யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

சனி, 14 டிசம்பர், 2013

மாடு, ஆடு, கோழி கழிவிலிருந்து எரிவாயு...

மாடு, ஆடு, கோழி கழிவிலிருந்து எரிவாயு...


வினை விதைப்பவன் வினை அறுப்பான்’ என்பது போல, தனியார்மயத்தின் விளைவை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டது இந்தியா. பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியத் துறையில் தனியார் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய பிறகு, மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை ஏறுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை விண்ணில் பறக்கிறது. 'ஆண்டுக்கு ஒன்பது சிலிண்டர்கள் மட்டுமே மானியத்தில் கொடுப்போம்...’ என கறார் காட்டுகிறது, அரசு. 'இதை எப்படி சமாளிப்பது?’ எனத் தெரியாமல், எரிவாயு இல்லாமலே எரிகிறது, சாமானியனின் வயிறு.
இந்நிலையில், ''விலைவாசியைப் பற்றி கவலைப்படுவதைவிட, அதை எப்படி சமாளிக்கலாம் என்று யோசிப்பதுதான் நல்லது. வீடுகளில் ஆடு, மாடு வைத்திருப்பவர்கள்... தமிழக அரசின் விலையில்லா ஆடு, மாடுகளை வாங்கியிருக்கும் ஏழை நடுத்தர மக்கள்... அந்தக் கால்நடைகளின் கழிவுகள்  மூலமாகவே சமையல் எரிவாயுப் பிரச்னையைத் தீர்க்க முடியும்'' என்கிறார், கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தா கேந்திராவின் இயற்கை வள அபிவிருத்தி மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன்.
தொடர்ந்த ராமகிருஷ்ணன், ''சமையலறைக் கழிவுகளில் இருந்து எரிவாயு தயாரிக்க உதவும் வகையில், 'சக்தி சுரபி’ என்ற பெயரில் ஒரு கலனை ஏற்கெனவே அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இதைப் பற்றி, 'பசுமை விகடன்' மற்றும் 'அவள் விகடன்' இதழ்களிலும் எழுதியிருக்கிறீர்கள்.
அதன் தொடர்ச்சியாக ஒரு மாடு, நான்கைந்து ஆடுகள், கொஞ்சம் கோழிகள் வைத்திருக்கும் அடித்தட்டு மக்களும் பயன்பெறும் வகையில், புதிதாக ஒரு கலனை வடிவமைத்துள்ளோம். நான்கு அடி உயரம், மூன்றரை அடி விட்டம் கொண்ட இந்தக் கலனில்,  உட்செலுத்தும் குழாய், செரிப்பான், வாயு சேகரிப்பான்(இந்த வாயு சேகரிப்பான், வாயு சேர்ந்த பிறகு மிதக்கும். இதை மிதக்கும் கலன் என்றும் சொல்வார்கள்.)  ஸ்லர்ரி (சாணக்கழிவுக் குழம்பு) வெளியேறும் பகுதி, உற்பத்தியான வாயுவை வெளியே கொண்டு செல்லும் குழாய் என மொத்தம் ஐந்து பாகங்கள் இருக்கும்.
இரண்டு வாரத்தில் எரிவாயு!
முதல் முறை உற்பத்தி தொடங்கும்போது... 400 கிலோ சாணத்தை, 400 லிட்டர் தண்ணீரில் நன்கு கரைத்துவிட வேண்டும். இந்த அளவு கரைசல் எப்பொழுதுமே கலனில் இருக்க வேண்டும். இந்தக் கரைசலுக்கு 'ஸ்டார்ட்டர் கரைசல்' என்று பெயர். இக்கரைசலை உட்செலுத்தும் குழாயில் புனல் மூலம் ஊற்றி, மூடிவிட வேண்டும். சாணத்தில் வைக்கோல் முதலிய மிதக்கும் குப்பைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். இந்தக் கரைசலில் 'அனோரபிக்' பாக்டீரியாக்கள் அதிக அளவில் உற்பத்தியாவதால், அந்தக் கலனில் இருக்கும் மிதக்கும் கலன் ஒருவாரத்தில் படிப்படியாக உயரத் தொடங்கும்.
