யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

புதன், 16 ஏப்ரல், 2014

எதிர்கால விவசாயம் பண்ணை கருவிகளின் கைகளில்!

இன்று விவசாயத்திற்கு இருக்கும் பெரும் பிரச்னைகளில் ஒன்று ஆட்கள் பற்றாக்குறை. எந்த வகையான பயிர் செய்தாலும் ஆட்கள் கிடைப்பது பெரும்பாடாக இருந்து வருகிறது. தற்போது, ஆட்கள் பற்றாக்குறையை சமாளிப்பதில் பண்ணைக் கருவிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. எதிர்காலத்தில் கருவிகள் இல்லையென்றால் விவசாயம் செய்வது கேள்விகுறியாகிவிடும் என்ற நிலை வந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.
இப்படியொரு நிலையில் விவசாயத்தில் கருவிகளின் முக்கியத்துவத்தை பற்றி ‘பண்ணை இயந்திரமயமாக்குதல்’ என்ற தலைப்பில் மகராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த மாதம் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, பஞ்சாப் என பல மாநிலங்களிலிருந்து வேளாண் இயந்திரவியல் துறை பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், விவசாயிகள் என 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலின் துவக்க விழாவில் பேசிய லெம்கென் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன்டனி வான்டெர் லே, ''இந்தியாவில் சிறு விவசாயிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்களின் மூலமாக ஆண்டுக்கு 120 மில்லியன் டன் விளைபொருட்களின் உற்பத்தி நடந்து வருகிறது. சிறு விவசாயிகளும் இயந்திரங்களை பயன்படுத்தினால் இதைவிட கூடுதலான விளைச்சலை பெற முடியும். இதுகுறித்து வேளாண் அமைச்சரிடமும் விவாதித்துள்ளோம்" என்றார்.

மணிப்பூர், மத்திய வேளாண் பல்லைகக்கழக துணைவேந்தர் எஸ்.என்.பூரி பேசும்போது, "1947 ஆம் ஆண்டு இந்தியாவின் உணவு உற்பத்தி 50 மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து 2013 ஆம் ஆண்டு 263 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. 2050 ஆம் ஆண்டில் இப்போது இருக்கும் மக்கள் தொகையைவிட 50 கோடி மக்கள் கூடுதலாக இருப்பார்கள். அதற்கு அதிக உணவு உற்பத்தி இருந்தால்தான் சமாளிக்க முடியும். வேளாண்மையில் ஆண்டுக்கு 6 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. அதை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
 மணிப்பூரில் நெல் விளைச்சலுக்காக நடத்திய போட்டியில் 1 ஹெக்டேருக்கு 6.5 டன் நெல்லை உற்பத்தி செய்திருக்கிறார்கள் அந்த மாநில விவசாயிகள். சரியான முறைகளை விவசாயிகளுக்கு கற்றுக் கொடுத்தால் உற்பத்தியும் கூடுதலாக இருக்கும். விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பிற தொழில்களுக்கு சென்றுவிட்டார்கள். அவர்களை திரும்பவும் விவசாயத்தின் பக்கம் திருப்ப வேண்டும். கிராமங்களில் வேலை வாய்ப்பின்மை அதிகமாக உள்ளது. அதற்கு தகுந்த உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

மேலும், வடகிழக்கு மாநிலங்களில் பெட்ரோலியம் இருப்பதாக டி.வி. செய்திகளில் சொல்கிறார்கள். மாற்று எரிசக்திக்கு பல வழிகள் இருக்க, ஏன் விவசாய நிலங்களை தெரிவு செய்ய வேண்டும். பெரும்பான்மையான மாநிலங்களில் டிராக்டர்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனா, டிராக்டர்களில் இணைக்கப்படும் கருவிகளை பெரும்பான்மையோர் வாங்குவதில்லை. அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படும் தேவையான கருவிகளை வாங்கி விளைச்சலை பெருக்க விவசாயிகள் முன்வர வேண்டும். கருவிகளை விற்கும் நிறுவனங்கள் அந்தக் கருவிகளை கையாள்வதற்கான பயிற்சிகளையும் வழங்க வேண்டும்" என்று வேண்டுகோள் வைத்தார்.
இந்திய வேளாண் பொறியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் மாயண்டே பேசும்போது, "மொத்தமுள்ள 60 மண் வகைகளில், இந்தியாவில் 46 மண் வகைகள் உள்ளது. பகுதி வாரியாக 50 வகையான சீதோஷ்ண நிலை (Climates) காணப்படுகிறது. இவ்வளவு இயற்கையான வளங்கள் இருந்தும் விவசாயத்தில் பல பிரச்னைகள் இருக்கு. இந்த பிரச்னைகளை தீர்க்கும்பொருட்டு மாற்றங்களை கொண்டு வரவேண்டும்" என்றார்.

