யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

புதன், 7 மே, 2014

பட்டதாரி இளைஞரின் பலே விவசாயம்!

வெண்டை, கீரை, அவரை, மிளகாய்... 3மாதம் 90 ஆயிரம்...

காலநிலை மாறுபாடு, வறட்சி, இயற்கைச் சீற்றங்கள்... என விவசாயம் பொய்த்துப் போவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால், நன்கு விளைந்து அதிக மகசூல் கிடைக்கும் சூழ்நிலையிலும், விளைபொருட்களுக்கு விலை குறைந்து பிரச்னை வந்துவிடும். குறிப்பாக, ஒரே பயிரையே அதிகப் பரப்பில் சாகுபடி செய்யும் விவசாயி களுக்குத்தான் இந்த பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. ஆனால், குறைந்த பரப்பாக இருந்தாலும், பலவித பயிர்களைக் கலந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, விலை பிரச்னை பெரியளவில் வருவதில்லை. ஏனெனில், ஒரு பயிர் கைவிடும்போது... இன்னொரு பயிர் காப்பாற்றி விடுகிறது. இந்த சூட்சமத்தைத் தெரிந்து வைத்திருக்கும் பலர், நல்ல வருமானம் ஈட்டி வருகிறார் கள். அவர்களில் ஒருவர்... காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் பரத்.
பேராசிரியர் விதைத்த வித்து!
காலைவேளை ஒன்றில், தன் தோட்டத்தில் பரத் வேலை செய்து கொண்டிருந்தபோது சந்தித்தோம். ''சென்னை, பச்சையப்பா காலேஜ்ல எம்.எஸ்.சி ஜுவாலஜி படிச்சுட்டு இருந்த சமயத்துல, பஞ்சகவ்யா பத்தி ஒரு பேராசிரியர் சொன்னார். அந்த விஷயத்துல எனக்கு ஆர்வம் வந்து, அதைப்பத்தி நிறைய விஷயங்களைத் தேட ஆரம்பிச்சேன். படிப்பு முடிஞ்சதும், தமிழ்நாடு அரசின் பசுமையாக்கல் திட்டத்துல உதவி ஆராய்ச்சியாளரா தற்காலிகப் பணியில சேர்ந்தேன். வண்டலூர் வன ஆராய்ச்சி நிலையத்துக்கு உட்பட்ட கொளப்பாக்கம் பகுதியில மரங்களை ஆய்வு செஞ்சு அறிக்கை கொடுக்கறதுதான் வேலை. அங்கதான், மரங்கள்ல இலையைச் சாப்பிடற பூச்சிகள், தண்டுகள துளைக்கிற வண்டுகள், வேரை பாதிக்கிற பூச்சிகள் பத்தியெல்லாம் அனுபவரீதியா தெரிஞ்சுக்கிட்டேன். குறிப்பா, தேக்கு மரத்துல இலைப்புள்ளி நோய், இலைக்கருகல் நோயோட பாதிப்பு அதிகமா இருந்துச்சு. அந்த மரங்களுக்கு பஞ்சகவ்யாவைக் கொடுத்தப்போ பூச்சிகள் கட்டுப்பட்டுச்சி. நன்மை செய்ற பூச்சிகளும் நிறைய வந்துச்சி. புதுசா வெச்ச மரக் கன்றுகளுக்கு பஞ்சகவ்யா கொடுத்தப்போ, வளர்ச்சி அபரிமிதமா இருந்துச்சி. அப்போதான், 'இதைப் பயன்படுத்தி நாம ஏன் விவசாயம் செய்யக்கூடாது?’னு யோசனை வந்துச்சி. இதுதான், இன்னிக்கு என்னையும் ஒரு விவசாயியா உங்ககிட்ட பேச வெச்சிருக்கு.
நிறைய இயற்கை... கொஞ்சம் செயற்கை!
நாலு வருஷமா அப்பாவோடு சேர்ந்து விவசாயம் பாத்துட்டிருக்கேன். இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, வேலை பார்த்துட்டு இருக்குற தம்பி பாஸ்கரனும் லீவு நாட்கள்ல எங்களோட சேர்ந்துக்கு வான். ஒரே பயிரைப் போடுறப்போதான், பூச்சிகள், நோய்கள், விலை இல்லாம போறதுனு பல பிரச்னைகள் வரும். அதனால, கீரை, காய்கறிகள், நெல்னு கலந்துதான் சாகுபடி செய்றோம். கொஞ்சம் ரசாயனம், கொஞ்சம் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம்னு கலந்து விவசாயம் செய்றோம். நண்பர் மூலமா சீரகச் சம்பா விதைநெல் கிடைச்சுது. 20 சென்ட்ல அதை விதைச்சு... பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் ரெண்டையும் சேத்துக் கொடுத்ததுல நல்லா வளந்துச்சு. இப்போ ஊர்க்காரங்கள்லாம் என்கிட்ட பஞ்சகவ்யா பத்தி கேக்க ஆரம்பிச்சிட்டாங்க'' என்ற பரத், தொடர்ந்தார்.
கலப்புப் பயிரோடு கறவை மாடுகளும்!
''மொத்தம் ரெண்டு ஏக்கர் இருக்கு. செம்மண் கலந்த சரளை மண். அதனால, எந்தப் பயிர் வெச்சாலும் தங்கமா விளையும். 15 சென்ட்ல கோ-4 தீவனப் பயிர், 10 சென்ட்ல மிளகாய் (இந்த 25 சென்ட்லயே 20 செம்மரம், 20 மகோகனி, 20 தேக்குக் கன்றுகள 6 க்கு 6 இடைவெளியில் நடவு போட்டிருக்கிறார்), 30 சென்ட்ல வெண்டை, 30 சென்ட்ல கீரை அதுல ஊடுபயிரா அவரையும், 20 சென்ட்ல கனகாம்பரம், 10 சென்ட்ல ராகி, 15 சென்ட்ல தனியாக கீரையும், 30 சென்ட்ல கீரை அதுல ஊடுபயிரா நூக்கல், முள்ளங்கி, பாம்பு வெள்ளரியை போட்டிருக்கேன். மீதி 40 சென்ட்ல வெண்டையும், நெல்லும் அறுவடை முடிச்சுருக்கேன். மூணு மாடுகள், மூணு கன்னுகுட்டிகளும் இருக்கு. அதுல, ரெண்டு மாடு கறவையில இருக்கு. ஒரு மாடு சினையா இருக்கு. மரப்பயிர், கனகாம்பரம், ராகி இதெல்லாம் இப்பத்தான் நடவு போட்டு வளர்ந்துகிட்டிருக்கு. இதுல மகசூல் பார்க்க இன்னும் நாளாகும்.