எரிவாயு உற்பத்தியாக உற்பத்தியாக கலன் உயரும். இரண்டு வாரத்தில் சாண எரிவாயு முழுவதுமாக உற்பத்தியாகிவிடும். உற்பத்தியான எரிவாயு, வாயு வெளிச்செல்லும் குழாய் மூலம் அடுப்பை அடையும். கலன் அரை அடி உயர்ந்ததுமே, அடுப்பில் தீ பற்ற வைத்து சோதித்துப் பார்க்கலாம். ஆனால், முதல் 5 நாட்கள் வரை உற்பத்தியாகும் வாயுவில், துர்நாற்றம் இருக்கும் என்பதால், அதை அப்படியே வெளியேற்றிவிட வேண்டும். அதன் பிறகு பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
தொடர்ந்து, தினமும் கிடைக்கும் சாணத்தில், சம அளவு தண்ணீரையும் சேர்த்து, கலனுக்குள் ஊற்ற வேண்டும். எரிவாயு உற்பத்திக்குப் பிறகு, தேவையற்ற கழிவு (ஸ்லர்ரி) தானாக வெளியேறி விடும். இதை, பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், அசோலா வளர்ப்பு ஆகியவற்றுக்குப் பயன்படுத்தலாம். நேரடி உயிர் உரமாகவும் பயன்படுத்தலாம்.
இக்கலனில், மாட்டுச் சாணம், ஆட்டுப் புழுக்கை, கோழி எரு என எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். விலையில்லா ஆடுகள் அதிகரித்து வருவதால், அவற்றின் கழிவுகளை முறையாக பயன்படுத்தினால், எரிவாயுச் செலவை மிச்சப்படுத்துவதோடு, ஊட்டமேற்றிய உரமும் போனஸாக கிடைக்கும். இதில், 15 ஆடுகளின் கழிவை இட முடியும். அதேபோல 50 கோழிகளின் கழிவை இதில் இட முடியும். மாடுகள் அதிகமாக இருந்தால்... சாண எரிவாயுக் கலன் மூலமாக, மின்சார உற்பத்தியும் செய்யலாம்'' என்ற ராமகிருஷ்ணன்,
21 ஆயிரம் ரூபாய்!
''இதை எங்கள் மையத்தில் தயாரித்து விற்பனை செய்கிறோம். தற்போது ஃபைபரால் செய்யப்பட்ட கலன் மட்டுமே அமைத்துக் கொடுக்கிறோம். கலன் மற்றும் சாண எரிவாயு அடுப்பு ஆகியவற்றுக்கு 19 ஆயிரம் ரூபாயும், எரிவாயுக் குழாய் இணைப்புக்கு 2 ஆயிரம் ரூபாயும் சேர்த்து மொத்தம் 21 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஃபைபர் கலன் என்பதால், செலவு சற்று கூடுதலாக இருக்கிறது. பிளாஸ்டிக் அல்லது சிமெண்ட் தொட்டிகள் மூலம் அமைத்தால் செலவு குறையும். அதற்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எளிதில் கொண்டு செல்லலாம். வீட்டுக்கு அருகே சாணத்தை குவித்து வைத்தால், ஈ, கொசுத்தொல்லை இருக்கும். அதற்கு பதிலாக, எரிவாயுக் கலனை அமைப்பதன் மூலம், சமையலுக்குத் தேவையான வாயு கிடைப்பதோடு... கூடுதல் பலனாக... ஊட்டமேற்றப்பட்ட உரமும் கிடைக்கும். வயல்வெளிப் பயிர்கள், வீட்டுத் தோட்டப் பயிர்களுக்கெல்லாம் இது அருமையான உரம்'' என்று சொன்னார்.
தொடர்புக்கு, ராமகிருஷ்ணன்,
செல்போன்: 94426-53975.