பெங்களூர், இந்திய வேளாண் அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் நாராயண கவுடா பேசும்போது, "இந்தியாவில் 124 கோடி மக்கள் இருக்கிறார்கள். அதில் 70 கோடி மக்கள் விவசாயம் சார்ந்த தொழிலில் இருக்கிறார்கள். விவசாயத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தால் எதிர்கால விவசாயம் இன்னும் சிறப்பாக இருக்கும். 1950களில் உணவை இறக்குமதி செய்தோம். இப்போது ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளோம். விவசாயத்தை கணவன்&மனைவி என்ற குடும்ப அமைப்பு தொடர்ந்து வழி நடத்தி வருகிறது. விவசாயிகளுக்கு சரியான வழிகாட்டுதல் இருந்தால் மட்டுமே அவர்கள் பண்ணையை வழி நடத்துவார்கள்.
இந்தியாவில் இன்னும் சாலையோரங்களில்தான் அறுவடை செய்த பயிர்களிலிருந்து தானியங்களை பிரித்தெடுக்கிறார்கள். சிறு விவசாயிகள் குழுவாக செயல்பட்டால் அறுவடை செய்யும் கருவிகளை பயன்படுத்திகொள்ள வாய்ப்புகள் இருக்கு. இந்த தலைமுறை இளைஞர்கள் விவசாயத்தைவிட்டு இடம்பெயர்ந்து விட்டார்கள். இருப்பவர்களையாவது விவசாயத்தில் தக்கவைக்க வேண்டுமானால் பண்ணை சார்ந்த வேளாண் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்க வேண்டும்" என்றார்.

மகராஷ்டிரா மாநிலம், மகாத்மா பூலே வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் டி.எ. மூரே பேசும்போது, "விவசாயத்தின் அடுத்தக்கட்டம் இயந்திரமாக்கப்பட்ட பண்ணை விவசாயமாகத்தான் இருக்கும். தற்போது பெரும் பயிர்களை (மேஜர் கிராப்ஸ்) தவிர்த்து குறைந்தகால பயிர்களை (மைனர் கிராப்ஸ்) பயிர் செய்கிறார்கள். அதில் உற்பத்தியும் நிலையான அளவில் வளர்ந்து வருகிறது. ஆனால் குறைந்த ஆட்களை வைத்துக்கொண்டு செய்தால் குறைவான உற்பத்திதான் கிடைக்கும்.
இதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்று குறை சொல்ல முடியாது. கரும்பு அறுவடைக்கு ஆட்களை வைத்து செய்யும்போது செலவு அதிகமாகிறது. வாடகைக்கு கருவிகளை வைத்து அறுவடை செய்யும்போது தேவையான அளவு வேலையும் செய்துகொள்ள முடிகிறது. செலவும் குறைகிறது. 90களில் டிராக்டர் பரவலானபோது விவசாயம் முதற்கட்டமாக இயந்திரமயமாக்கப்பட்டது. இப்போது 16 எச்.பியிலிருந்து 60 எச்.பி. வரையான டிராக்டர்கள் கிடைக்கிறது. இயந்திரங்களுக்கு ஏற்ற பயிர்களை செய்யும் முறை தற்போது பரவலாகி வருகிறது.

இன்னும் பருத்தியை பறிப்பதற்கான சிறிய அளவிலான இயந்திரங்கள் வரவில்லை. கரும்பு அறுவடை முழுமையாக இயந்திரமாக்கப்படவில்லை. பல்கலைக்கழகம் இயந்திரங்களை உற்பத்தி செய்ய முடியாது. ஆனால் நிறுவனங்கள் உருவாக்கும் அதிக பயனுள்ள இயந்திரங்களை விற்க ஊக்கப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் அறுவடை என்பது இயந்திரங்களால் மட்டுமே நடைபெறக் கூடிய ஒன்றாக இருக்கும்" என்றார்.

த. ஜெயகுமார்

கருத்துகள் இல்லை: