகளின் மூலமாகத் தீவனத்துடன் கலந்து, வயிற்றை அடைந்து நோயை உண்டாக்குகிறது. ஆகவே, இந்நோய் வராமல் தடுக்க முறையான குடற்புழு நீக்க மருந்து கொடுத்து வரவேண்டும்.
இரைப்பை வீங்கித் தொங்குதல் இரைப்பை தளர்ச்சியுறுவதே இவ்வகை நோய் ஏற்படுவதற்குக் காரணம்.

குறிப்பிட்ட சில வகையைச் சார்ந்த வான்கோழிகளிடையே இது பரம்பரை நோயாகக் காணப்படுகிறது. ஆனால் கடும் வெயில் காலங்களில் போதுமான அளவு தண்ணீர் கொடுக்காதிருப்பதே மிக முக்கியக் காரணம் ஆகும். இச்சமயத்தில், வான்கோழியின் இரைப்பை பெரிய கால்பந்து அளவில் கூட வீங்கி விடும். இது போன்ற நோயுள்ள வான்கோழி இடும் முட்டைகளையோ அல்லது ஆண் வான் கோழிகளால் அணைந்து கிடைக்கும் முட்டைகளையோ அடை வைத்துப் பொரிக்காமல் இருப்பது நல்லது.


நீலக்கொண்டை நோய்:
கரோனா எனும் நச்சுயிரியால் ஏற்படும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட வான்கோழிகளின் தலைப்பகுதியும், தோல் பகுதியும் கருப்பு நிறத்தில் மாறிவிடும். பாதிக்கப்பட்ட வான்கோழிக் குஞ்சுகள் சோர்வுடன் தீவனம் உண்ணாமல் இருக்கும். பச்சை நிறம் கலந்த பழுப்பு நிறத்தில் எச்சமிருக்கும். உயிர்க்கொல்லி மருந்துகளுடன் வைட்டமின்கள், தாது உப்புகள் கலந்து அளிக்கவேண்டும்.


வான்கோழிகளுக்கு நோய் ஏற்படாமல் தடுக்கும் முறைகள்:

அனைத்துத் தடுப்பூசிகளையும் உரிய காலத்தில் போடவேண்டும்.

தரமான குஞ்சுகளைச் சிறந்த பண்ணைகளிலிருந்து வாங்கவேண்டும்.

வான்கோழிகளைப் பராமரிக்கும் இடம், தண்ணீர் தேங்காத பகுதியாக இருக்கவேண்டும்.

நோய் தாக்கப்பட்ட பண்ணைகளிலிருந்து, வான்கோழிக் குஞ்சுகளை வாங்கக்கூடாது.

பண்ணைகளை எலித் தொல்லைகளிலிருந்து பாதுகாக்கவேண்டும்.

குடற்புழு நீக்க மருந்தை மாதம் ஒரு முறை கொடுப்பதன் மூலம் அக உண்ணிகளையும், தக்க மருந்து கலந்த நீரில் வான்கோழிகளை நனைத்து எடுப்பதன் மூலம் புற உண்ணிகளையும் கட்டுப்படுத்தவேண்டும்.

சுத்தமான தண்ணீர் மற்றும் தீவனத்தை அளிக்கவேண்டும்.

இறந்து போன வான்கோழிகளையோ, குஞ்சு பொரித்த முட்டைகளையோ உடனுக்குடன் அப்புறப்படுத்தி புதைத்தோ அல்லது எரித்தோ விடவேண்டும்.

நோய்களுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட ஆரம்பித்தாலோ அல்லது வான்கோழிகள் ஏதேனும் இறந்து விட்டாலோ, உடனே கால்நட மருத்துவரை அணுகி இறந்த வான்கோழிகளை இறப்பறிசோதனை செய்து எந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து மற்றக் கோழிகளுக்கு அந்நோய் பரவாத வண்ணம் தடுப்பு மருந்தைக் கொடுக்கவேண்டும்.

வான்கோழிகளை விற்பனை செய்தபின், ஒவ்வொரு முறையும் ஆழ்கூளம், எச்சம் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்தி பண்ணையை, கிருமி நாசினிக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

அந்தந்தப் பகுதிகளில் ஏற்படக்கூடிய பொதுவான நோய்களுக்குத் தகுந்தவாறு தடுப்பூசி போட்டு, வான்கோழிகளுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கவேண்டும்.

குறிப்பாக, இராணிக்கெட் நோய்க்கான லசோட்டா அல்லது ஆர்டிஎப் தடுப்பூசியை 2-7 நாட்களில் கண் அல்லது மூக்கில் இரண்டு சொட்டும், ஆர்டிவிகே என்னும் தடுப்பூசியை 8வது வாரத்தில், இறக்கையில் ஊசி மூலமும் அளிக்கவேண்டும். அதே போல், அம்மை நோய்க்காக, எப்பிவி என்னும் தடுப்பு மருந்தை இறக்கையில் ஊசி மூலம் 2-3 வது வார வயதில் கொடுக்கவேண்டும்.

மேலே கூறியவாறு சரியான நேரத்தில் நோய்க்கான காரணங்கைளக் கண்டறிவதன் மூலம் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும் வான்கோழிகளை நோய்களின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து இலாபகரமான முறையில் பண்ணைத் தொழிலை மேற்கொள்ளலாம்.

தாங்க்ஸ்:தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,கோயம்புத்தூர்

கருத்துகள் இல்லை: