யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

ஞாயிறு, 2 மார்ச், 2014

மழைக் காலங்களில் கால்நடைகளுக்கான நோய் தடுப்பு முறைகள்

மழைக் காலங்களில் மனிதர்களைப் போன்று கால்நடைகளுக்கும் பல்வேறு விதமான நோய்கள் பரவும் சூழல் உள்ளதால் அத்தகைய நோய்களிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமானது.
இது குறித்து திருநெல்வேலி கால்நடை மருத்துவக்கல்லூரியின் முதல்வர் சே. பிரதாபன் கூறியது:
மழைக்காலங்களில் இளங்கன்றுகள், ஆட்டுக் குட்டிகள், பன்றிக் குட்டிகள், முயல் குட்டிகளை குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்புகளை அமைக்க வேண்டும்.
கால்நடைகள் வளர்க்கும் இடத்துக்கு தகுந்தபடி, இந்த பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
குளிர்ந்த காற்று கால்நடைகளைத் தாக்காத வகையில் பாதுகாக்க வேண்டும். மழையில் கால்நடைகள் நனைவதைத் தவிர்க்க வேண்டும்.
கால்நடை வளர்ப்புக் கொட்டகைகளை நல்ல காற்றோட்டமாகவும், தரையில் தண்ணீர் தேங்காத வகையில் உலர்ந்த நிலையிலும் வைத்திருக்க வேண்டும்.
ஆடுகளுக்கு போதுமான இட வசதி அளிக்க வேண்டும். சாணம் மற்றும் கோமியம் ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்த பண்ணைகளில் சுகாதாரத்தைப் பேண வேண்டும்.
கொட்டகை மற்றும் பண்ணைக் கருவிகள் அனைத்தையும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.
2 சதவீதம் சோடியம் ஹைட்ராக்சைடு, 2 சதவீதம் பார்மால்டிஹைடு கரைசல், 4 சதவீதம் சோடியம் கார்பனேட், 5 சதவீத ஹைட்ரஜன் பெராக்சைடு, 10 சதவீத திரவ அமோனியா, பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தலாம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி மருந்துகளை தகுந்த காலங்களில் கால்நடைகளுக்கு வழங்க வேண்டியது அவசியம்.
குறிப்பாக 6 மாத வயதுக்கு மேல் உள்ள கன்றுக்குட்டிகள், மாடுகளுக்கு சப்பை நோய், தொண்டை அடைப்பான் நோய்க்கான தடுப்பூசி போடப்பட வேண்டும்.
மூன்று வயதுள்ள வெள்ளாடு, செம்மறியாட்டுக் குட்டிகளுக்கும், பெரிய ஆடுகளுக்கும் தொண்டை அடைப்பான், துள்ளுமாரி நோய்க்கான தடுப்பூசி போட வேண்டும்.
ஆடுகளுக்கு குடற்புழுக்களை நீக்க மருந்துகளை வழங்க வேண்டும். கால்நடைகளை ஒரே இடத்தில் மேயவிடாமல் சுழற்சி முறையில் மேய்க்க செய்வதன் மூலம் நோய்களிலிருந்து பாதுகாக்கலாம்.
நோய் வந்த கால்நடைகளை இதர கால்நடைகளுடன் சேரமால் பிரித்து முறையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார் அவர்.

ஆடுகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்

ஆடு வளர்ப்பது ஆதாயம் தரும் தொழில் என்பதால், ஆடுகளுக்கு வரும் நோய்கள், தடுக்கும் முறைகளை தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மற்ற கால்நடைகளுக்கு தனியாக கலப்பு தீவனம் தரப்படுவது போல் செம்மறி ஆடுகளுக்கு கலப்பு தீவனங்கள் தரப்பட வேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக புல்வெளியில் பச்சை புல் மேய்ச்சல் இருந்தாலே போதுமானது. இயற்கையாகவே ஆடுகளின் உதடு அமைப்பு பூமியில் சிறு அளவில் இருக்கும் புற்களைக் கூட மேய்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளதால் வறட்சி சமயத்தில் தரையோடு ஒட்டியிருக்கும் குறைந்த அளவு உள்ள புல்களைக் கூட விடாமல் மேய்ந்து தேவையை நிறைவு செய்கிறது.
எனவே, மற்ற கால்நடைகளை விட ஆடு வளர்ப்பில் தீவனச் செலவு குறைந்து லாபம் அதிகம் காணப்படுவதால் கிராமப்புற ஏழைகளுக்கு ஆடு வளர்ப்பு சிறந்ததாகும்.
ஆடுகளுக்கு வரும் நோய்களும் தடுப்பு முறைகளும்:
வெக்கை நோய்: அதிக காய்ச்சல், வயிற்றுப் போக்கு, சாணம் நாற்றம் அடித்தல், உடல் மெலிதல், கண், மூக்கு, வாய் வழியே நீர் வடிதல், உதடுகளின் உள்புறம் ஈறுகள், நாக்கின் அடிப்பாக பகுதிகளில் புண்கள் காணப்படுதல் போன்ற அறிகுறிகள் கொண்ட இந்த நோய் வந்த ஆடுகளில் 75 சதம் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விடுகின்றன.
இந்த நோய் தாக்காமல் இருக்க ஆறுமாத வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆடுகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும். ஒரு முறை தடுப்பூசி போட்டால் 3 ஆண்டுக்கு நோய் வராது. நோய்வாய்ப்பட்ட ஆடுகளை அகற்றி கிருமி நாசின் மருந்தால் சுத்தம் செய்ய வேண்டும்.
ஆட்டம்மை நோய்: வாய், பின்னங்கால்களுக்கு இடைப்பட்ட பகுதி, வாலுக்கு அடிப்புறம், பால்மடி போன்ற இடங்களில் கொப்புளங்கள் தோன்றுதல், அதிக காய்ச்சல், இரை தேட திறனில்லாமை நோயின் அறிகுறியாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகளை மற்ற ஆடுகளிடம் இருந்து பிரிக்க வேண்டும். பாலை குட்டிகளுக்கு கொடுக்கக் கூடாது.
அடைப்பான் நோய்: அதிக காய்ச்சல், தொண்டை மற்றும் நாக்கு பகுதியில் வீங்குதல், மூக்கு, காது வழியாக ரத்தல் கசிதல் ஏற்பட்டு இறக்க நேரிடும். இக்கொடிய நோய் ஒரு வகை நுண்ணுயிரியினால் ஏற்படும் தொற்று நோயாகும்.
இறந்த கால்நடைகளிலிருந்து இந்த வியாதி அதிவிரைவில் பரவுவதோடு, மனிதர்களையும் பாதிப்பதால் இறந்த கால்நடைகளை ஆழ புதைத்தோ, எரித்தோ விட வேண்டும். நோய்வாய்ப்பட்ட ஆடுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.
துள்ளுமாரி நோய்: மழை பெய்த பிறகு வரக்கூடிய இந்த நோய், துளிர்ப்புல்லை அதிகம் மேய்வதால் நுண்ணுயிரியினால் தாக்குகிறது. நடக்கும் போது திடீரென துள்ளி விழுந்து இறந்து விடும். இதைத் தவிர்க்க அனைத்து ஆடுகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும்.
கோமாரி நோய்: ஒரு வகை நச்சுயிரியினால் ஏற்படுகிறது. தீவனம், தண்ணீர் உள்கொள்வது குறையும். வாயின் உள்புறம் சிறு கொப்புளங்கள் ஏற்பட்டு புண் உண்டாகும். குளம்பின் நடுவிலும், மேல்புறத்திலும் புண்கள் இருக்கும். வாயிலிருந்து உமிழ்நீர் அதிகமாக வடியும்.
இந்த நோயினால் உயிரிழப்பு குறைவாக இருப்பினும் வளர்ச்சி குன்றி கருத்தரிப்பில் சிக்கல் ஏற்படும். குட்டிகளின் உயிரிழப்பு அதிகமாக இருக்கும். நோய் பாதிப்புக்குள்ளான ஆடுகளை தனியாகப் பிரித்து பராமரிப்பதோடு, பாலை குட்டிகளுக்கு கொடுக்கக் கூடாது.
கால்நடைகளைத் தாக்கும் நோய்களைப் பற்றியும், தடுப்பு முறைகள் குறித்து மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் குண்டல்பட்டியில் உள்ள கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை அணுகலாம் என்றார் பெ.பாஸ்கர்.