யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

புதன், 7 மே, 2014

பட்டதாரி இளைஞரின் பலே விவசாயம்!

வெண்டை, கீரை, அவரை, மிளகாய்... 3மாதம் 90 ஆயிரம்...

காலநிலை மாறுபாடு, வறட்சி, இயற்கைச் சீற்றங்கள்... என விவசாயம் பொய்த்துப் போவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால், நன்கு விளைந்து அதிக மகசூல் கிடைக்கும் சூழ்நிலையிலும், விளைபொருட்களுக்கு விலை குறைந்து பிரச்னை வந்துவிடும். குறிப்பாக, ஒரே பயிரையே அதிகப் பரப்பில் சாகுபடி செய்யும் விவசாயி களுக்குத்தான் இந்த பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. ஆனால், குறைந்த பரப்பாக இருந்தாலும், பலவித பயிர்களைக் கலந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, விலை பிரச்னை பெரியளவில் வருவதில்லை. ஏனெனில், ஒரு பயிர் கைவிடும்போது... இன்னொரு பயிர் காப்பாற்றி விடுகிறது. இந்த சூட்சமத்தைத் தெரிந்து வைத்திருக்கும் பலர், நல்ல வருமானம் ஈட்டி வருகிறார் கள். அவர்களில் ஒருவர்... காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் பரத்.
பேராசிரியர் விதைத்த வித்து!
காலைவேளை ஒன்றில், தன் தோட்டத்தில் பரத் வேலை செய்து கொண்டிருந்தபோது சந்தித்தோம். ''சென்னை, பச்சையப்பா காலேஜ்ல எம்.எஸ்.சி ஜுவாலஜி படிச்சுட்டு இருந்த சமயத்துல, பஞ்சகவ்யா பத்தி ஒரு பேராசிரியர் சொன்னார். அந்த விஷயத்துல எனக்கு ஆர்வம் வந்து, அதைப்பத்தி நிறைய விஷயங்களைத் தேட ஆரம்பிச்சேன். படிப்பு முடிஞ்சதும், தமிழ்நாடு அரசின் பசுமையாக்கல் திட்டத்துல உதவி ஆராய்ச்சியாளரா தற்காலிகப் பணியில சேர்ந்தேன். வண்டலூர் வன ஆராய்ச்சி நிலையத்துக்கு உட்பட்ட கொளப்பாக்கம் பகுதியில மரங்களை ஆய்வு செஞ்சு அறிக்கை கொடுக்கறதுதான் வேலை. அங்கதான், மரங்கள்ல இலையைச் சாப்பிடற பூச்சிகள், தண்டுகள துளைக்கிற வண்டுகள், வேரை பாதிக்கிற பூச்சிகள் பத்தியெல்லாம் அனுபவரீதியா தெரிஞ்சுக்கிட்டேன். குறிப்பா, தேக்கு மரத்துல இலைப்புள்ளி நோய், இலைக்கருகல் நோயோட பாதிப்பு அதிகமா இருந்துச்சு. அந்த மரங்களுக்கு பஞ்சகவ்யாவைக் கொடுத்தப்போ பூச்சிகள் கட்டுப்பட்டுச்சி. நன்மை செய்ற பூச்சிகளும் நிறைய வந்துச்சி. புதுசா வெச்ச மரக் கன்றுகளுக்கு பஞ்சகவ்யா கொடுத்தப்போ, வளர்ச்சி அபரிமிதமா இருந்துச்சி. அப்போதான், 'இதைப் பயன்படுத்தி நாம ஏன் விவசாயம் செய்யக்கூடாது?’னு யோசனை வந்துச்சி. இதுதான், இன்னிக்கு என்னையும் ஒரு விவசாயியா உங்ககிட்ட பேச வெச்சிருக்கு.
நிறைய இயற்கை... கொஞ்சம் செயற்கை!
