யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

புதன், 7 மே, 2014

ஆயுளைக் கூட்டும் அற்புத அரிசி !


பலகாரத்துக்கேற்ற
 ரகம், சாதத்துக்கு ஏற்ற ரகம், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்ற ரகம்… என்று பாரம்பரிய நெல் ரகங்கள் ஒவ்வொன்றுக்குமே ஒவ்வொரு சிறப்பு குணமுண்டு. இதற்காகவே, இயற்கை வழி முறையில் விவசாயம் செய்பவர்கள் இப்படிப்பட்ட ரகங்களைத் தேடிப்பிடித்து பயிர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்… போன்ற நோய்களை விரட்டும் மருத்துவ குணமுள்ள ‘காலா நமக்’ எனப்படும் பாரம்பரிய நெல் ரகத்தை சாகுபடி செய்து வருகிறார், திருவண்ணாமலை மாவட்டம், பெரிய கொழப்பளூர் கிராமத்தைச் சேர்ந்த மருத்துவர் மணி.
இவர், 25.1.2012 தேதியிட்ட இதழில், வெளியான ‘வறட்சியிலும் வாடாத வரகு… பாடில்லாமல் தருமே வரவு!’ கட்டுரை மூலமாக வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான்.
கல்வி கொடுத்த ஐ.ஆர்.-8!
”நான், எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சிட்டு, பி.யூ.சி. படிக்க தாத்தாகிட்ட பணம் கேட்டேன். ‘படிக்கப் போக வேண்டாம், தறி நெய்ற வேலையைப் பார்’னு சொல்லிட்டார். அந்த சமயத்துலதான் ஐ.ஆர்.-8 நெல் ரகத்தை அறிமுகப்படுத்துனாங்க. அதை சாகுபடி செய்றதுக்கு ஏக்கருக்கு 400 ரூபாய் கூட்டுறவு சங்கம் மூலமா கடனும் கொடுத்தாங்க. ரேடியோவுல இந்த விஷயத்தைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, ‘கூட்டுறவுக் கடனை வாங்கிக் கொடுங்க ஒரு ஏக்கர்ல பயிர் வெச்சு, வழக்கமா விளையுற 15 மூட்டையை உங்களுக்குக் கொடுத்துடறேன். மீதியை நான் எடுத்துக்கிறேன்’னு தாத்தாகிட்ட கேட்டேன். அவரும் வாங்கிக் கொடுத்தார்.
ஐ.ஆர்.-8 ரகத்தை சாகுபடி பண்ணுனப்போ, ஒரு ஏக்கர்ல 80 மூட்டை (75 கிலோ) நெல் கிடைச்சது. அதுல 40 மூட்டையை வீட்டுக்குக் கொடுத்திட்டு, 40 மூட்டையை வித்துதான் நான் படிச்சேன். அதுக்கப்பறம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துல பேராசிரியரா வேலை பார்க்கும்போதுதான், ரசாயன விவசாயத்தோட பாதிப்பைத் தெரிஞ்சுக்கிட்டேன். அதனால, திரும்பவும் இயற்கை முறை விவசாயத்துக்கே திரும்பிட்டேன்.
எனக்கு இயற்கை விவசாயம் செய்யவும், விவசாயத்துல புதுவிதமான தொழில்நுட்பங்களைச் சிந்திக்கவும் தூண்டி விட்டது, நம்மாழ்வாரும்… பசுமை விகடனும்தான்” என்று முன்கதை சொன்னவர், தொடர்ந்தார்.
‘இப்ப 40 ஏக்கர்ல இயற்கை விவசாயம் செஞ்சுக்கிட்டிருக்கேன்.
5 ஏக்கர்ல தென்னை, மா, குமிழ் இருக்கு. ஒன்றரை ஏக்கர்ல வெட்டிவேர்; ஒன்றரை ஏக்கர்ல பசுந்தீவனம்; 10 ஏக்கர்ல வரகுனு இருக்கு. 14 ஏக்கர்ல இருந்த பொன்னியை அறுவடை பண்ணியாச்சு. ரெண்டு ஏக்கர்ல சீரக சம்பா நெல் இருக்கு. அரை ஏக்கர்ல அடுத்த போகத்துக்கு நாத்து விட்டிருக்கேன். அரை ஏக்கர்ல கருங்குறுவை நெல்லும், நாலு ஏக்கர்ல ‘காலா நமக்’ நெல்லும் அறுவடைக்குத் தயாரா இருக்குது. மீதி ஒரு ஏக்கர்ல கட்டடமும் வண்டிப்பாதையும் இருக்கு” என்றவர், ‘காலா நமக்’ ரகத்தைப் பற்றிச் சொன்னார்.