சிறந்த கறவை மாடுகளைத் தேர்வு செய்வது எப்படி?

சிறந்த கறவை மாடுகளைத் தேர்வு செய்வது எப்படி?

பால் மற்றும் பால் பொருள்களின் தேவை அதிகரித்து வருவதால், கால்நடை வளர்ப்பில் பால் பண்ணைத் தொழிலுக்கு முக்கியத்துவ ம் அதிகரித்து வருகிறது. அதன்படி, பால் பண்ணைத் தொழிலை லாபகரமாக செயல்படுத்த சிறந்த கறவை மாடுகளைத் தேர்வு செய்வது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளது.
பால் பண்ணைத் தொடங்க முதலில் நல்ல கறவை மாடுகளைத் தேர்வு செய்தல் வேண்டும். அதற்கு கறவை மாடுகள் குறித்த அடிப்படை விஷயங்களைத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். கறவை மாடுகள் வாங்கும் போது பதிவேடுகளை நன்கு பராமரித்து வரும் அரசு கால்நடைப் பண்ணைகள், தனியார் பண்ணைகளிலிருந்து பசுக்களைத் தேர்வு செய்வது சிறந்தது.
ஏனெனில் அந்தப் பதிவேடுகளில் பிறந்த தேதி, கன்று ஈன்ற தேதி, கறவைக் காலம், கொடுத்த பாலின் அளவு போன்ற விவரங்கள் குறித்து வைக்கப்பட்டிருக்கும். அதன்படி, பதிவேடுகள் மூலம் ஆண்டுக்கு ஒரு கன்று, அதிகப் பால் உற்பத்தித் திறன் உள்ள பசுக்களைத் தேர்வு செய்யலாம்.
பதிவேடுகள் என்பது பெரும்பாலும் ஏட்டளவிலேயே உள்ளன. இந்தச் சூழலில் மாடுகளின் தோற்றத்தைக் கொண்டும் அவற்றின் குணாதிசயங்கள் கொண்டும் பசுக்களை தீர்மானிக்கலாம். அதாவது, பசுவின் அமைப்புக்கும், அதன் உற்பத்தித் திறனுக்கும் ஓரளவு தொடர்பு உள்ளதென ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.
பசுவானது சுறுசுறுப்பாகவும், கண்கள் பிரகாசமாகவும், கருவிழி நன்கு அசையும் வண்ணமும் இருக்க வேண்டும். மூக்கின் முன்பகுதி ஈரமாக இருக்கவும், மூக்குத் துவாரங்கள் பெரியதாகவும் அகன்றும் இருக்க வேண்டும். மூச்சு விடும் போதோ அல்லது உள்ளிழுக்கும் போதோ குறட்டைச் சப்தம் வரக்கூடாது.
பல் வரிசை சீராக இருப்பதைக் கடைவாய்ப் பல்கள் அனைத்தையும் வாயைத் திறந்து நாக்கை விலக்கிப் பார்த்தல் வேண்டும். அதிக தேய்மானம், சொத்தைப் பல், புண் மற்றும் துர்நாற்றம் இருக்கக் கூடாது. மாடுகள் ஓய்வு நேரங்களில் அசை போட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
பசுவை பக்கவாட்டில் இருந்து பார்க்கையில் முன்னங்காலின் பகுதியைவிட பின்னங்கால் பகுதியில் உடலளவு பெரிதாக இருந்தால் தீவனத்தை நன்கு உள்கொண்டு பாலாக மாற்றும் திறன் உடையது என்று அனுமானிக்கலாம்.
பசுவின் மேல் பகுதியைப் பார்க்கையில் முன்னங்கால் பகுதியிலிருந்து இரு பக்க இடுப்பு எலும்பு வரையில் வரும் நேர்க்கோட்டில் இரு பக்கமும் விரிவடைந்திருக்க வேண்டும். அதன்படி, இடுப்பு எலும்பு அகலமாக இருப்பதால் இனப்பெருக்க உறுப்புகள் சிறப்பாக வளர்ந்திருக்கும், கன்று போடுவதில் எந்த சிரமமும் இருக்காது.
கறவை மாடுகள் அதிக கொழுப்புடனோ அல்லது அதிகமாக மெலிந்தோ இருக்கக் கூடாது. கறவை மாடுகளின் விலா எலும்புகளில் கடைசி மூன்று எலும்புகள் மட்டும் தெரிவது சிறந்ததாகும்.
கால்கள் உறுதியாகவும், நடக்கும் போது சீராக ஊன்றியும் நடக்க வேண்டும். பசுவின் நான்கு கால்களும் உடம்பின் நான்கு மூலையிருந்து நேராக தரையை நோக்கி இறங்கியிருக்கவும், பசு படுப்பதற்கோ எழுவதற்கோ சிரமப்படக் கூடாது.
மடியின் நான்குக் காம்புகளும் ஒரே அளவாகவும், சரிசமமாகவும், காம்புகளின் நுனியில் பால் வரும் துவாரம் இருக்க வேண்டும். காம்புகள் அதிக நீளமாகவும் இருக்கக் கூடாது. தவிர, பால் மடியானது உடலோடு நன்கு ஒட்டியிருக்கவும், மடி உடலோடு சேரும் பகுதி அகன்று விரிந்தும் அடிவயிற்றில் நன்கு திரண்டும் இருக்க வேண்டும்.
பால் கரந்த பிறகு மடி நன்கு சுருங்க வேண்டும். மாட்டின் கலப்பினத் தன்மைக்கேற்ப கணக்கிடப்பட்ட அளவுக்குப் பால் கறக்க வேண்டும். அதற்கு தொடர்ந்து மூன்று நாள்கள் இரு வேளையும் பால் கறந்துப் பார்த்து மாடுகளை வாங்க வேண்டும். பத்து லிட்டர் பாலை எட்டு நிமிஷங்களில் கறக்க வேண்டும்.
பால் கறக்கும் போது கால்களைக் கட்டியோ அல்லது மாடுகளைப் பிடித்துக் கொண்டோ கறக்கும் பழக்கமுள்ள மாடுகளை வாங்குவது நல்லதல்ல. மேலும், மாடுகள் முதல் கன்று ஈற்றைவிட இரண்டாவது, மூன்றாவது ஈற்றில்தான் அதிகமாக பால் கொடுக்கும். எனவே, மாடுகளை முதல் மூன்று ஈற்று இருக்குமாறு பார்த்து வாங்குவது சிறந்தது என்றனர் அவர்கள்.
தினமணி செய்தி -
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி, விரிவாக்கத் துறை பேராசிரியர்கள் நா.நர்மதா, வே.உமா, மொ.சக்திவேல் ஆகியோர் கூறியது: