யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

புதன், 19 பிப்ரவரி, 2014

தீவனம் அளித்தலும் தீவன மேலாண்மையும்

வெள்ளாடுகளுக்குத் தீவனம் அளிப்பது. அவை உயிர்வாழ மட்டுமல்லாது. மனிதனுக்குப் பயனுள்ள இறைச்சிக்கும் பால் உற்பத்திக்காகவும் ஆகும். மற்ற உயிரினங்களைப் போன்றே ஆடுகளுக்குச் சக்தி அளிக்கும் மாவுப் பொருள், கொழுப்பு. உடல் வளர்ச்சிக்கும், உற்பத்திக்கும் தேவையான புரதம் மற்றும் தாது உப்புகள், வைட்டமின்கள் தேவை. உணவுப் பொருட்கள் செரிக்கவும்.
உடலில் ஏற்றுக் கொள்ளப்படவும் நீர் தேவை. உடலில் 20% நீர் குறைவுபட்டால் உயிர் வாழ முடியாது. நீர் சத்துப் பொருள் எனப்படாவிட்டாலும், அது உணவுடன் இன்றியமையாதது ஆகும். இது குறித்து முதலில் விவாதிக்கலாம்.
தண்ணீர்
ஆடுகளுக்குச் சுத்தமான நீர் எப்போதும் அருகில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது நலம். முடியாத நிலையில் 2, 3 முறை நீர் வழங்குவது நல்லது. ஆடுகள்தானே எனத் தூய்மையற்ற நீரைக் குடிக்கக் கொடுக்கக் கூடாது. பொதுவாக ஏழைகள் ஊறல் தண்ணீர் என்று புளித்த சமையல் கழிவு நீரைச் சேமித்து வைத்துக் குடிக்கக் கொடுப்பார்கள். இது சிறந்த முறையன்று. அரிசி, பருப்பு அலசிய நீரை உடனடியாகக் கொடுத்து விடுவதே சிறந்தது. மேலும், தூய்மையற்ற நீர் நிலைகளின் நீர் மூலம் தொற்று நோய்கள் பரவவும் வாய்ப்பு உள்ளது. சிறந்த ஆட்டுப் பண்ணை அமைக்க விரும்புபவர்கள், நமது குடிநீர் போன்ற தரமான நீர் ஆடுகளுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஆடுகளுக்கு எவ்வளவு நீர் தேவை? இது ஆடுகளின் வகை, வளர்க்கப்படும் முறை, வளர்க்கப்படும் பகுதியின் காலநிலை ஆகிய சூழ்நிலையின்படி மாறுபடும்.
எடுத்துக்காட்டாக, இராஜஸ்தான் பாலைப் பகுதியில் வெள்ளாடுகளுக்கு வாரம் மூன்று முறை மட்டும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் கொடுக்கப்படுகின்றது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் எடுத்த ஓர் ஆய்வின்படி, கடா 136 மி.லி. நீர் ஒரு நாளில் குடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேய்ச்சலுக்கு அனுப்பினால் இவ்வளவு போதாது. ஒரு மலேசிய ஆய்வின்படி, 18 – 20 கிலோ வெள்ளாடு 680 மி.லி. நீர் குடித்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
அதிகப் பால் வழங்கும் வெளிநாட்டு ஆடுகள் தினம் சுமார் 25 லிட்டர் நீர் குடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது சூழ்நிலையில் வெள்ளாடு தனது தேவை அறிந்து தண்ணீர் குடிக்க ஏதுவாக அது குடிக்கும் அளவு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். நான் வளர்த்த ஒரு வயது ஆடு மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தது. பொதுவாக அது உண்ணும் தீவனத்தில் காய்வு நிலையில் நான்கு மடங்கு நீர் அருந்தும்.
