யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.
அலங்கார புறாக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அலங்கார புறாக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 27 ஜூலை, 2013

மனதை லேசாக்கும் அலங்கார புறாக்கள்!
''உறையூர் வாங்க... இங்கே புறா கார்த்திகேயன்னு ஒருத்தர் இருக்கார்...'' என்று வாசகி உமா 'வாய்ஸ் நாப்’பில் அழைத்த அடுத்த அரை மணி நேரத்தில் நாம் அங்கு இருந்தோம். வீட்டில் நுழையும் முன்னரே படபடவெனச் சிறகடித்து, ஒலி எழுப்பி நம்மை வரவேற்றன விதவிதமான அலங்காரப் புறாக்கள்.
 
'அலங்கார மீன், அலங்காரப் பறவை, உயர் சாதி நாய்கள் வளர்ப்புபோல் அலங்காரப் புறா வளர்ப்பும் அதிகரித்துவருகிறது. இந்த அலங்காரப் புறாக்கள்,  400-ல் இருந்து  1,50,000 வரை சந்தையில் கிடைக்கின்றன' என்று பேச்சை ஆரம்பித்தார் கார்த்தி கேயன்.
கார்த்திகேயனிடம் 20-க்கும் மேற்பட்ட வகைகளில் அலங்காரப் புறாக்கள் உள்ளன. சைனீஸ் அவுல், ஜெர்மன் நன், பிரெஞ்ச் மோதினா, இங்கிலீஷ் மேக் என வெளிநாட்டு வகைப் புறாக்களுடன் ரோமர், முஸ்கி, டிரம்பட், பேன் டைல், சுபாஷ், பொகாரோ, எக்ஸிபிஷன் ரோமர், கிங் என இந்திய வகைப் புறாக்களும்  இவரிடம் வளர்கின்றன. இந்தப் புறாக்களைச் சென்னை, பெங்களூரு, மதுரை தூத்துக்குடி எனப் பல்வேறு ஊர்களில் இருந்து வாங்கி  வந்து வளர்த்துவருகிறார்.
'என்னுடைய தாத்தா ரெங்கையா புறா வளர்ப்பதை 50 ஆண்டுகளுக்கு முன்பே பொழுதுபோக்காக ஆக்கிக்கொண்டவர். அவர் பந்தயப் புறாக்களையும் சாதாரணப் புறாக்களையும் வளர்த்துவந்தார். தாத்தாவுக்குப் பிறகு அப்பா ராமசாமி, அவருக்குப் பிறகு நான் என, மூன்று தலைமுறையாகப் புறா வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறோம். நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக அலங்காரப் புறாக்கள் வளர்ப்பு மற்றும் விற்பனையில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறேன். இப்போது இது நமக்குப் பொழுதுபோக்கு இல்லை; பொருளாதார ஆதாரமாகவே மாறிவிட்டது'' என்கிற கார்த்திகேயன், 'புறாக்களைப் பார்க்கும்போதே மனதில் ஒரு நிம்மதியும் அமைதியும் உருவாகும்' என்கிறார் பெருமிதம் பொங்க.
புறாக்கள் மென்மையான சுபாவம் கொண்ட பறவைகள். சிறிய அதிர்ச்சியைக்கூட அவற்றால் தாங்கிக்கொள்ள முடியாது. கழுகு, காகம் போன்ற சக பறவைகளே இவற்றை உணவாக்கியும் கொள்வதால், புறா இனம் அருகிவருகிறது. ரோமர் வகைப் புறாக்களிடம் குழந்தைப் பராமரிப்புகுறித்த கவனம் அதிகம். அதனால் உயர் வகை புறா முட்டைகளை அடுக்கிவைத்து ரோமர் புறாக்களை அடைகாக்க வைத்து குஞ்சுகளைப் பொரிக்கச் செய்கின்றனர். இடி, மின்னல், வெடிச் சத்தம், புயல், மழை, கடும் பனி, அதிக வெயில் இவற்றால் அடைகாக்கப்படும் முட்டைகள், குஞ்சு பொரிக்காமல் கூழாகிவிடுமாம். போராட்டத் துக்குப் பிறகே ஒரு அலங்காரப் புறா, முட்டையில் இருந்து குஞ்சாக வெளிவருகிறது.
'இந்த அலங்காரப் புறாக்கள் எளிதில் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்பும் கொண்டவை. அதனால் கவனமாகப் பராமரிக்க வேண்டும். வாரம் இருமுறை புறாக்களின் மீது வெயில் படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவற்றின் மீது தொற்றுண்ணிகள் பரவாமல் தடுக்க முடியும். புறாக் கூண்டு, அவை உலவும் இடங்கள், உணவு, தண்ணீர் பாத்திரங்களை வாரத்துக்கு ஒருமுறையாவது சுத்தம் செய்யத் தவறக் கூடாது' என்று புறாப் பராமரிப்புகுறித்து ஆர்வமுடன் விளக்குகிறார் கார்த்திகேயன்.
கார்த்திகேயனிடம் உள்ள டிரம்பட் வகையைச் சேர்ந்த புறாவின் சத்தமே டிரம்பட் வாசிக்கும்போது எழும் ஒலிபோல் இருக்கிறது. பிரெஞ்ச் மோதினா வகை புறா, கோழி போன்ற வடிவத்தில் இருக்கிறது. சைனீஸ் அவுல் புறாவின் கண்கள் பெரிதாகவும் மூக்கு மடங்கியும், சுபாஷ் வகை புறாக்கள் தினமும் இரண்டுமுறை குளித்து எப்போதும் பளிச் என்றும் காணப்படுகின்றன. இந்தியன் ஃபேன் டைல் வகை அவ்வப்போது மயில்போலத் தோகையை விரித்து ஆடுவதுபோல் சிறகை விரித்து உலவிக்கொண்டு இருக்கிறது. அவற்றைப் பார்க்கும்போதே மனம் லேசாகிறது. நமக்கும் சிறகு முளைக்கிறது. கவலைகளை மறந்து அந்தப் புறாக்களோடு நமது மனதும் சேர்ந்து பறக்கிறது!''
-அ.சாதிக்பாட்சா 
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்