நாலு வருஷமா அப்பாவோடு சேர்ந்து விவசாயம் பாத்துட்டிருக்கேன். இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, வேலை பார்த்துட்டு இருக்குற தம்பி பாஸ்கரனும் லீவு நாட்கள்ல எங்களோட சேர்ந்துக்கு வான். ஒரே பயிரைப் போடுறப்போதான், பூச்சிகள், நோய்கள், விலை இல்லாம போறதுனு பல பிரச்னைகள் வரும். அதனால, கீரை, காய்கறிகள், நெல்னு கலந்துதான் சாகுபடி செய்றோம். கொஞ்சம் ரசாயனம், கொஞ்சம் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம்னு கலந்து விவசாயம் செய்றோம். நண்பர் மூலமா சீரகச் சம்பா விதைநெல் கிடைச்சுது. 20 சென்ட்ல அதை விதைச்சு... பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் ரெண்டையும் சேத்துக் கொடுத்ததுல நல்லா வளந்துச்சு. இப்போ ஊர்க்காரங்கள்லாம் என்கிட்ட பஞ்சகவ்யா பத்தி கேக்க ஆரம்பிச்சிட்டாங்க'' என்ற பரத், தொடர்ந்தார்.
கலப்புப் பயிரோடு கறவை மாடுகளும்!
''மொத்தம் ரெண்டு ஏக்கர் இருக்கு. செம்மண் கலந்த சரளை மண். அதனால, எந்தப் பயிர் வெச்சாலும் தங்கமா விளையும். 15 சென்ட்ல கோ-4 தீவனப் பயிர், 10 சென்ட்ல மிளகாய் (இந்த 25 சென்ட்லயே 20 செம்மரம், 20 மகோகனி, 20 தேக்குக் கன்றுகள 6 க்கு 6 இடைவெளியில் நடவு போட்டிருக்கிறார்), 30 சென்ட்ல வெண்டை, 30 சென்ட்ல கீரை அதுல ஊடுபயிரா அவரையும், 20 சென்ட்ல கனகாம்பரம், 10 சென்ட்ல ராகி, 15 சென்ட்ல தனியாக கீரையும், 30 சென்ட்ல கீரை அதுல ஊடுபயிரா நூக்கல், முள்ளங்கி, பாம்பு வெள்ளரியை போட்டிருக்கேன். மீதி 40 சென்ட்ல வெண்டையும், நெல்லும் அறுவடை முடிச்சுருக்கேன். மூணு மாடுகள், மூணு கன்னுகுட்டிகளும் இருக்கு. அதுல, ரெண்டு மாடு கறவையில இருக்கு. ஒரு மாடு சினையா இருக்கு. மரப்பயிர், கனகாம்பரம், ராகி இதெல்லாம் இப்பத்தான் நடவு போட்டு வளர்ந்துகிட்டிருக்கு. இதுல மகசூல் பார்க்க இன்னும் நாளாகும்.

சிறுகீரையை 17-வது நாள்ல இருந்து அறுவடை பண்ணலாம். அரைக்கீரை, முளைக்கீரை ரெண்டையும் 20-வது நாள்ல அறுவடை பண்ணலாம். தொடர்ந்து, 5 நாள் வரை கீரை பறிக்கலாம். தனித்தனியா மேட்டுப்பாத்தி அமைச்சு, ஒவ்வொரு பாத்தியிலயும் ரெண்டு நாள் இடைவெளியில விதைகளைத் தூவுவேன். இப்படி செய்யுறப்போ, தொடர்ந்து 20 நாளுக்கு கீரை பறிக்க முடியுது. மேட்டுப்பாத்திங்கிறதால, மழைக் காலத்துல தண்ணி தேங்காது. அதேமாதிரி சுழற்சி முறையில்தான் பயிர் நடவு செய்றேன். ஒரு முறை கீரை போட்டா... அந்த நிலத்துல அடுத்த முறை வெண்டை, அடுத்த முறை நெல், அடுத்த முறை கேழ்வரகுனு மாத்தி மாத்தி பயிர் செய்றப்போ, நிலத்துல சத்துக்கள் குறையறதில்லை.
நிலத்திலேயே விதை வங்கி!
இப்போ, கடைகள்ல 1 கிலோ விதை சிறுகீரை-180 ரூபாய், முளைக்கீரை-300 ரூபாய், அரைக்கீரை-400 ரூபாய்னு விதைகளை விற்பனை பண்றாங்க. விலை கூடுதலா இருக்கறதால... நானே விதையை உற்பத்தி பண்ணிக்கிறேன். எவ்வளவு விதை தேவையோ... அந்தளவுக்கான கீரைகளை மட்டும் பறிக்காம நிலத்துல விட்டுட்டா 40-45 நாள்ல விதை வந்துடும். அப்படியே கீரையை வேரோட பிடுங்கி, ஒரு வாரத்துக்கு காய வெச்சு கம்பால தட்டி தூத்துனா, விதைகள் கிடைச்சுடும். இதனால, விதைச்செலவு குறைஞ்சுடுது'' என்ற பரத் வருமானம் பற்றிச் சொன்னார்.
