யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

சனி, 20 ஜூலை, 2013

செல்லமாக வளர்க்கும் நாயின் மீது வரும் துர்நாற்றத்தைப் போக்க சில டிப்ஸ்.

நாய்கள் மீது நாற்றம் அடிப்பதாலேயே, பலர் அதனை வளர்ப்பதற்கோ அல்லது காரில் அழைத்து செல்வதற்கோ யோசிக்கின்றனர். வீட்டு நாய்கள் என்றாலும் அவைகளின் மீது ஒருவித துர்நாற்றம் வீசும். அதற்கு காரணம் சரியான பராமரிப்பு இல்லாதது தான். நாய்கள் அழகாக இருக்கின்றன என்பதால் மட்டும் அவற்றை வளர்க்க முடியாது, அவைகள் சுத்தமாக இருப்பது தான் முக்கியம். நம்முடைய சுத்தம் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு நாய்களின் சுத்தமும் மிகவும் அவசியம். இல்லையென்றால் அவைகளுக்கு உண்டாகும் நோய்கள் நம்மையும் தாக்கக் கூடும். எனவே அத்தகைய செல்ல நாய்களை, குழந்தைகளை கவனித்து கொள்வதை போன்று கவனித்துக் கொள்ள வேண்டும். இங்கு செல்ல நாய் குட்டியை துர்நாற்றத்திலிருந்து காப்பதற்கான சில டிப்ஸ்களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றி, நாயை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். 1. வாசனை திரவியம் அல்லது வாசனைக் கொடுக்கக்கூடிய எந்த பொருட்களையும் நாய்களின் மீது தடவவே கூடாது. இதனால் அவைகள் துர்நாற்றத்தை அதிகப்படுத்துமே தவிர, போக்க முடியாது என்பதை அனைவரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். 2. நாயை எப்பொழுதும் ஈரத்தன்மையுடன் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஈரத்தன்மை அதிகமாக இருந்தால், அதுவே நாற்றத்தை ஏற்படுத்துவதுடன், தேவையில்லாத நோயையும் கொண்டு வரும் என்பதால் செல்ல நாய் குட்டியை குளிபாட்டியவுடன் நன்கு துடைத்து விட வேண்டும். 3. முக்கியமாக நாய்களின் காதுகளை நன்கு துடைத்து விட வேண்டும். அவ்வாறு துடைப்பதற்கு மெழுகாலான பட்ஸை பயன்படுத்தாமல், பருத்தி கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஸை பயன்படுத்த வேண்டும். 4. நாய்களின் உரோமங்களை நன்கு சீவி விட வேண்டும். இதனால் பாக்டீரியா மற்றும் தேவையில்லாத அழுக்கை நீக்க முடியும். அதிலும் அவ்வாறு சீவும் போது, பின் பக்கம் ரோமங்கள் படியும் படி சீவ வேண்டும். இதனால் நாய்களின் ரோமங்களை உதிராமல் பார்த்து கொள்ள முடியும். 5. குறிப்பாக நாய்களின் பற்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பற்கள் நன்றாக தூய்மையாக இல்லையென்றால், நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அவைகளின் பற்களை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். அதற்கு நாய்களுக்கென இருக்கும் டூத் ப்ரஷ் வைத்து பற்களை சுத்தம் செய்ய வேண்டும். மேலும் அவைகளுக்கு ஏற்ற பேஸ்டை வாங்க வேண்டும். அதிலும் நாய்க்கு பிடித்த இறைச்சியின் சுவை கலந்த பேஸ்ட்டை தேர்வு செய்தால், தொல்லை இல்லாமல் நாய்களின் பற்களை சுத்தம் செய்யலாம். 

நாய் உணவுகளைப் பற்றிய சில மூடநம்பிக்கைகள்!!!