அடுத்து, சத்துப் பொருள்களான மாவுப் பொருள், கொழுப்பு மற்ற உயிரினங்கள் போல் ஆடுகளுக்குத் தேவைப்படும். அத்துடன் அசைபோடும் விலங்கினங்கள் அவற்றிற்குத் தேவையான எரி சக்திப் பொருனை நார்ப் பொருட்களிலிருந்தும் பெறுகின்றன. நார்ப் பொருட்கள் நுண்ணுயிர்களால் தாக்கப்பட்டு, அசிடிக், புரோப்பியோனிக் மற்றும் புயூட்ரிக் அமிலங்கள் பெறப்படுகின்றன. இவை இரத்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு உடலுக்குத் தேவையான கொழுப்பு மற்றும் பாலில் உள்ள கொழுப்பு, சர்க்கரைப் பொருளாகவும் மாற்றப்படுகின்றது. ஆகவே பெரு வயிறு திறம்பட வேலை செய்ய வெள்ளாடுகளுக்கு நார்ப் பொருள் நிறைந்த தீவனமும் தேவைப்படுகின்றது. இவ்வாறாக நமது உணவுடன் போட்டியிடாமல் இலை, தழை, புல், பூண்டுகளை உண்டு வெள்ளாடுகளால் வாழ முடிகின்றது.
புரதம்
உடல் வளர்ச்சிக்கும் உடல் உறுப்புகளின் தேய்மானம் சுரப்பிகளின் நொதியம் மற்றும் ஆர்மோன்களுக்கும் பால் உற்பத்திக்கும் புரதம் இன்றியமையாதது. ஆகவே மற்ற உயிரினங்களைப் போன்று வெள்ளாடுகளுக்குப் புரதம் தேவைப்படுகின்றது. ஆனால் அகைபோடும் விலங்கினங்கள் சுத்தப் புரதம் தவிரப் புரதம் சார்ந்த பொருட்களிலிருந்தும் பெருவயிற்று நுண்ணுயிர் மூலமும் புரதம் பெறமுடிகின்றது. ஆகவே மனிதர்களுக்குத் தகுதியற்ற முரட்டுப் புரதங்களிலிருந்து தரமான புரதம் வெள்ளாடுகளால் பெற முடிகின்றது.
45.4 கிலோ எடைக்கு 41 கிராம் புரதம் உடலைப் பேணத் தேவைப்படுகின்றது. அத்துடன் 4.5 லிட்டர் பால் உற்பத்திக்கு 227 கிராம் புரதம் தேவைப்படுகின்றது. இந்த அடிப்படையில் சராசரி ஆட்டிற்குப் புரதத் தேவையைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
தாதுஉப்புத் தேவை
வெள்ளாடுகள் பசுக்களைவிட, 50% அதிக உப்பைப் பாலில் சுரக்கின்றன. ஆகவே வெள்ளாடுகளின் உப்புத் தேவை அதிகம். ஆகவே கொடுக்கும் கலப்புத் தீவனத்தில் 1% சாதா உப்பு கொடுக்க வேண்டும். பிற தாது உப்புத் தேவையை நிறைவு செய்யத் தாது உப்புக் கலவையை தீவனத்தில் 2% கலந்து கொடுக்க வேண்டும். தாது உப்புக் கலவையிலுள்ள கால்சியம், பாஸ்பரஸ், எலும்பு வளர்ச்சிக்கும் அயோடின் உடல் வளர்ச்சிக்கும், குட்டி வளர்ச்சிக்கும், கோபால்ட் வைட்டமின் உற்பத்திக்கும் பயன்படுகின்றன.
வைட்டமின்கள் தேவை
அசைபோடும் விலங்கினங்களுக்கு மற்ற உயிரினங்களைப் போன்று எல்லாவித வைட்டமின்களும் உணவில் அளிக்கத் தேவை இல்லை. பெரு வயிற்றிலுள்ள நுண்ணுயிர்கள் வெள்ளாடுகளுக்கு வேண்டிய பி.காம்பிளக்ஸ் வைட்டமின்களைத் தயாரித்து விடுகின்றன. மேலும் பெரு வயிற்றுலுள்ள செல்கள் “சி” வைட்டமினை உற்பத்தி செய்து விடுகின்றன.
வெள்ளாடுகள் சூரிய ஒளி மூலம் தோலிலுள்ள கொழுப்புச் சார்ந்த பொருட்களைக் கொண்டு வைட்டமின் “டி” தயாரித்துக் கொள்கின்றன. அத்துடன் வெயிலில் காய்ந்த புல், தழைகள் மூலமும் இவ்வைட்டமினைப் பெற்றுக் கொள்ளுகின்றன.
வெள்ளாட்டுகளுக்கு மிகவும் தேவையான வைட்டமின், வைட்டமின் “ஏ” ஆகும். நன்கு பசுந்தழை, புல் உண்ணும் வெள்ளாடுகள் இச்சத்துகளினால் பாதிக்கப்படுவதில்லை.
