யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.
வீட்டுக் காய்கறி தோட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீட்டுக் காய்கறி தோட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 மே, 2014

பட்டதாரி இளைஞரின் பலே விவசாயம்!

வெண்டை, கீரை, அவரை, மிளகாய்... 3மாதம் 90 ஆயிரம்...

காலநிலை மாறுபாடு, வறட்சி, இயற்கைச் சீற்றங்கள்... என விவசாயம் பொய்த்துப் போவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால், நன்கு விளைந்து அதிக மகசூல் கிடைக்கும் சூழ்நிலையிலும், விளைபொருட்களுக்கு விலை குறைந்து பிரச்னை வந்துவிடும். குறிப்பாக, ஒரே பயிரையே அதிகப் பரப்பில் சாகுபடி செய்யும் விவசாயி களுக்குத்தான் இந்த பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. ஆனால், குறைந்த பரப்பாக இருந்தாலும், பலவித பயிர்களைக் கலந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, விலை பிரச்னை பெரியளவில் வருவதில்லை. ஏனெனில், ஒரு பயிர் கைவிடும்போது... இன்னொரு பயிர் காப்பாற்றி விடுகிறது. இந்த சூட்சமத்தைத் தெரிந்து வைத்திருக்கும் பலர், நல்ல வருமானம் ஈட்டி வருகிறார் கள். அவர்களில் ஒருவர்... காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் பரத்.
பேராசிரியர் விதைத்த வித்து!
காலைவேளை ஒன்றில், தன் தோட்டத்தில் பரத் வேலை செய்து கொண்டிருந்தபோது சந்தித்தோம். ''சென்னை, பச்சையப்பா காலேஜ்ல எம்.எஸ்.சி ஜுவாலஜி படிச்சுட்டு இருந்த சமயத்துல, பஞ்சகவ்யா பத்தி ஒரு பேராசிரியர் சொன்னார். அந்த விஷயத்துல எனக்கு ஆர்வம் வந்து, அதைப்பத்தி நிறைய விஷயங்களைத் தேட ஆரம்பிச்சேன். படிப்பு முடிஞ்சதும், தமிழ்நாடு அரசின் பசுமையாக்கல் திட்டத்துல உதவி ஆராய்ச்சியாளரா தற்காலிகப் பணியில சேர்ந்தேன். வண்டலூர் வன ஆராய்ச்சி நிலையத்துக்கு உட்பட்ட கொளப்பாக்கம் பகுதியில மரங்களை ஆய்வு செஞ்சு அறிக்கை கொடுக்கறதுதான் வேலை. அங்கதான், மரங்கள்ல இலையைச் சாப்பிடற பூச்சிகள், தண்டுகள துளைக்கிற வண்டுகள், வேரை பாதிக்கிற பூச்சிகள் பத்தியெல்லாம் அனுபவரீதியா தெரிஞ்சுக்கிட்டேன். குறிப்பா, தேக்கு மரத்துல இலைப்புள்ளி நோய், இலைக்கருகல் நோயோட பாதிப்பு அதிகமா இருந்துச்சு. அந்த மரங்களுக்கு பஞ்சகவ்யாவைக் கொடுத்தப்போ பூச்சிகள் கட்டுப்பட்டுச்சி. நன்மை செய்ற பூச்சிகளும் நிறைய வந்துச்சி. புதுசா வெச்ச மரக் கன்றுகளுக்கு பஞ்சகவ்யா கொடுத்தப்போ, வளர்ச்சி அபரிமிதமா இருந்துச்சி. அப்போதான், 'இதைப் பயன்படுத்தி நாம ஏன் விவசாயம் செய்யக்கூடாது?’