யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

ஞாயிறு, 28 ஜூலை, 2013

மத்திய செம்மறியாடு மற்றும் உரோம ஆராய்ச்சி நிலையத்தின் மையம் ஓர் அறிமுகம்

தோற்றம் : 

மத்திய செம்மறி ஆடு மற்றும் கம்பள உரோம ஆராய்ச்சி நிலையம் 1962 ஆம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் அருகிலுள்ள மால்புராவில் ஆரம்பிக்கப்பட்டு இப்போது அந்த இடம் அவிக்காநகர் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையத்தின் தென் மாநிலங்களுக்கான ஆராய்ச்சி மையம் 1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள கொடைக்கானல் தாலுகாவில் மன்னவனூர் என்ற இடத்தில் தொடங்கப்பட்டது.

நோக்கம் :

இந்நிலையத்தில் செம்மறி ஆடு மற்றும் முயல் பற்றிய அடிப்படை மற்றும் பயன்சார்ந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளுதல்.

இறைச்சி, உரோம இழை மற்றும் உரோமத்துடன் கூடிய தோல் மூலம் கூடுதல் வருவாய் ஈட்ட முயற்சிகள் மேற்கொள்வது.

ஆராய்ச்சி மூலம் கற்ற தொழில்நுட்ப அறிவினை ஆடு மற்றும் முயல் உற்பத்தி செய்வோரிடையே பரப்புவது.

ஆடு மற்றும் முயல் வளர்ப்பில் ஈடுபாடு உள்ளவர்கட்கு அது குறித்த தொழில்நுட்பம் மற்றும் அனுபவம் சார்ந்த பயிற்சி அளிப்பது.

செம்மறி ஆடு மற்றும் முயல் பராமரிப்பு குறித்த ஐயங்களைக் களைவது.

மேற்கூறிய குறிக்கோள்களை மனதில் வைத்து மன்னவனூரின் தட்பவெப்ப நிலைகள் கண்டு இங்கு ஆடை நெய்ய உகந்த கம்பள இழைகளைக் கொடுக்கும் செம்மறி ஆடுகளை வளர்க்க முயற்சிகள் தொடங்கப்பட்டன. முதன்முதலாக உயர்ந்த உற்பத்தி திறன் கொண்ட அந்நிய நாட்டு செம்மறி ஆடுகளின் தகவமைப்பை (Adaptability) அறியும் நோக்குடன், 1966 ஆம் ஆண்டு முதல் ரோம்னிமார்ஷ் (Romney Marsh),சௌத் டவுன் (South Down), காரிடேல் மற்றும் ராம்புல்லே (Rambouillet) போன்ற அயல்நாட்டு செம்மறி ஆடுகளை வைத்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இவைகளில் காரிடேல் மற்றும் மெரினோ கிடாக்களை 1977 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் குரும்பை இனங்களான கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி இன பெட்டைகளுடன் இனச்சேர்க்கை செய்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. முதல் சந்ததியில் உருவான கலப்பின ஆடுகள், எடையிலும், வளர்ச்சி விகிதத்திலும், உரோம உற்பத்தி மற்றும் தரத்திலும் நாட்டினங்களைவிட குறிப்பிடத்தக்க அளவு அதிக திறன் வாய்ந்ததாக அறியப்பட்டது.

1967 ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 136 காரிடேல் செம்மறி ஆட்டு கிடாக்களை சுமார் 700 கோயம்புத்தூர் குரும்பை இன பெட்டை ஆடுகளுடன் கலப்பினம் செய்வதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டது. கலப்பின வழித்தோன்றல்களின் உற்பத்தி திறன் சார்ந்த காரணிகளான உயிர் வாழ் திறன், உடல் எடை, வளர்ச்சி வீதம், உரோம இழைகளின் தரம் மற்றும் உற்பத்தி, இனப்பெருக்கக் கூறுகளில் பதிவு செய்யப்பட்ட முன்னேற்றம் ஆகியன கோயம்புத்தூர் குரும்பை ஆடுகளின் திறனை விட குறிப்பிடத்தக்க அளவில் இருப்பது உணரப்பட்டது.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இராம்புல்லே கிடாக்களை 1984-ல் கோவை ஆடுகளுடன் கலப்பினம் செய்ததில், கலப்பின குட்டிகளின் பிறப்பு எடை 2.5 கிலோவாக இருந்தது. ஆனால், அது கோயம்புத்தூர் குட்டிகளில் 2.3 கிலோ இருந்தது. ஆறு மாத எடை கலப்பின குட்டிகளில் 15.1 கிலோவாகவும், குரும்பையில் 12.8 கிலோவாகவும் இருப்பது எடை பதிவு செய்வதன் மூலம் உறுதி செய்யப்பட்டது. 

ஒன்பது மாதத்தில் மேற்கூறிய எடைகள் 20 மற்றும் 15.5 கிலோவாகவும் இருந்தது. இந்த ஆய்வுகளின் பொழுது ஆடுகளுக்கு புரதம் நிறைந்த அடர் தீவனம் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஆய்வில் கலப்பின ஆடுகளின் சினைப்படுத்தப்பட்ட விகிதம் 78.3 மற்றும் குட்டி ஈனும் திறன் 90.5 விழுக்காடு என உணரப்பட்டது. இளவேனில் (Spring)காலத்தில் சினைக்குட்படுத்தப்பட்ட மற்றும் ஈன்ற பெட்டைகள் முறையே 86.5 மற்றும் 86.2 விழுக்காடு என கண்டறியப்பட்டது.