சாதாரணமாக வெள்ளாடுகள் எவ்வளவு தீவனம் உண்ணும்? எவ்வகைத் தீவனத்தை எவ்வளவு, எவ்வாறு கொடுக்க வேண்டும்? என்பது குறித்து விவாதிக்கலாம். அதற்கு முன் வெள்ளாடு வளர்ப்பவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது. வெள்ளாடுகளுக்குத் தீவனம் அளிப்பது ஓர் அறிவியல் மட்டுமல்ல. அது ஒரு கலை. ஆகவே இங்குத் தீவனம் அளிப்பது குறித்துத் தோராயமாகக் குறிப்பிடப்படுகின்றது. ஆடு வளர்ப்போர் தங்களது திறமையைப் பயன்படுத்தி ஆட்டின் தேவையை அறிந்து தீவனம் அளித்துப் பயன் பெற வேண்டும்.
வெள்ளாடுகளின் தீவனம் தேவை மிக அதிகமாகும். சாதாரணமாக மாட்டினம் தனது உடல் எடையில் 1.5 முதல் 2.0% காய்வு நிலையில் தீவனம் ஏற்கும். ஆனால் வெள்ளாடுகள் தனது உடல் எடையில் 2 முதல் 5% தீவனம் ஏற்கும். ஆகவே வெள்ளாடுகள் கடும்பசி கொண்ட விலங்கினமாகக் கொள்ளலாம். வெள்ளாடுகளுக்குச் செம்மறி ஆடுகளைவிட இரு மடங்கு கொண்ட பெரு வயிறு உள்ளது. இதன் காரணமாகவே, வெள்ளாடுகள் பசுந்தழை மற்றும் புல்லை மட்டும் உண்டு வளர்ச்சியடைந்து பாலும் கொடுக்க முடிகின்றது. மேலும், குளிர் நாட்டைச் சேர்ந்த வெள்ளாடுகள் அதிகத் தீவனம் ஏற்கும். வெப்ப நாடுகளில் உள்ள ஆடுகள் குறைவாகவே தீவனம் ஏற்கும். இதனட காரணமாகவே குளிர்ப் பகுதி ஆடுகளுக்கு அகன்ற உடம்பும், வெப்ப நாட்டு ஆடுகள் ஒடுங்கிய உடலமைப்பும் கொண்டுள்ளன.
அடுத்து வெள்ளாடுகளின் சுவை உணர்வு அலாதியானது. வெள்ளாடு தின்னாது ஒதுக்கும் பசுந்தீவனம் சில மட்டுமே. மேலும் ஆடுகளுக்கு ஒரே வகைத் தழையோ, புல்லோ தொடர்ந்து கொடுக்கக் கூடாது. சில வகையான தழைகளைக் கலந்து கொடுப்பதே சத்துக்குறைவைத் தீர்க்கச் சிறந்த வழியாகும். மேலும் புதுவகைத் தீவனங்கள் கொடுக்கும் போது, சிறிது சிறிதாகப் பழக்கப்படுத்திய பின் ஏற்ற அளவு கொடுக்க வேண்டும். பெரு வயிற்றிலுள்ள நுண்ணுயிர்கள், பொதுப்படையாகவே சில இனங்களைச் சார்ந்ததாயினும், அவற்றின் எண்ணிக்கை மற்றும் வகைகள் மாறுபட்ட நிலையில் இருக்கும். அப்பகுதியின் தீவனமும் இம்மாறுபாட்டிற்குக் காரணமாகும்.
வெள்ளாடுகள் தீவனத்தை அதிக அளவில் விரயம் செய்யும் குணமுடையவை. தொட்டியில் மற்றும் கூடையில், தழையைப் போடும் வேளையில் அவற்றை இழுத்துத் தரையில் வீசி உண்ணத் தொடங்கும். ஆனால், தரையில் விழுந்து மிதிபட்ட தீவனத்தை உண்ணாது வீணாக்கும். ஆகவே, தீவனத் தொட்டி அடைப்பு வைப்பது அவசியம். சிறிய அளவில், வளர்க்கும் போது தழையைக் கொட்டகைக்காலில் கட்டி வைக்க வேண்டும். இதனால், தீவனம் வீணாவது தவிர்க்கப்படும்.