3 மாதங்கள்... 90 ஆயிரம் ரூபாய்!
''30 சென்ட்ல இருக்கற வெண்டை அறுவடை முடிஞ்சிருக்கு. ஒரு அறுப்புக்கு ஏறக்குறைய 60 கிலோ வரைக்கும் கிடைச்சுது. எனக்கு மொத்தம் 22 அறுப்பு மூலமா 1,300 கிலோ காய் கிடைச்சுது. ஒரு கிலோ 13 ரூபாய்ல இருந்து 18 ரூபாய் வரைக்கும் வித்துச்சி. சராசரியா 15 ரூபாய் கிடைக்கும். அப்படி பார்த்தா... 1,300 கிலோ மூலமா, 19 ஆயிரத்து 500 ரூபாய் கிடைச்சுது. வருஷத்துல மூணு முறை இப்படி வெண்டை போட்டுடுவேன்.
கீரை மொத்தம் 75 சென்ட்ல இருக்கு. இதுல தனியா 15 சென்ட்ல இருக்கற கீரை இன்னும் அறுவடைக்கு வரல. 60 சென்ட் கீரை மூலமா... 3 ஆயிரத்து 800 கட்டு கீரை அறுவடை செஞ்சு, கட்டு 6 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல, 22 ஆயிரத்து 800 ரூபாய் கிடைச்சுது. இந்த 60 சென்ட் கீரையில ஊடுபயிரா போட்டிருந்த வெள்ளரி, முள்ளங்கி, நூக்கல் எல்லாத்துலயும் சேர்த்து 5,800 ரூபாய் கிடைச்சுது. இதுல ஊடுபயிரா இருக்கற அவரையில 300 கிலோ கிடைச்சுது. கிலோ 20 ரூபாய் வீதம் விற்பனை செய்ததுல... 6 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. மிளகாய்ல 7 ஆயிரத்து 500 ரூபாய் கிடைச்சுது. ஆகக்கூடி மூணு மாசத்துல கிடைக்கிற மொத்த வருமானம்... 61 ஆயிரத்து 600 ரூபாய்.
மாடு வளர்க்கறதால... பால் மூலமா மாசம் 9 ஆயிரம் 660 ரூபாய் கிடைக்குது. இதையே மூணு மாசத்துக்கு கணக்குப் போட்டா..
28 ஆயிரம் 980 ரூபாய் கிடைக்குது. ஆக, 1 ஏக்கர் 70 சென்ட் நிலத்துல இருக்கற பயிர் மற்றும் மூணு கறவை மாடுகள் மூலமா, 90 ஆயிரத்து 580 ரூபாய் கிடைக்குது. மூணு மாசத்துக்கான செலவு 23,200. லாபம்...
67 ஆயிரத்து 380 ரூபாய். மாசத்துக்கு 22 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம கிடைக்கும்'' என்ற பரத், நிறைவாக, ''எவ்வளவு நல்ல விலை கிடைச்சாலும், ஒரே காயை அதிகப் பரப்புல சாகுபடி செய்ய மாட்டேன். கலந்து பயிர் செய்றதால எனக்கு விலை கிடைக்கலைங்கிற பிரச்னை இல்லை. நிறைய பேர் என்கிட்ட 'நல்ல படிப்பு படிச்சுட்டு விவசாயத்தை ஏன் பாக்குற’னு கேக்குறாங்க. அதுக்காக நான் ஒரு நாளும் வருத்தப்பட்டதில்லை. மழை மட்டும் கைகொடுத்தா, இன்னும் கூடுதலாவே என்னால சம்பாதிக்க முடியும். நல்ல மனநிறைவோட எனக்கு பிடிச்ச வேலையை சந்தோஷமா செஞ்சுட்டு இருக்கேன்'' என்று புன்னகையோடு விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, பரத்,
செல்போன்: 99766-92219.

ஆயுளைக் கூட்டும் அற்புத அரிசி !