னு யோசனை வந்துச்சி. இதுதான், இன்னிக்கு என்னையும் ஒரு விவசாயியா உங்ககிட்ட பேச வெச்சிருக்கு.
நிறைய இயற்கை... கொஞ்சம் செயற்கை!
நாலு வருஷமா அப்பாவோடு சேர்ந்து விவசாயம் பாத்துட்டிருக்கேன். இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, வேலை பார்த்துட்டு இருக்குற தம்பி பாஸ்கரனும் லீவு நாட்கள்ல எங்களோட சேர்ந்துக்கு வான். ஒரே பயிரைப் போடுறப்போதான், பூச்சிகள், நோய்கள், விலை இல்லாம போறதுனு பல பிரச்னைகள் வரும். அதனால, கீரை, காய்கறிகள், நெல்னு கலந்துதான் சாகுபடி செய்றோம். கொஞ்சம் ரசாயனம், கொஞ்சம் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம்னு கலந்து விவசாயம் செய்றோம். நண்பர் மூலமா சீரகச் சம்பா விதைநெல் கிடைச்சுது. 20 சென்ட்ல அதை விதைச்சு... பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் ரெண்டையும் சேத்துக் கொடுத்ததுல நல்லா வளந்துச்சு. இப்போ ஊர்க்காரங்கள்லாம் என்கிட்ட பஞ்சகவ்யா பத்தி கேக்க ஆரம்பிச்சிட்டாங்க'' என்ற பரத், தொடர்ந்தார்.
கலப்புப் பயிரோடு கறவை மாடுகளும்!
''மொத்தம் ரெண்டு ஏக்கர் இருக்கு. செம்மண் கலந்த சரளை மண். அதனால, எந்தப் பயிர் வெச்சாலும் தங்கமா விளையும். 15 சென்ட்ல கோ-4 தீவனப் பயிர், 10 சென்ட்ல மிளகாய் (இந்த 25 சென்ட்லயே 20 செம்மரம், 20 மகோகனி, 20 தேக்குக் கன்றுகள 6 க்கு 6 இடைவெளியில் நடவு போட்டிருக்கிறார்), 30 சென்ட்ல வெண்டை, 30 சென்ட்ல கீரை அதுல ஊடுபயிரா அவரையும், 20 சென்ட்ல கனகாம்பரம், 10 சென்ட்ல ராகி, 15 சென்ட்ல தனியாக கீரையும், 30 சென்ட்ல கீரை அதுல ஊடுபயிரா நூக்கல், முள்ளங்கி, பாம்பு வெள்ளரியை போட்டிருக்கேன். மீதி 40 சென்ட்ல வெண்டையும், நெல்லும் அறுவடை முடிச்சுருக்கேன். மூணு மாடுகள், மூணு கன்னுகுட்டிகளும் இருக்கு. அதுல, ரெண்டு மாடு கறவையில இருக்கு. ஒரு மாடு சினையா இருக்கு. மரப்பயிர், கனகாம்பரம், ராகி இதெல்லாம் இப்பத்தான் நடவு போட்டு வளர்ந்துகிட்டிருக்கு. இதுல மகசூல் பார்க்க இன்னும் நாளாகும்.

சிறுகீரையை 17-வது நாள்ல இருந்து அறுவடை பண்ணலாம். அரைக்கீரை, முளைக்கீரை ரெண்டையும் 20-வது நாள்ல அறுவடை பண்ணலாம். தொடர்ந்து, 5 நாள் வரை கீரை பறிக்கலாம். தனித்தனியா மேட்டுப்பாத்தி அமைச்சு, ஒவ்வொரு பாத்தியிலயும் ரெண்டு நாள் இடைவெளியில விதைகளைத் தூவுவேன். இப்படி செய்யுறப்போ, தொடர்ந்து 20 நாளுக்கு கீரை பறிக்க முடியுது. மேட்டுப்பாத்திங்கிறதால, மழைக் காலத்துல தண்ணி தேங்காது. அதேமாதிரி சுழற்சி முறையில்தான் பயிர் நடவு செய்றேன். ஒரு முறை கீரை போட்டா... அந்த நிலத்துல அடுத்த முறை வெண்டை, அடுத்த முறை நெல், அடுத்த முறை கேழ்வரகுனு மாத்தி மாத்தி பயிர் செய்றப்போ, நிலத்துல சத்துக்கள் குறையறதில்லை.
நிலத்திலேயே விதை வங்கி!
இப்போ, கடைகள்ல 1 கிலோ விதை சிறுகீரை-180 ரூபாய், முளைக்கீரை-300 ரூபாய், அரைக்கீரை-400 ரூபாய்னு விதைகளை விற்பனை பண்றாங்க. விலை கூடுதலா இருக்கறதால... நானே விதையை உற்பத்தி பண்ணிக்கிறேன். எவ்வளவு விதை தேவையோ... அந்தளவுக்கான கீரைகளை மட்டும் பறிக்காம நிலத்துல விட்டுட்டா 40-45 நாள்ல விதை வந்துடும். அப்படியே கீரையை வேரோட பிடுங்கி, ஒரு வாரத்துக்கு காய வெச்சு கம்பால தட்டி தூத்துனா, விதைகள் கிடைச்சுடும். இதனால, விதைச்செலவு குறைஞ்சுடுது'' என்ற பரத் வருமானம் பற்றிச் சொன்னார்.
3 மாதங்கள்... 90 ஆயிரம் ரூபாய்!
''30 சென்ட்ல இருக்கற வெண்டை அறுவடை முடிஞ்சிருக்கு. ஒரு அறுப்புக்கு ஏறக்குறைய 60 கிலோ வரைக்கும் கிடைச்சுது. எனக்கு மொத்தம் 22 அறுப்பு மூலமா 1,300 கிலோ காய் கிடைச்சுது. ஒரு கிலோ 13 ரூபாய்ல இருந்து 18 ரூபாய் வரைக்கும் வித்துச்சி. சராசரியா 15 ரூபாய் கிடைக்கும். அப்படி பார்த்தா... 1,300 கிலோ மூலமா, 19 ஆயிரத்து 500 ரூபாய் கிடைச்சுது. வருஷத்துல மூணு முறை இப்படி வெண்டை போட்டுடுவேன்.
கீரை மொத்தம் 75 சென்ட்ல இருக்கு. இதுல தனியா 15 சென்ட்ல இருக்கற கீரை இன்னும் அறுவடைக்கு வரல. 60 சென்ட் கீரை மூலமா... 3 ஆயிரத்து 800 கட்டு கீரை அறுவடை செஞ்சு, கட்டு 6 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல, 22 ஆயிரத்து 800 ரூபாய் கிடைச்சுது. இந்த 60 சென்ட் கீரையில ஊடுபயிரா போட்டிருந்த வெள்ளரி, முள்ளங்கி, நூக்கல் எல்லாத்துலயும் சேர்த்து 5,800 ரூபாய் கிடைச்சுது. இதுல ஊடுபயிரா இருக்கற அவரையில 300 கிலோ கிடைச்சுது. கிலோ 20 ரூபாய் வீதம் விற்பனை செய்ததுல... 6 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. மிளகாய்ல 7 ஆயிரத்து 500 ரூபாய் கிடைச்சுது. ஆகக்கூடி மூணு மாசத்துல கிடைக்கிற மொத்த வருமானம்... 61 ஆயிரத்து 600 ரூபாய்.
மாடு வளர்க்கறதால... பால் மூலமா மாசம் 9 ஆயிரம் 660 ரூபாய் கிடைக்குது. இதையே மூணு மாசத்துக்கு கணக்குப் போட்டா..
28 ஆயிரம் 980 ரூபாய் கிடைக்குது. ஆக, 1 ஏக்கர் 70 சென்ட் நிலத்துல இருக்கற பயிர் மற்றும் மூணு கறவை மாடுகள் மூலமா, 90 ஆயிரத்து 580 ரூபாய் கிடைக்குது. மூணு மாசத்துக்கான செலவு 23,200. லாபம்...
67 ஆயிரத்து 380 ரூபாய். மாசத்துக்கு 22 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம கிடைக்கும்'' என்ற பரத், நிறைவாக, ''எவ்வளவு நல்ல விலை கிடைச்சாலும், ஒரே காயை அதிகப் பரப்புல சாகுபடி செய்ய மாட்டேன். கலந்து பயிர் செய்றதால எனக்கு விலை கிடைக்கலைங்கிற பிரச்னை இல்லை. நிறைய பேர் என்கிட்ட 'நல்ல படிப்பு படிச்சுட்டு விவசாயத்தை ஏன் பாக்குற’னு கேக்குறாங்க. அதுக்காக நான் ஒரு நாளும் வருத்தப்பட்டதில்லை. மழை மட்டும் கைகொடுத்தா, இன்னும் கூடுதலாவே என்னால சம்பாதிக்க முடியும். நல்ல மனநிறைவோட எனக்கு பிடிச்ச வேலையை சந்தோஷமா செஞ்சுட்டு இருக்கேன்'' என்று புன்னகையோடு விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, பரத்,
செல்போன்: 99766-92219.