மேலும் வெள்ளாடுகளுக்கு மூன்று முதல் ஐந்து முறையாக தீவனத்தைப் பிரித்துப் பல்வேறு வேளையில், கொடுத்தால் அதிகம் வீணாக்காமல் தின்னும். அடுத்த ஒருமுறையாவது, காய்ந்த தழை அல்லது புல் கொடுக்க வேண்டும் இவ்வாறாக வெள்ளாடுகளுக்குத் தீவனம் மூன்று வகையில் வழங்க வேண்டும். (1) பசுந்தழை மற்றும் புல் (2) காய்ந்த தழை மற்றும் புல் (3) கலப்புத் தீவனம் ஆகிய மூன்று வகையாக வழங்கலாம். பசுந்தழை மற்றும் புல் குறித்துத் தனியாக விவாதிக்கலாம்.
உலர்ந்த தீவனம்
நரிப்பயறு, சணப்பு, புல், குதிரை மசால், வேலி மசால் போன்றவற்றைக் காய வைத்துத் தீவனமாக அளிக்கலாம். ஆனால், பசுந்தீவனப்பற்றாக்குறை உள்ள சூழ்நிலையில் இதை எல்லாராலும் நடைமுறைப்படுத்த முடியாது. நிறையப் பசுந்தீவனம் உற்பத்தி செய்பவர்கள் இதனைச் செய்யலாம். பொதுவாகப் பிற விவசாய உப பொருட்கள், உதிரும் இலை, சருகுகளைத் தீவனமாக அளிப்பதே சிறந்தது.
உளுந்துச் செடி மற்றும் தட்டைப்பயிற்றுச் செடி
நெல் அறுவடைக்குப்பின், தமிழ் நாட்டின் பல மாவட்டங்களிலும், உளுந்து விதைக்கப்படுகின்றது. பல இடங்களில் , உளுந்து நெற்றுகள் பிரிக்கப்பட்டு, அதன் செடிகள், நன்கு காயவைத்து வைக்கோல் போரின் இடையே சேமித்து வைக்கப்படுகின்றன. இது சிறந்த முறை, ஆனால், தஞ்சை போன்ற இடங்களில் உளுந்துச் செடி மொத்தமாகப் பிடுங்கப்பட்டு, உளுந்தைப் பிரித்தெடுக்க மாடுகட்டிப் போரடிக்கப்படுன்றது. இதன் காரணமாகச் சத்துமிகு இலைகள் உதிர்ந்து பொடியாகி விடுகின்றன. சுற்றுப் புறங்களில் தூசியை உண்டு பண்ணிச் சூழல் கேட்டையும் ஏற்படுத்துகின்றன. ஆகவே யாவரும் உளுந்து நேற்றைப் பிரித்து எடுத்துச் செடியை நன்கு காயவைத்துச் சேமித்து, ஆடு மாடுகளுக்குத் தீவனமாக அளிக்கலாம். முக்கியக் குறிப்பு நன்கு உலர வைக்காத செடிகளில் பூஞ்சைக் காளான் தாக்குதல் ஏற்பட்டுத் தீவனத்திற்குப் பயன்படாமல் போய்விடும்.
மழைக்காலங்களில், புன்செய் மற்றும் மேட்டு நிலங்களில் தட்டைப் பயறு பயிரிடப்படுகின்றது. இதன் கொடியையும், பயற்றின் நெற்றைப் பிரித்தபின் காயவைத்துச் சேமித்து, ஆடு மாடுகளுக்குத் தீவனமாக அளிக்கலாம். அத்துடன் உறுந்து, பயறு நெற்றுகளின் தோலையும் ஆடுகள் விரும்பி உண்ணும்.
இலைச் சருகுகள்
மா, பலா, மரங்களில் உதிர்ந்த சருகுகளை வெள்ளாடுகள் பல விரும்பி உண்ணும். ஆகவே இம்மரங்களின் உதிர்ந்த இலைகளை எரித்து வீணாக்கலாம், சாமானிய ஆடு வளர்ப்போருக்குக் கிடைக்குமாறு செய்வது நல்லது.
பனங்காய்
பனங்காய் சிறிதாகச் சீவப்பட்ட நுங்கும் வெள்ளாடுகளுக்குச் சிறந்த தீவனமாகின்றன.
பலாத்தோல் மற்றும் கொட்டை
பலாப்பழத் தோல் சிறிதாக நறுக்கப்பட்டு, வெள்ளாடுகளுக்குச் சிறந்த தீவனமாகப் பயன்படுத்தப்படுகின்றார்கள். பொதுவாக வாழைப்பழம் விற்கும் பெட்டிக் கடைக்காரர்கள் வெள்ளாடு வளர்ப்பார்கள். பொதுவாகவே பழக் கடையில் பழத் தோலைப் போடக் கூடை ஒன்று வைத்திருப்பார்கள். வெள்ளாடுகள் வாழைப்பழத்தோலை விரும்பி உண்ணும்.