பலகாரத்துக்கேற்ற
 ரகம், சாதத்துக்கு ஏற்ற ரகம், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்ற ரகம்… என்று பாரம்பரிய நெல் ரகங்கள் ஒவ்வொன்றுக்குமே ஒவ்வொரு சிறப்பு குணமுண்டு. இதற்காகவே, இயற்கை வழி முறையில் விவசாயம் செய்பவர்கள் இப்படிப்பட்ட ரகங்களைத் தேடிப்பிடித்து பயிர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்… போன்ற நோய்களை விரட்டும் மருத்துவ குணமுள்ள ‘காலா நமக்’ எனப்படும் பாரம்பரிய நெல் ரகத்தை சாகுபடி செய்து வருகிறார், திருவண்ணாமலை மாவட்டம், பெரிய கொழப்பளூர் கிராமத்தைச் சேர்ந்த மருத்துவர் மணி.
இவர், 25.1.2012 தேதியிட்ட இதழில், வெளியான ‘வறட்சியிலும் வாடாத வரகு… பாடில்லாமல் தருமே வரவு!’ கட்டுரை மூலமாக வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான்.
கல்வி கொடுத்த ஐ.ஆர்.-8!
”நான், எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சிட்டு, பி.யூ.சி. படிக்க தாத்தாகிட்ட பணம் கேட்டேன். ‘படிக்கப் போக வேண்டாம், தறி நெய்ற வேலையைப் பார்’னு சொல்லிட்டார். அந்த சமயத்துலதான் ஐ.ஆர்.-8 நெல் ரகத்தை அறிமுகப்படுத்துனாங்க. அதை சாகுபடி செய்றதுக்கு ஏக்கருக்கு 400 ரூபாய் கூட்டுறவு சங்கம் மூலமா கடனும் கொடுத்தாங்க. ரேடியோவுல இந்த விஷயத்தைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, ‘கூட்டுறவுக் கடனை வாங்கிக் கொடுங்க ஒரு ஏக்கர்ல பயிர் வெச்சு, வழக்கமா விளையுற 15 மூட்டையை உங்களுக்குக் கொடுத்துடறேன். மீதியை நான் எடுத்துக்கிறேன்’னு தாத்தாகிட்ட கேட்டேன். அவரும் வாங்கிக் கொடுத்தார்.
ஐ.ஆர்.-8 ரகத்தை சாகுபடி பண்ணுனப்போ, ஒரு ஏக்கர்ல 80 மூட்டை (75 கிலோ) நெல் கிடைச்சது. அதுல 40 மூட்டையை வீட்டுக்குக் கொடுத்திட்டு, 40 மூட்டையை வித்துதான் நான் படிச்சேன். அதுக்கப்பறம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துல பேராசிரியரா வேலை பார்க்கும்போதுதான், ரசாயன விவசாயத்தோட பாதிப்பைத் தெரிஞ்சுக்கிட்டேன். அதனால, திரும்பவும் இயற்கை முறை விவசாயத்துக்கே திரும்பிட்டேன்.
எனக்கு இயற்கை விவசாயம் செய்யவும், விவசாயத்துல புதுவிதமான தொழில்நுட்பங்களைச் சிந்திக்கவும் தூண்டி விட்டது, நம்மாழ்வாரும்… பசுமை விகடனும்தான்” என்று முன்கதை சொன்னவர், தொடர்ந்தார்.
‘இப்ப 40 ஏக்கர்ல இயற்கை விவசாயம் செஞ்சுக்கிட்டிருக்கேன்.
5 ஏக்கர்ல தென்னை, மா, குமிழ் இருக்கு. ஒன்றரை ஏக்கர்ல வெட்டிவேர்; ஒன்றரை ஏக்கர்ல பசுந்தீவனம்; 10 ஏக்கர்ல வரகுனு இருக்கு. 14 ஏக்கர்ல இருந்த பொன்னியை அறுவடை பண்ணியாச்சு. ரெண்டு ஏக்கர்ல சீரக சம்பா நெல் இருக்கு. அரை ஏக்கர்ல அடுத்த போகத்துக்கு நாத்து விட்டிருக்கேன். அரை ஏக்கர்ல கருங்குறுவை நெல்லும், நாலு ஏக்கர்ல ‘காலா நமக்’ நெல்லும் அறுவடைக்குத் தயாரா இருக்குது. மீதி ஒரு ஏக்கர்ல கட்டடமும் வண்டிப்பாதையும் இருக்கு” என்றவர், ‘காலா நமக்’ ரகத்தைப் பற்றிச் சொன்னார்.