உரோம உற்பத்தி, கலப்பின ஆடுகளில் 1.2 கிலோவும், கோவை குரும்பையில் 0.515 கிலோவும் இருப்பது தெரிய வந்தது. இருப்பினும், பசை நீக்கம் செய்யப்பட்ட பின் உரோமத்தின் அளவு மொத்த உரோமத்தில் 70.5 விழுக்காடாகவும், கோவை குரும்பையில் 75.8 விழுக்காடாகவும் பதிவு செய்யப்பட்டது. 

ஏனெனில், கலப்பின ஆடுகளின் உரோம இழைகள் கோவை குரும்பை ஆடுகளின் உரோம இழைகளைக் காட்டிலும் சன்னமாகவும், அதிக எண்ணெய் பசை உடையதாகவும் இருந்தது. கலப்பின மற்றும் கோவை குரும்பையில் இழைக்கொத்தின் நீளம் முறையே 4.9 மற்றும் 5.2 சென்டிமீட்டர் என அளவிடப்பட்டது. கலப்பின ஆடுகளில் 0-3, 3-6, 6-12 மற்றும் 12 மாத வயதுகளில் உயிர்வாழ் திறன் (Survivability) முறையே 90.6, 98.3, 95.3 மற்றும் 100 விழுக்காடு என பதிவு செய்யப்பட்டது. 
செம்மறி ஆடு, முயல் வளர்க்க வழிகாட்டு மையம்!


விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் தமிழ்நாட்டு விவசாயிகள் மழை பொய்த்து தங்கள் தொழில் பாதிக்கப்படும் பொழுதெல்லாம் மாற்றுத் தொழிலின்றி அண்டை மாவட்டங்களுக்கு தஞ்சம் பிழைக்கச் செல்லும் நிலைக்கு தீர்வு தருகிது கொடைக்கானலில் இயங்கிவரும் தென் மண்டல ஆராய்ச்சி மையம்!

கொடைக்கானலில் இருந்து 28 கி.மீ. தூரத்தில் உள்ள மன்னவனூர் என்ற இடத்தில் இயங்கிவரும் தென் மண்டல ஆராய்ச்சி மையம் செம்மறியாடு, முயல் மற்றும் உரோம ஆராய்ச்சி ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறது. 

ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தில் 1965 ஆம் ஆண்டு இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தால் அமைக்கப்பட்ட மத்திய செம்மறியாடு உரோம ஆராய்ச்சி நிலையத்தின் தென் மண்டல கிளையான இந்த ஆராய்ச்சி மையம் 1970-ல் அமைக்கப்பட்டது. 

செம்மறியாடு வளர்ப்பிலும், இறைச்சி இன முயல் வளர்ப்பிலும் தமிழகம் முன்னேற்றம் கண்டிடவும், அதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை விவசாயிகளுக்கு வழங்கிடவும் இந்த ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. 

பாரத் மெரீனோ என்றழைக்கப்படும் பொலி கிடாக்களை உருவாக்கிய மத்திய செம்மறியாடு ஆராய்ச்சி மையம், இங்கு பல்வேறு இன முயல்களை வளர்த்து, ஆய்வு செய்து அதனை எவ்வாறு வளர்த்து பயன் பெறலாம் என்கின்ற ஆலோசனைகளையும், அதற்குரிய அத்தியாவசியப் பொருட்களையும் அளிக்கின்றது. (பார்க்க இறைச்சி இன முயல் வளர்ப்பு)

இங்கு பாரத் மெரீனோ என்கின்ற நல்ல வளர்ச்சியைத் தரும், நிறைய உரோமத்தைத் தரும் செம்மறியாட்டு வகையை வளர்ப்பது மட்டுமின்றி, இறைச்சிக்காக வளர்க்கப்படும் முயல்கள் பற்றியும், உரோமத்தை மட்டுமே தந்து நல்ல வருவாயைத் தரக்கூடிய ஜெர்மன் அங்கோரா வகை முயல்களையும் வளர்த்து ஆய்வு செய்து வருகின்றனர். 

ஆடு வளர்ப்பு, முயல் வளர்ப்பு ஆகிய தொழில்களில் ஈடுபட விரும்புவோருக்கு இம்மையத்தில் கட்டணத்துடன் 5 நாட்கள் தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது. 

மிகக் குறைந்த முதலீட்டில் நல்ல வருவாயை ஈட்டக்கூடிய பண்ணைத் தொழில்களுக்கு இந்த மையம் ஆலோசனை தருகிறது. 

பாரத் மெரீனோ - இரு பயன்கள் கொண்ட செம்மறியாடு
இறைச்சி இன முயல் வளர்ப்பு 
செம்மறியாடு, முயல்களுக்கு புல் மற்றும் தீவனப் பயிர்கள் 
தென் மண்டல ஆராய்ச்சி மையம் - ஒர் அறிமுகம் 

தொடர்புகொள்ள : 

பொறுப்பு அலுவலர், 
தென் மண்டல ஆராய்ச்சி மையம், 
மன்னவனூர் அஞ்சல்
கொடைக்கானல் - 624 103
திண்டுக்கல் மாவட்டம்.