புத்தருக்குப் பிடித்த ரகம்!
”காலா என்ற சொல்லுக்கு ஹிந்தியில ‘கருப்பு’னு அர்த்தம். ‘நமக்’னா ‘உப்பு’னு அர்த்தம். உடம்புக்கு மொத்தம் 72 வகையான தாது உப்புகள் தேவையாம். அதுல கிட்டத்தட்ட 40 தாது உப்புகள் இந்த காலா நமக் ரக நெல்லுல இருக்கறதா சொல்றாங்க.
மூளை நரம்பு இயங்காமை, சிறுநீரகப் பிரச்னை, கேன்சர், தோல் சம்பந்தமான நோய்கள், ரத்த சம்பந்தமான நோய்கள்னு நிறைய நோய்கள் இந்த ரக அரிசியை சாப்பிட்டா கட்டுப்படும்.
புத்தர் இந்த அரிசியில செஞ்ச உணவை மட்டும் சாப்பிடுவாராம். இப்பவும் புத்த பிட்சுக்கள் எங்க போனாலும், இந்த நெல்லையும், அரிசியையும் கையோட எடுத்துக்கிட்டுப் போறாங்க. அவங்கள்லாம் அதிக வயசு வாழறதுக்குக் காரணம் இந்த அரிசிதான்” என்று வரலாற்றுத் தகவல்களைச் சொல்லி பிரமிப்பூட்டியவர், காலா நமக் நெல் சாகுபடி செய்யும் முறைகளைச் சொன்னார். அவற்றை இங்கே தொகுத்திருக்கிறோம்.
ஏக்கருக்கு 30 கிலோ விதை!
காலா நமக் ரகத்தின் வயது 120 நாட்கள். ஆடி முதல், கார்த்திகை வரை உள்ள மாதங்களில் சாகுபடி செய்யலாம். சாதாரண நடவு முறையில் ஏக்கருக்கு 30 கிலோ விதைநெல் தேவைப்படும். ஒரு ஏக்கருக்குத் தேவையான நாற்றுகளை உற்பத்தி செய்ய, 5 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். 50 கிலோ மட்கிய தொழுவுரத்தைப் போட்டு, ரெண்டு சால் சேற்று உழவு செய்து நிலத்தை சமப்படுத்திக் கொள்ள வேண்டும். 100 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் அமுதக்கரைசல் கலந்து, அதில் 30 கிலோ விதைநெல்லை சணல் சாக்கில் இட்டு கட்டி, 12 மணி நேரம் ஊறவைத்து எடுத்து… தண்ணீரை வடித்து 12 மணி நேரம் இருட்டறையில் வைத்திருக்க வேண்டும். பிறகு நான்கு அங்குல உயரத்துக்கு நாற்றங்காலில் தண்ணீர் கட்டி விதைக்க வேண்டும்.
12 மணி நேரம் கழித்து, நாற்றங்காலில் உள்ள தண்ணீரை வடித்து விட வேண்டும். இது போல நான்கு நாட்களுக்குச் செய்ய வேண்டும். இந்த சமயத்தில் முளைப்பு எடுத்து விடும். அதற்குப் பிறகு தண்ணீரை வடிக்க வேண்டியதில்லை. 10-ம் நாள், 10 லிட்டர் தண்ணீருக்கு, ஒரு லிட்டர் வடிகட்டிய மாட்டுச் சிறுநீரைக் கலந்து தெளித்தால், பூச்சி-நோய் தாக்குதல் இருக்காது. நாற்றும் நன்றாக வளர்ந்து வரும். 25 முதல் 30 நாட்களுக்குள் நடவுக்குத் தயாராகி விடும்.
நாற்று தயாராகும் சமயத்திலேயே நடவு வயலையும், தயார் செய்துவிட வேண்டும். நடவு வயலில் இரண்டு சால் சேற்று உழவு செய்து சமப்படுத்தி, ஏக்கருக்கு 200 கிலோ தொழுவுரத்தை இட்டு, சாதாரண முறையில் அரையடி இடைவெளியில் குத்துக்கு, இரண்டு மூன்று நாற்றுக்களாக நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 20-ம் நாளில் தொழுவுரம் இடவேண்டும். 25-ம் நாளில் கைகளால் களை எடுக்க வேண்டும். அதற்குமேல் பயிர் வளர்ந்து மூடிக் கொள்வதால், களைகள் வளர்வதில்லை.
மகசூலைக் கூட்டும் மோர்க் கரைசல்!
90-ம் நாளில் கதிர் பிடிக்கத் துவங்கும். இச்சமயத்தில் 10 லிட்டர் தண்ணீருக்கு, ஒரு லிட்டர் மோர் (ஒரு வாரம் வரை புளிக்க வைத்தது) என்ற விகிதத்தில் கலந்து… ஏக்கருக்கு 10 டேங்க் தெளித்துவிட வேண்டும். இதனால், சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்படும். 105-ம் நாளுக்கு மேல் கதிர் முற்றத் துவங்கும். 110-ம் நாள் தண்ணீர் கட்டுவதை நிறுத்தி, 120-ம் நாளில் அறுவடை செய்யலாம்.
ஏக்கருக்கு 54 ஆயிரம் ரூபாய் !
நிறைவாகப் பேசிய மணி, ”தூருக்கு இருபதுல இருந்து இருபத்தஞ்சு சிம்புகளும், ஒரு சிம்புக்கு நூத்தி இருபதுல இருந்து, நூத்தம்பது மணிகளும் இருந்துச்சு. அறுவடை செஞ்சப்போ, ஏக்கருக்கு 20 மூட்டை (75 கிலோ) கிடைச்சுது. எப்பவும் நான் அரிசியா மாத்திதான் விப்பேன்.
நான் மருத்துவரா இருக்கறதால, என்கிட்ட சிகிச்சைக்காக வர்றவங்களே பெரும்பாலும் வாங்கிடறாங்க. மீதியை பசுமை அங்காடிகள் மூலமா விற்பனை பண்ணிடறேன்.
ஒரு மூட்டைக்கு 45 கிலோ அரிசி வீதம் 20 மூட்டைக்கு 900 கிலோ அரிசி கிடைக்கும். ஒரு கிலோ 60 ரூபாய்னு வித்தா… 54 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். செலவு போக, 39 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும்” என்று சொல்லி சந்தோஷமாக விடை கொடுத்தார்.
தொடர்புக்கு,
மணி, செல்போன்: 96294-66328.

 மகசூலைக் கூட்டும் கழுநீர்!
மணி, மாட்டுக் கொட்டகை கழுவிய நீரையும் உரமாகப் பயன்படுத்தி வருகிறார். அது பற்றிப் பேசிய அவர், ”இயற்கை விவசாயத்துக்காக நாட்டுமாடுகளை வெச்சுருக்கேன். வழக்கமா எரு மட்டும் போடுற நிலத்தைவிட, ஆட்டுக்கிடை மடக்குற நிலத்துல அதிக மகசூல் கிடைக்கும். அதுக்கு காரணம் ஆடுகளோட மூத்திரமும் நிலத்துல விழறதுதான்.
இதை வெச்சே… மாட்டுச் சாணத்தையும், மூத்திரத்தையும் சேர்த்தே வயல்ல விடலாம்னு நினைச்சேன். அதுக்காக, 60 அடி நீளம், 20 அடி அகலம், 8 அடி ஆழத்தில் கான்கிரீட் தொட்டி கட்டியிருக்கேன். மாடு கட்டுற இடத்துல கிடைக்கற மூத்திரம், சாணத்தைக் கழுவி இந்த தொட்டியில விட்டு, நாலு நாள் தேக்கி வெச்சா அதுல நிறைய நுண்ணுயிரிகள் பெருகிடும். அந்தத் தண்ணியை வாரம் ஒரு தடவை நெல் வயலுக்கு விடுறப்போ மகசூல் கூடுது. இந்தத்தொட்டி மேல ஆடு, கோழி, புறானு வளர்க்கப் போறேன். அதுங்களோட எச்சமும் சேர்றதால… இன்னும் சத்துள்ள உரத்தண்ணி கிடைக்கும்” என்று தொழில்நுட்ப தகவல்களைப் பகிர்ந்தார்.