புத்தருக்குப் பிடித்த ரகம்!
”காலா என்ற சொல்லுக்கு ஹிந்தியில ‘கருப்பு’னு அர்த்தம். ‘நமக்’னா ‘உப்பு’னு அர்த்தம். உடம்புக்கு மொத்தம் 72 வகையான தாது உப்புகள் தேவையாம். அதுல கிட்டத்தட்ட 40 தாது உப்புகள் இந்த காலா நமக் ரக நெல்லுல இருக்கறதா சொல்றாங்க.
மூளை நரம்பு இயங்காமை, சிறுநீரகப் பிரச்னை, கேன்சர், தோல் சம்பந்தமான நோய்கள், ரத்த சம்பந்தமான நோய்கள்னு நிறைய நோய்கள் இந்த ரக அரிசியை சாப்பிட்டா கட்டுப்படும்.
புத்தர் இந்த அரிசியில செஞ்ச உணவை மட்டும் சாப்பிடுவாராம். இப்பவும் புத்த பிட்சுக்கள் எங்க போனாலும், இந்த நெல்லையும், அரிசியையும் கையோட எடுத்துக்கிட்டுப் போறாங்க. அவங்கள்லாம் அதிக வயசு வாழறதுக்குக் காரணம் இந்த அரிசிதான்” என்று வரலாற்றுத் தகவல்களைச் சொல்லி பிரமிப்பூட்டியவர், காலா நமக் நெல் சாகுபடி செய்யும் முறைகளைச் சொன்னார். அவற்றை இங்கே தொகுத்திருக்கிறோம்.
ஏக்கருக்கு 30 கிலோ விதை!
காலா நமக் ரகத்தின் வயது 120 நாட்கள். ஆடி முதல், கார்த்திகை வரை உள்ள மாதங்களில் சாகுபடி செய்யலாம். சாதாரண நடவு முறையில் ஏக்கருக்கு 30 கிலோ விதைநெல் தேவைப்படும். ஒரு ஏக்கருக்குத் தேவையான நாற்றுகளை உற்பத்தி செய்ய, 5 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். 50 கிலோ மட்கிய தொழுவுரத்தைப் போட்டு, ரெண்டு சால் சேற்று உழவு செய்து நிலத்தை சமப்படுத்திக் கொள்ள வேண்டும். 100 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் அமுதக்கரைசல் கலந்து, அதில் 30 கிலோ விதைநெல்லை சணல் சாக்கில் இட்டு கட்டி, 12 மணி நேரம் ஊறவைத்து எடுத்து… தண்ணீரை வடித்து 12 மணி நேரம் இருட்டறையில் வைத்திருக்க வேண்டும். பிறகு நான்கு அங்குல உயரத்துக்கு நாற்றங்காலில் தண்ணீர் கட்டி விதைக்க வேண்டும்.
12 மணி நேரம் கழித்து, நாற்றங்காலில் உள்ள தண்ணீரை வடித்து விட வேண்டும். இது போல நான்கு நாட்களுக்குச் செய்ய வேண்டும். இந்த சமயத்தில் முளைப்பு எடுத்து விடும். அதற்குப் பிறகு தண்ணீரை வடிக்க வேண்டியதில்லை. 10-ம் நாள், 10 லிட்டர் தண்ணீருக்கு, ஒரு லிட்டர் வடிகட்டிய மாட்டுச் சிறுநீரைக் கலந்து தெளித்தால், பூச்சி-நோய் தாக்குதல் இருக்காது. நாற்றும் நன்றாக வளர்ந்து வரும். 25 முதல் 30 நாட்களுக்குள் நடவுக்குத் தயாராகி விடும்.