பண அடிப்படையில் தீவனத்தின் மதிப்பு
ஒவ்வொரு தானியமும் வெள்ளாட்டுத் தீவனமும் அவற்றின் விளைச்சல் அளவு, வெளியிடங்களிலிருந்து சந்தைக்கு வந்தது போன்ற காரணங்களினால், அவற்றின் விலையில் மாறுபடும். ஆனால், பண்ணையாளர்கள் தீவனங்களில் அடங்கிய புரதம் மற்றும் இதர சத்துகக்கள் அடிப்படையில் தீவனங்களுக்கு மதிப்பு அளித்துத் தீவனங்களை வாங்க வேண்டும். சந்தையில் அதிக வரத்துக் காரணமாக ஒரு சத்தான தீவனம் மலிவான விலையில் கிடைக்கலாம். அதே போல் சந்தை வரத்துக் குறைவு காரணமாகச் சத்து குறைந்த வேறொரு தீவனம் அதிக விலைக்கு விற்கப்படலாம். ஆகவே, சத்து அடிப்படையில் தீவனங்களை வாங்குவதே ஆதாயமான செய்கையாகும். வெள்ளாடுகளின் சுவை உணர்ச்சி மனிதர்களைப் போல் சிறப்பாக இல்லை. அவை இனிப்பு, புளிப்பு, உப்பு, சுவைகளை விரும்பும். கசப்புத் தன்மையை வெள்ளாடுகள் மற்ற கால்நடைகளை விட நன்கு ஏற்கும். மேலும் நம்மைப் போல் ஆடுகள் பல்வேறு சுவையை எண்ணி ஒருவிதமான தீவனத்தை மறுப்பதில்லை. இவற்றை அறிந்து ஏற்றிபடி வெள்ளாடுகளுக்குத் தீவனம் அளிக்க வேண்டும்.
துவரை மற்றும் உளுந்துப் பொட்டு
துவரம் பருப்பு, மற்றும் உளுந்தும் பருப்பு தயாரிக்கும் ஆலைகளிலிருந்து பொட்டு உப பொருளாகக் கிடைக்கின்றது. இதில் உமியுடன், குருத்து, நொறுங்கிய பருப்புகள் இருக்கும். இதன் சிறந்த வாசனை வெள்ளாடுகளைக் கலப்புத் தீவனத்தைத் தின்னத் தூண்டும்.
தொகுப்பு : A R தியாகரஜன், கால்நடை மருத்துவர்

வெள்ளாடுகளுக்கு தீவனத் தேவை

வெள்ளாடுகள் உடல் எடையில் 4 முதல் 5% காய்வு நிலையில் தீவனம் ஏற்கும் என்று குறிப்பிட்டேன். நமது பகுதி ஆடுகள் சராசரி 25 கிலோ எடையே இருக்கின்றன. (பொலி கிடாக்கள் மற்றும் சமுனாபாரி போன்ற இன ஆடுகளின் எடை கூடுதலாக இருக்கும்.
ஆகவே, 25 கிலோ ஆட்டிற்கு 1 முதல் 1.25 கிலோ தீவனம் காய்வு நிலையில் தேவைப்படும். இதனைப் பசுந்தழை, உலர்ந்த தீவனம், கலப்புத் தீவனமாகக் கீழ் வருமாறு வழங்கலாம்.
காய்வு நிலையில்
பசுந்தழை / புல் 3 கிலோ காய்வு நிலையில்           0.75 கிலோ
உலர் தீவனம் 300 கிராம் காய்வு நிலையில்          0.25 கிலோ
கலப்புத் தீவனம் 250 கிராம்  காய்வு நிலையில்    0.24 கிலோ
காய்வு நிலையில் மொத்தம்   1.24 கிலோ
பொதுவாகத் தீவனம் அளிப்பது பற்றிக் குறிப்பிட்டோம். சிற்றூர்களில், பகுதிக்கு ஏற்றாற்போல், சாமானிய ஆடு வளர்ப்போர் பல்வேறு தீவனங்கள் அளிப்பார்கள். அது பற்றியும் சிறிது குறிப்பிடாவிட்டால், செய்திகள் பெரும் பண்ணை வைத்திருப்போருக்கு மட்டுமே என்றாகிவிடும்.