வீட்டில் ஆசையாக நாய் வாங்கி வளர்த்தால், வீட்டிற்கு அருகில் உள்ளோர் நாய்களுக்கு இந்த உணவுகளை கொடுக்க வேண்டாம், அந்த உணவுகளை கொடுக்க வேண்டாம், இதை சாப்பிட்டால் நாய்க்கு ஏதாவது ஆகிவிடும், அதை சாப்பிட்டால் நாய் நோய்வாய்ப்படும் என்று பலர் பலவிதமாக கூறுவார்கள். இந்த உலகில் மூடநம்பிக்கைகளுக்கு அளவே இல்லை. எதிலும் ஒரு மூடநம்பிக்கையானது நிறைந்திருக்கும். அந்த வகையில் நாய்கள் மீது மட்டும் மூடநம்பிக்கை இல்லாமலா இருக்கும். ஆம், முதலில் நாயை வளர்க்க ஆசைப்பட்டால், நாய்களைப் பற்றிய முழு விவரங்களையும் நன்கு தெரிந்து கொண்டு வளர்க்க வேண்டும். அதை விட்டு மற்றவர்கள் சொல்கிறார்கள் என்று, அதற்கு கொடுக்க வேண்டிய உணவுகளில் தவறு செய்தால், பின் நாய் வளர்க்கும் ஆசையை கைவிட வேண்டியது தான். பொதுவாக நாய்க்கு கொடுக்கும் உணவுகளில் இரண்டு வகைகள் உள்ளன. அவை வீட்டு உணவு மற்றொன்று ஃபார்முலா உணவு. இத்தகைய நாய்களின் உணவுகள் பற்றி சில மூடநம்பிக்கைகள் மக்கள் மனதில் உள்ளன. அது என்னவென்று கொடுத்துள்ளோம். அத்தகைய மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்து, சரியான உணவுகளை நாய்க்கு கொடுத்து வளர்த்து வாருங்கள். * நாய்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். உண்மையில் இது ஒரு பைத்தியக்காரத்தனமான ஒரு நம்பிக்கையாகும். ஆம், நாய்களின் செரிமான மண்டலத்திற்கும், மனிதனின் செரிமான மண்டலத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. எனவே மனிதன் சாப்பிடும் அனைத்து உணவுகளையும் நாய்களுக்கு கொடுக்கக்கூடாது. சிலர் "என் நாய்க்கு நான் அனைத்து உணவுப் பொருட்களையும் கொடுத்துள்ளேன். இதுவரை அதற்கு ஒன்று ஆனதில்லை" என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில், நாய்க்கு ஏற்படும் பாதிப்பானது உடனே தெரியாது. திடீரென்று என்றாவது தேவையில்லாமல் உடல்நலம் சரியில்லாத போது தான் உணர்வீர்கள். * நாய்கள் சைவமாக இருக்க முடியாது. உண்மையில், நாய்கள் சைவமாக இருக்க முடியும். அதிலும் அதற்கு சரியான உணவுகளை கொடுத்து வந்தால். இறைச்சியில் மட்டும் தான் நாய்களுக்கு வேண்டிய சத்துக்கள் இருக்கும் என்றில்லை. அவற்றிற்கு புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ள சரியான சைவ உணவுகளை தொடர்ச்சியாக கொடுத்தாலே, நாய்கள் இறைச்சி சாப்பிடாமல், சைவ நாயாக இருக்கும். * நாய்களுக்கான ஃபார்முலா உணவுகள் அனைத்தும் ஒன்று தான். மனிதர்களுக்கான அனைத்து ஃபார்முலா உணவுகளும் ஒன்றா? இல்லையெனில், நாய்களுக்கு மட்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும். எப்போதும் நாய்களுக்கு வாங்கும் உணவுப் பொருட்களின் பின்னால் எழுதப்பட்டிருக்கும் சத்துக்கள் சரியானதாக இருந்தால் மட்டும் வாங்க வேண்டும். ஒருவேளை குறைவாக இருந்தாலும், வேறொரு உணவுப் பொருட்களை தேர்ந்துதெடுத்து வாங்கலாம். * வீட்டில் சமைக்கும் உணவுகள் தான் எப்போதும் நல்லது. இதுவும் ஒரு மூடநம்பிக்கை தான். உண்மையில் வீட்டில் சமைக்கும் உணவுகளின் மூலம் மட்டும் நாய்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. அதற்கும் ஒருசில ஃபார்முலா உணவுகளை தினமும் கொடுத்தால் தான், நாய்க்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.