புதன், 19 மார்ச், 2014

மாடித்தோட்ட வெள்ளாமை!

எங்களுக்கும் வயல்வெளிகளில் உழைக்கத்தான் ஆசை. ஆனால், எங்கே உழைப்பது என்றுதான் தெரியவில்லை’ நிலமற்றவர்களின் இந்தக் குரல், சிற்றிதழ் ஒன்றில் பதிவாகி இருந்தது. இதேபோல… ‘எங்களுக்கும் விவசாயம் செய்ய ஆசைதான்… ஆனால், எங்கே போய் விதைப்பது?’ என்கிற ஆதங்கம், விவசாய ஆர்வமுள்ள நகர்ப்புறவாசிகளிடம் நிறையவே இருக்கிறது. இவர் களுக்கெல்லாம் வழிகாட்டுவது போல… வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், சமையலறைத் தோட்டம் என்று பலரும் காய்கறி உற்பத்தியில் கலக்கிக் கொண்டுள்ளனர்!ஈரோடு, திண்டல், காரப்பாறை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், மாடித்தோட்டத்தில் வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருக்கிறார். அம்மா சரஸ்வதி, மனைவி கல்பனா சகிதம் மாடித்தோட்டப் பராமரிப்பிலிருந்தவரைச் சந்தித்தபோது… தகுந்த இடைவெளியில் வரிசையாக அணிவகுத்து நின்ற தொட்டிச் செடிகளை வருடியபடியே பேசினார்.
”எனக்குச் சொந்த ஊர் சத்தியமங்கலம். படிச்சு முடிச்சு அமெரிக்காவுல ஐ.டி. கம்பெனியில வேலை பார்த்தேன். பிறகு, ஈரோடு வந்து இந்த இடத்துல வீடு கட்டி குடியிருக்கேன். கம்ப்யூட்டர் சம்பந்தமான பயிற்சி நிறுவனத்தை வீட்டுலயே நடத் திட்டுருக்கேன். ரெண்டு வருஷமா மாடியில தோட்டம் அமைச்சு காய்கறி, கீரை, மூலிகைனு வளர்த்துட்டிருக்கேன்.

ஆரம்பத்துல எட்டு கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற மார்க்கெட்டுக்கு போய்தான் காய்களை வாங்கிட்டு வருவோம். சில நேரத்துல நாம விரும்புற காய்களைவிட, கிடைக்கற காய்களைத்தான் வாங்க வேண்டி யிருக்கும். விலையும் கட்டுப்படியா இருக்காது. இந்த சமயத்துலதான், மாடித்தோட்ட ஆசை வந்துச்சு. தங்கைகளோட வீட்டுல மாடித்தோட்டம் போட்டிருக்காங்க. அதை யெல்லாம் பாத்துட்டு வந்து, இயற்கை முறையில வீட்டுத்தோட்டம் அமைச் சுட்டோம்” என்று முன்னுரை கொடுத்த சிவக்குமார், தோட்ட அமைப்பு முறைகளை விளக்கினார்.
”மொத்தம் 1,500 சதுர அடியில தோட்டம் இருக்கு. 600 சதுர அடி பரப்புல நிழல் வலைப் பந்தல் போட்டிருக்கோம். மாடித் தோட்டம் அமைக்கறதுக்கு முதல்கட்டமா, காலி டப்பா, டின்கள், பழைய பக்கெட்டுக்கள், கிரீஸ் டப்பாக்கள், மண்தொட்டிகள்னு பயன்பாடு முடிஞ்ச பொருட்களா சேகரிச் சோம். 150 சட்டி செம்மண், 30 மூட்டை தேங்காய் மஞ்சி ரெண்டையும் சரிசமமா கலந்து, தண்ணீர் தெளிச்சு கலக்கி, நிழல்ல காய வெச்சு… அதுல நாலு சட்டி, ஒரு கிலோ சாணம், அரை கிலோ ஆட்டு எரு, கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கு கலந்து, தொட்டிகள்ல நிரப்பி செடிகளை நட்டு வெச்சோம்” என்று தொழில்நுட்பங்களோடு சொன்னார்.