புளியங்கொட்டை
இது சிறந்த ஆட்டுத் தீவனம். தோல் நீக்கி, அரைத்துத் தீவனமாகக் கொடுக்கலாம். வீட்டில் உள்ள புளியங்கொட்டையை மலிவான விலைக்கு விற்றுவிட்டு, அதிக விலையில் ஆட்டுத் தீவனம் வாங்குவது சரியில்ல.
வேலிக் கருவை நெற்றுகள்
இதுவும் தானியத்திற்கு ஈடான சிறந்த ஆட்டுத் தீவனம். இதில் 15 / 25% சர்க்கரைப் பொருள் உள்ளதால், தினம் 100 / 200 கிராம் மட்டுமே கொடுக்கலாம். சாமானியர்கள் இந்நெற்றுகளை சேகரித்து வைத்து சிறிது சிறிதாகத் தீவனமாக அளிக்கலாம்.
எள்ளு பிண்ணாக்கு
இதுவும் சிறந்த பிண்ணாக்கு. கறவை மாடுகளுக்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. வெள்ளாடுகளுக்கும் ஏற்றது.
தேங்காய் பிண்ணாக்கு
இதில் புரதம் சற்றுக் குறைவே. மேலும் விரைவில் கெட்டுவிடும் தன்மை கொண்டது. இது பெருமளவில் கலப்புத் தீவனம் உற்பத்தி செய்வோருக்கு நேரடியாக எண்ணெய் ஆலையிலிருந்து அனுப்பப்பட்டு விடுகின்றது. எங்கும் தாராளமாகக் கிடைப்பதில்லை.
சோயா பிண்ணாக்கு
தற்போது சோயா மொச்சை நம் நாட்டில் பயிரிடத் தொடங்கியுள்ள நிலையில் சோயா பிண்ணாக்கும், ஓரளவு கால்நடைத் தீவனமாகக் கிடைக்கின்றது. இது கடலைப் பிண்ணாக்கைப் போலச் சத்துள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், நச்சுப் பூஞ்சக் காளானால் இது பாதிக்கப்படுவதில்லை. ஆகவே இது உயர்ந்ததாகும்.
பருத்திக் கொட்டைப் பிண்ணாக்கு
முன்பு பருத்திக் கொட்டை பெருமளவில் கால்நடைகளுக்குத் தீவனமாகக் கிடைத்து வந்தது. மனிதத் தேவைக்கு எண்ணெய் கிடைக்காத சூழ்நிலையும், பலவகை எண்ணெய்களை வாசனையற்றுச் சுத்திகரிக்கும் சூழ்நிலையும், பருத்திக் கொட்டையை எண்ணெய் வித்தாக மாற்றி விட்டது. இப்போது பருத்திக் கொட்டைப் பிண்ணாக்கு கிடைக்கின்றது. இதுவும் சிறந்த வெள்ளாட்டுத் தீவனமே. இதில் பைபாஸ் புரதம் (By Pass Protein) அதிகம் உள்ளது.
அரிசித் தவிடு
இது சிறந்த வெள்ளாட்டுத் தீவனம் உமி கலவாமல், நன்கு சலித்துத் தீவனமாக அளிக்க வேண்டும். தற்போது வீடுகளில் கிடைக்கும் நெல் தவிர ஆலைகளிலிருந்து நெல் தவிடு வெள்ளாட்டுத் தீவனமாகக் கிடைப்பதில்லை. அப்படியே கிடைக்கும் சூழ்நிலையிலும், உமி கலந்ததாகவே உள்ளது. இப்போது நெல் தவிட்டிலிருந்து பெருமளவில் எண்ணெய் எடுப்பதால் எண்ணெய் நீக்கிய தவிடு, கலப்பினத் தீவனம் தயாரிப்போருக்குக் கிடைக்கின்றது. தவிட்டில் உள்ள உமி, வெள்ளாட்டுக் குடலில் அழற்சியை உண்டு பண்ணும்.
கோதுமை தவிடு
இது சிறந்த தீவனமாகும். இது அதிக விலையில் விற்றாலும் எங்கும் கிடைக்கின்றது. இதனைப் பண்ணையாளர்கள் கலப்புத் தீவனம் தயாரிக்க நன்கு பயன்படுத்தலாம்.