நாற்று தயாராகும் சமயத்திலேயே நடவு வயலையும், தயார் செய்துவிட வேண்டும். நடவு வயலில் இரண்டு சால் சேற்று உழவு செய்து சமப்படுத்தி, ஏக்கருக்கு 200 கிலோ தொழுவுரத்தை இட்டு, சாதாரண முறையில் அரையடி இடைவெளியில் குத்துக்கு, இரண்டு மூன்று நாற்றுக்களாக நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 20-ம் நாளில் தொழுவுரம் இடவேண்டும். 25-ம் நாளில் கைகளால் களை எடுக்க வேண்டும். அதற்குமேல் பயிர் வளர்ந்து மூடிக் கொள்வதால், களைகள் வளர்வதில்லை.
மகசூலைக் கூட்டும் மோர்க் கரைசல்!
90-ம் நாளில் கதிர் பிடிக்கத் துவங்கும். இச்சமயத்தில் 10 லிட்டர் தண்ணீருக்கு, ஒரு லிட்டர் மோர் (ஒரு வாரம் வரை புளிக்க வைத்தது) என்ற விகிதத்தில் கலந்து… ஏக்கருக்கு 10 டேங்க் தெளித்துவிட வேண்டும். இதனால், சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்படும். 105-ம் நாளுக்கு மேல் கதிர் முற்றத் துவங்கும். 110-ம் நாள் தண்ணீர் கட்டுவதை நிறுத்தி, 120-ம் நாளில் அறுவடை செய்யலாம்.
ஏக்கருக்கு 54 ஆயிரம் ரூபாய் !
நிறைவாகப் பேசிய மணி, ”தூருக்கு இருபதுல இருந்து இருபத்தஞ்சு சிம்புகளும், ஒரு சிம்புக்கு நூத்தி இருபதுல இருந்து, நூத்தம்பது மணிகளும் இருந்துச்சு. அறுவடை செஞ்சப்போ, ஏக்கருக்கு 20 மூட்டை (75 கிலோ) கிடைச்சுது. எப்பவும் நான் அரிசியா மாத்திதான் விப்பேன்.
நான் மருத்துவரா இருக்கறதால, என்கிட்ட சிகிச்சைக்காக வர்றவங்களே பெரும்பாலும் வாங்கிடறாங்க. மீதியை பசுமை அங்காடிகள் மூலமா விற்பனை பண்ணிடறேன்.
ஒரு மூட்டைக்கு 45 கிலோ அரிசி வீதம் 20 மூட்டைக்கு 900 கிலோ அரிசி கிடைக்கும். ஒரு கிலோ 60 ரூபாய்னு வித்தா… 54 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். செலவு போக, 39 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும்” என்று சொல்லி சந்தோஷமாக விடை கொடுத்தார்.
தொடர்புக்கு,
மணி, செல்போன்: 96294-66328.

 மகசூலைக் கூட்டும் கழுநீர்!
மணி, மாட்டுக் கொட்டகை கழுவிய நீரையும் உரமாகப் பயன்படுத்தி வருகிறார். அது பற்றிப் பேசிய அவர், ”இயற்கை விவசாயத்துக்காக நாட்டுமாடுகளை வெச்சுருக்கேன். வழக்கமா எரு மட்டும் போடுற நிலத்தைவிட, ஆட்டுக்கிடை மடக்குற நிலத்துல அதிக மகசூல் கிடைக்கும். அதுக்கு காரணம் ஆடுகளோட மூத்திரமும் நிலத்துல விழறதுதான்.
இதை வெச்சே… மாட்டுச் சாணத்தையும், மூத்திரத்தையும் சேர்த்தே வயல்ல விடலாம்னு நினைச்சேன். அதுக்காக, 60 அடி நீளம், 20 அடி அகலம், 8 அடி ஆழத்தில் கான்கிரீட் தொட்டி கட்டியிருக்கேன். மாடு கட்டுற இடத்துல கிடைக்கற மூத்திரம், சாணத்தைக் கழுவி இந்த தொட்டியில விட்டு, நாலு நாள் தேக்கி வெச்சா அதுல நிறைய நுண்ணுயிரிகள் பெருகிடும். அந்தத் தண்ணியை வாரம் ஒரு தடவை நெல் வயலுக்கு விடுறப்போ மகசூல் கூடுது. இந்தத்தொட்டி மேல ஆடு, கோழி, புறானு வளர்க்கப் போறேன். அதுங்களோட எச்சமும் சேர்றதால… இன்னும் சத்துள்ள உரத்தண்ணி கிடைக்கும்” என்று தொழில்நுட்ப தகவல்களைப் பகிர்ந்தார்.