தரை சேதமாவதில்லை!மகனைத் தொடர்ந்த சரஸ்வதி, ”சிறுசு, நடுத்தரம், பெருசுனு 350 தொட்டிகள்ல செடிகளை வளர்க்கிறோம். மொட்டை மாடியில மழைநீர்ச் சேமிப்புத் தொட்டியும் அமைச்சுருக்கோம். அதுல சேகரமாகற தண்ணி, வீட்டுக் கழிவு நீர் ரெண்டையும்தான் செடிகளுக்கு ஊத்து றோம். வீட்டுக்கு வாங்கற லாரி தண்ணியையும் ஊத்துவோம். நீளமான மரப்பலகைய வெச்சு, அது மேல தொட்டிகளை வெக்கறதால, தரை ஈரமாகி சேதாரம் ஆகற தில்லை. ஒவ்வொரு செடியோட வளர்ச்சியைப் பொறுத்து, தொட்டிகளோட உயரத்தை அமைச்சுக் கணும். காலையில ஒரு மணி நேரம் சாயங் காலம் ரெண்டு மணி நேரம் மாடித் தோட்டத்துல குடும்பத்தோட வேலை பார்க்கிறோம். சாயங்காலம் எங்க வீட்டுக் குட்டிகளும் தோட்ட வேலையை ஆர்வமா செய்றாங்க. முழுக்க இயற்கை இடுபொருட் களையே பயன்படுத்துறோம்.
களைகள் முளைச்சா, அப்பப்போ எடுத்துடுவோம். கொடிப்பயிர்கள் படர்றதுக் காக ரீப்பர் குச்சிகளை தொட்டிக்குள்ள பதிச்சுருக்கோம். அறுவடை முடிஞ்ச தொட் டில செடிகளைப் பிடுங்கி அப்புறப்படுத்திட்டு, தொட்டி மண்ணை சுத்தமான தரையில் கொட்டி வெயில்ல காய விடுவோம். தொட்டியையும் சுத்தமாக கழுவி உலர வெச்சுட்டு, காய வெச்ச மண்ணை நிரப்பி, ஒரு கிலோ மண்புழு உரம், ஒரு கிலோ எரு, ஒரு கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கு எல்லாத்தையும் போட்டு புதுசா செடிகளை நடுவோம். இங்க, மூலிகைச் செடிக அதிகமா இருக்கறதால, பூச்சிகள் வர்றதில்லை. அதையும் மீறி வர்ற பூச்சிகளை, நீம் மருந்து அடிச்சு விரட்டிடுவோம்’’ என்றார்.
இங்க இல்லாததே இல்லீங்க..!மாமியாரைத் தொடர்ந்த கல்பனா, ”தக்காளி, கத்திரி, முள்ளங்கி, பீட்ரூட், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், மிளகாய், வெண்டை, பொரியல்தட்டை, ‘கோழி’ அவரை, கொத்தவரை, ‘பெல்ட்’ அவரை, பீர்க்கன், பாகல், மிதிப்பாகல், சுரைக்காய், அகத்தி, புளிச்சக்கீரை, வல்லாரை, தவசி முருங்கை, மணத்தக்காளி, தூதுவளை, சிறுகீரை, தண்டுக்கீரை, வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை,  இஞ்சி, பூண்டுனு வகை வகையா காய்களை நட்டு வெச்சுருக் கோம். அப்புறம்… அக்ரகாரம், அப்பக்கோவை, ஆடாதொடா, இன்சுலின் (சர்க்கரைக் கொல்லிச் செடி), கற்பூரவல்லி, கானாவாழை, சிறியாநங்கை, சிறுகுறிஞ்சான், சீந்தல், பிரண்டை, திருநீற்றுப்பச்சிலை, துளசி, தொட்டால்சிணுங்கி, நித்யகல்யாணி, வெற்றிலை, நொச்சி, மென்தால், முசுமுசுக்கை, லெமன் கிராஸ், ஆகாச கருடன், சோற்றுக்கற்றாழைனு மூலிகைகள்; அரளி, ரோஜா, முல்லை, மல்லிகை, செண்டுமல்லி, நந்தியாவட்டை, இட்லிப்பூனு பூச்செடிகள்; பூவாழை, தேன்வாழை மரங்களும் மாடியில இருக்கு. தனியா அசோலாவையும் வளர்க்குறோம்’ என்று பட்டியல் போட்டுக் கொண்டே போக, அசந்து நின்றோம்.
ஆண்டுக்கு  15 ஆயிரம் லாபம்!நிறைவாகப் பேசிய சிவக்குமார், ”எங்க குடும்பத்துல 5 பேர். எங்களுக்கான காய்கறி தேவையில 70% இந்த மாடியிலேயே கிடைச்சுடுது. அந்த வகையில வருஷத்துக்கு காய்கறிக்காக செலவழிக்கிற 15 ஆயிரம் ரூபாய் எங்களுக்கு மிச்சம். காஸ்மோபாலிடன் சிட்டி, வெளிநாடுனு நல்லா வாழ்ந்தாலும், பரம்பரைத் தொழிலான விவசாயத்தை விட்டுட்டோமேங்கிற வருத்தம் முன்ன இருந்துச்சு. இப்போ அது போயேபோச்சு” என்றார், மகிழ்ச்சியுடன்.