சோலார் பம்ப்செட்டுக்கு 80% மானியம்… வாரிக் கொடுக்கும், பொறியியல் துறை…

தற்போதைய சூழ்நிலையில், விவசாயப் பரப்பு குறைந்துகொண்டே வருவதற்கு… வறட்சி மற்றும் இயற்கைச் சீற்றங்கள் என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், விவசாயத் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதும் முக்கிய காரணம். அதனால், விவசாயத்தில் உழவு முதல் அறுவடை வரையில் பலவிதமான இயந்திரங்களின் தேவை அவசியமாகிக் கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப பல கருவிகளும் சந்தைக்கு வந்த வண்ணம் உள்ளன.

இப்படிப்பட்ட கருவிகளை வாடகைக்கு விடுவதன் மூலமாகவும், மானியம் கொடுத்து சொந்தமாக வாங்க ஏற்பாடு செய்வதன் மூலமாகவும்… இயந்திரங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் வேலையைத் தொடர்ச்சியாக செய்து வருகிறது, தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறை. இத்துறையின் செயல்பாடுகள் பற்றி, வேலூர் மாவட்ட வேளாண் பொறியியல் துறையின் செயற்பொறியாளர் இன்பநாதன் சொன்ன தகவல்கள் இங்கே இடம்பிடிக்கின்றன.
நிலத்தைச் சமன்படுத்த 910 ரூபாய்…
”விவசாயிகளுக்கு மிகவும் குறைந்த நாட்களுக்கு மட்டுமே தேவைப்படும் புல்டோசர், டிராக்டர், அறுவடை இயந்திரம்… போன்ற கருவிகளைக் குறைந்த கட்டணத்தில் வாடகைக்குக் கொடுத்து வருகிறோம். நீர்ப்பாசனத்தை முறையாக செய்வதற்கு நிலம் சமமாக இருக்க வேண்டும். அப்படி நிலத்தைச் சமன்படுத்து வதற்கு பயன்படுத்தப்படும் புல்டோசர் இயந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கான வாடகை, 910 ரூபாய். சேற்று உழவு, புழுதி உழவு செய்வதற்குத் தேவையான டிராக்டருக்கு ஒரு மணி நேரத்துக்கு 370 ரூபாய். டயர் மூலமாக இயங்கக்கூடிய நெல் அறுவடை இயந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு 910 ரூபாய் என நிர்ணயம் செய்திருக்கிறோம். இக்கருவிகளை வாடகைக்குக் கேட்டு ஒரே நேரத்தில் பலர் அணுகும்போது, பதிவு முன்னுரிமை அடிப்படையில், அனுப்பி வைப்போம்.
நிலத்தடி நீரைக் கண்டுபிடிக்கும் கருவி!
தவிர, பாசனக் கிணறுகளில் இருக்கும் பாறைகளை, வெடி வைத்து உடைத்து ஆழப்படுத்தும் கருவிகளும் உண்டு. இக்கருவிக்கு ஒரு நாளுக்கு 250 ரூபாய் வாடகை. கிணறு, போர்வெல் போன்றவற்றை அமைப்பதற்கு முன்பாக எங்கள் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால்… நீரோட்டம் உள்ள பகுதிகளையும் ஆய்வு செய்து கொடுக்கிறோம். அதற்காக, விவசாய நிலங்களுக்கு 500 ரூபாய் கட்டணமும், மற்ற இடங்களுக்கு 1,000 ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டியிருக்கும்.
புதிய கருவிகளுக்கு 50% மானியம்!
வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் கருவிகள் வாங்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதிகபட்ச மானியமாக… பவர் டில்லருக்கு 45 ஆயிரம் ரூபாய்; டிராக்டருக்கு 45 ஆயிரம் ரூபாய்; ரோட்டவேட்டருக்கு 20 ஆயிரம் ரூபாய்; டிராக்டர் மூலம் இயங்கும் இயந்திரங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய்; ஒருங்கிணைந்த கதிர் அறுவடை இயந்திரத்துக்கு 4 லட்சம் ரூபாய் என வழங்கப்படுகிறது. தவிர, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்துக்கு வந்துள்ள நெல் நடவு இயந்திரம், நேரடி நெல் விதைக்கும் கருவி, தென்னை மட்டையைத் தூளாக்கும் கருவி, களை எடுக்கும் கருவிகள், பயிர் பாதுகாப்புக் கருவிகள், பல வகை தானியம் அடிக்கும் கருவிகள்… போன்றவற்றுக்கு 50% மானியம் உண்டு.