தானிய வகைகள்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நவ தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மலிவாக இருக்கும் தானியங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். நெல் மட்டும் விளையும் பகுதியில் அரிசி நொய் சேர்த்துக் கொள்ளலாம். யாவருமே அரிசியையே விரும்பி உண்ணத் தொடங்கிய சூழ்நிலையில் நவ தானியங்களைக் கால்நடைத் தீவனத்தில் சேர்த்துக் கொள்ளலாம். சோளம், கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு போன்றவை சிறந்தவை.
இது தவிரப் பயறு வகைகளில் கொள்ளு (காணம்) பொதுவாக மலிவான விலையில் கிடைப்பதால், இதனையும் அரைத்துத் தீவனத்தில் சேர்க்கலாம். இதன் காரணமாகப் பிண்ணாக்கு அளவைக் கலப்பது தீவனத்தில் குறைக்கலாம். எண்ணெய்க்காக எண்ணெய் வித்துக்கள் செக்கில் ஆட்டப்படும்போது கிடைப்பது பிண்ணாக்கு. எல்லாவிதப் பிண்ணாக்கும் வெள்ளாடுகளுக்கு ஏற்ற தீவனமாகாது. எல்லாவித எண்ணெயும் மனிதனுக்கு ஆகாததுபோலச் சத்து மிகுந்ததும், நச்சுத் தன்மை அற்றதும், நம் பகுதியில் கிடைப்பதுமான பிண்ணாக்குகள் குறித்துப் பார்க்கலாம். பொதுவாகத் தழையில் கிடைக்காத பாஸ்பரஸ் இவற்றில் அதிகம் கிடைக்கும்.
கடலை பிண்ணாக்கு
இதை பிண்ணாக்குகளின் அரசன் எனலாம். இதில் எவ்வளவு புரதம் உள்ளது. அரசர்களுக்கே ஆபத்தான காலம் இது. இந்தப் பிண்ணாக்கு அரசனுக்கும் ஓர் ஆபத்து. ஈரம் மிகுந்த பகுதியில் சேமிக்கப்படும் அல்லது தரம் குறைந்த வேர்க்கடலையிலிருந்து தயாரிக்கப்படும் கடலைப் பிண்ணாக்கில், அப்ஸோடாக்சின் என்னும் நச்சுப் பொருள் உள்ளது. இது ஒரு வகைப் பூஞ்சைக்காளானால் (Aspergillus flavus) உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆகவே தரமான பிண்ணாக்கு வாங்கி ஈரமற்ற இடங்களில் சேமித்து வைக்க வேண்டும். ஆகவே மிக உயர்ந்த இக்கால்நடைத் தீவனம் அளிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனைச் சொல்கிறனேயன்றி வேறல்ல. பிண்ணாக்கு என்றாலே கடலைப் பிண்ணாக்கே யாவரும் பயன்படுத்துவது, சிறந்தது, புரதம் 44% கொண்டது.
மேலும் கடலைப் பிண்ணாக்கு மாடுகள் எருமைகளுக்கு மிகச் சிறந்ததாகக் கருதப்படும் அளவிற்கு வெள்ளாட்டிற்குச் சிறந்ததல்ல என்று கூறும் ஆசிரியரும் உண்டு.
கலப்புத் தீவனம்
வெள்ளாடுகளுக்கு மாடுகளைப் போன்று அதிக அளவில் கலப்புத் தீவனம் பண்ணையாளர்களுக்கு அதிகச் செலவை உண்டு பண்ணும். பெரும் பாலும் வெள்ளாடுகளுக்கு கலப்புத் தீவனம் அளிக்கப்படுவதில்லை. ஆடு வளர்ப்பவர்கள் சிலர் வீட்டில் மீதியாகும் சிறிதளவு சோறு, தவிடு ஆகியவற்றைக் கொடுப்பார்கள். இச்சூழ்நிலையில் ஓர் எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். பலர் வீட்டில் விருந்தின்போது மீதியாகும் சோறு, பலகாரங்கள் ஆடு மாடுகளுக்குக் கொடுத்து விடுவார்கள். இதனால் பல வெள்ளாடுகள் இறந்துள்ளன. வெள்ளாடுகள் நம்மைப் போன்று சோறு சாப்பிடும் இனம் அல்ல. வெள்ளாடுகளின் பெருவயிற்றிலுள்ள நுண்ணுயிர்கள் லாக்டிக் அமிலத்தை உற்பத்தி செய்து அதன் காரணமாக இறக்க நேரிடும். சாதாரணமாக 100 – 150 கிராம் சோறு எதுவும் பாதிப்பை ஏற்படுத்தாது. பெரு வயிற்றுலுள்ள புரோட்டோசோவா என்னும் ஒற்றைச்செல் உயிரினங்கள் இவற்றை விழுங்கிப் பெருமளவில் அமிலம் வெளியாவதைத் தடுத்து நன்மை செய்துவிடும்.
பொதுவாக, ஆழ்கூள முறையில், அதிக எண்ணிக்கையில் வெள்ளாடு வளர்ப்பவர்கள் கலப்புத் தீவனங்களைத் தாங்களே தயாரித்துக் கொள்ளலாம். தவிடு, பிண்ணாக்கு, நவதானியம் ஆகிய மூன்றும் கீழ்க்காணும் விதத்தில் கலந்து தீவனம் தயாரிக்கலாம். இதில் 1% உப்பு, 2% தாது உப்புக் கலவை சேர்க்கப்பட வேண்டும். ஆகவே
  • தானியம் 50%
  • பிண்ணாக்கு 20%
  • தவிடு 17%
  • தாதுஉப்பு 2%
  • உப்பு 1%
என்னும் வீதத்தில் வெள்ளாடுகளுக்குக் கலப்புத் தீவனம் தயாரிக்கலாம். கலப்புத் தீவனத்தில் 12 – 15% செரிக்கும் புரதமும், 60 – 70 மொத்தச் செரிக்கும் சத்துக் கூறும் இருக்க வேண்டும்.
வேர்க்கடலைக் கொடி
கடலைக்கொடி, கடலை பயிரிடும் தமிழ் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும், ஆடு மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுக்கப்படுகின்றது. இதுவும் ஒரு சிறப்பு காய்ந்த தீவனமாகும். பயிரில் சிவப்புக் கம்பளிப் புழு தாக்குதல், கடலை உற்பத்தியைப் பாதிப்பதுடன், ஆடுகளுக்குப் பெருந் தீவனப் பஞ்சத்தை உண்டாக்குகின்றது.
துவரை இலை
தற்போது துவரம்பருப்புடன் சத்துமிகு தழை வழங்கும் மாத்துவரை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது நடைமுறையில் புன்செயில், துவரை பல பகுதிகளில் பயிரிடப்படுகின்றன. பயிர் விளைந்து துவரையை வெட்டித் துவரைப் பருப்பைப் பிரிக்கும்போது, உதிரும் இலை, நெற்றுக் கூடுகளை ஆடுகளுக்குத் தீவனமாக சேர்த்து வைக்கலாம். இந்த தவிரப் பருத்திச் சாகுபடிப் பகுதிகளில் பருத்தி இலைகளையும், சேகரித்துத் தீவனமாக அளிக்கலாம். இது போன்றே மொச்சை, அவரைச் செடிகளில் உதிர்ந்த இகைளை வெள்ளாடுகளுக்குத் தீவனமாக அளிக்கலாம்.
உலர் தீவன அவசியம் என்ன? பொதுவாக அசைபோடும் கால்நடைகள், சிறப்பாக வெள்ளாடுகள் பசுந்தீவனத்தை மட்டும் உண்டு அவற்றின் முழுத் தீவனத் தேவையையும் நிறைவு செய்துவிட முடியாது போகலாம். முக்கியமாக அவற்றிற்குத் தேவைப்படும் அளவு காய்வு நிலைத் தீவனத் தேவை (Dry Matter) அடைய முடியாது போகும். ஆகவே, அவற்றின் பசி அடங்காது. வயிறு நிறையத் தீவனத்தைத் தின்றுவிட்டு, அதற்கு மேல் தின்ன முடியாது இருக்கும் வெள்ளாடுகள் இரவில் பசியால் துன்புறும். காரணம், பசுந்தீவனம் பெரு வயிற்றின் இடத்தை அடைத்துக் கொள்ளும். ஆகவே மாடுகளுக்கு இரவில் சிறிதளவு காய்ந்த தீவனம் அரைக்கிலோ கொடுக்கலாம் அல்லது பகல் வேளையில் பாதியும் இரவில் பாதியுமாகக் கொடுக்கலாம்.
தொகுப்பு : A R தியாகரஜன், கால்நடை மருத்துவர்,