பயிற்சியும் உண்டு..!
வேலூர், திருச்சி, திருவாரூர், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய ஆறு மாவட்டங்களில் டிராக்டர் பழுதுபார்க்கும் மையங்கள் உள்ளன. இம்மையங்களில்… எழுதப் படிக்க தெரிந்த கிராமப்புற இளைஞர்களுக்கு வேளாண் கருவிகள் பராமரித்தல் மற்றும் பழுது பார்த்தல் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இப்பயிற்சியில் சேர்பவர்களுக்கு ஊக்கத்தொகையும் உண்டு. ஒவ்வோர் ஆண்டும் ஒரு குழுவுக்கு 50 பேர் வீதம், இரண்டு குழுக்களுக்கு 3 மாத காலம் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி தேவைப்படுவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
இளைஞர்களுக்கு முழு மானியத்தில் இயந்திரம்!
‘உழவர் குழுக்கள்’ திட்டத்தின் கீழ் 16 இளைஞர்களை ஒன்றாகச் சேர்த்து குழு அமைத்து… அவர்களுக்கு இயந்திரங்களை இயக்குவது, இயந்திர நடவுக்கான நாற்றுகளை உற்பத்தி செய்வது போன்ற தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொடுக்கிறோம். இத்திட்டத்தின் கீழ், நான்கு பவர் டில்லர்கள், நான்கு நெல் நடவு இயந்திரங்கள், நான்கு களை எடுக்கும் இயந்திரங்கள் என 12 இயந்திரங்களை 100 சதவிகித மானியத்தில் கொடுக்கிறோம். இக்குழுக்களை எங்களின் கண்காணிப்பில் வைத்து, தேவையான ஆலோசனைகளைக் கொடுத்து வருகிறோம். இதுபற்றிய விவரங்கள் தேவைப்படுபவர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
சோலார் பம்ப் செட்டுக்கு 80% மானியம்!
மின்சாரப் பற்றாக்குறையால் பாசனம் தடைபடும் பிரச்னையைப் போக்க, போர்வெல் மற்றும் கிணறுகளில்
5 ஹெச்.பி. திறன் கொண்ட சோலார் பம்ப் செட்டுகள் அமைத்துக்கொள்ள 80% மானியம் வழங்கப்படுகிறது. விவசாயி தனது பங்காக 20% தொகை யையும் அதற்கான வரித்தொகையையும் செலுத்த வேண்டும். அதாவது, போர்வெல் பாசனமாக இருந்தால், வரியுடன் சேர்த்து, 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவாகும். இதில் 3 லட்சத்து, 35 ஆயிரத்து 200 ரூபாய் மானியமாகக் கிடைக்கும். பயனாளி தனது பங்காக 1 லட்சத்து 4 ஆயிரத்து 800 ரூபாய் செலுத்த வேண்டும்.
கிணற்றுப் பாசனத்துக்கு வரியுடன் சேர்த்து, 5 லட்சத்து ஆயிரத்து 500 ரூபாய் செலவாகும். இதில் 3 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மானியமாகக் கிடைக்கும். பயனாளி தனது பங்காக, 1 லட்சத்து 17 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும்.  இத்திட்டத்தில் பயன்பெற… 200 முதல் 300 அடி ஆழத்தில் தண்ணீர் இருக்க வேண்டும். கண்டிப்பாக சொட்டு நீர்ப்பாசனம் அமைத்திருக்க வேண்டும் அல்லது சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பதாக உத்தரவாதம் கொடுக்க வேண்டும்” என்று மிகவும் விரிவாகப் பேசிய இன்பநாதன்,
”இன்றையச் சூழ்நிலையில் ஆள்பற்றாக்குறை, மின்தட்டுப்பாடு போன்ற பிரச்னைகளைச் சமாளிக்க இதுபோன்ற கருவிகள், இயந்திரங்கள் அவசியம். அதனால், அரசு வழங்கும் சலுகைகளை முறையாக விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அழைப்பு வைத்தார்!