சிறுகீரையை 17-வது நாள்ல இருந்து அறுவடை பண்ணலாம். அரைக்கீரை, முளைக்கீரை ரெண்டையும் 20-வது நாள்ல அறுவடை பண்ணலாம். தொடர்ந்து, 5 நாள் வரை கீரை பறிக்கலாம். தனித்தனியா மேட்டுப்பாத்தி அமைச்சு, ஒவ்வொரு பாத்தியிலயும் ரெண்டு நாள் இடைவெளியில விதைகளைத் தூவுவேன். இப்படி செய்யுறப்போ, தொடர்ந்து 20 நாளுக்கு கீரை பறிக்க முடியுது. மேட்டுப்பாத்திங்கிறதால, மழைக் காலத்துல தண்ணி தேங்காது. அதேமாதிரி சுழற்சி முறையில்தான் பயிர் நடவு செய்றேன். ஒரு முறை கீரை போட்டா... அந்த நிலத்துல அடுத்த முறை வெண்டை, அடுத்த முறை நெல், அடுத்த முறை கேழ்வரகுனு மாத்தி மாத்தி பயிர் செய்றப்போ, நிலத்துல சத்துக்கள் குறையறதில்லை.
நிலத்திலேயே விதை வங்கி!
இப்போ, கடைகள்ல 1 கிலோ விதை சிறுகீரை-180 ரூபாய், முளைக்கீரை-300 ரூபாய், அரைக்கீரை-400 ரூபாய்னு விதைகளை விற்பனை பண்றாங்க. விலை கூடுதலா இருக்கறதால... நானே விதையை உற்பத்தி பண்ணிக்கிறேன். எவ்வளவு விதை தேவையோ... அந்தளவுக்கான கீரைகளை மட்டும் பறிக்காம நிலத்துல விட்டுட்டா 40-45 நாள்ல விதை வந்துடும். அப்படியே கீரையை வேரோட பிடுங்கி, ஒரு வாரத்துக்கு காய வெச்சு கம்பால தட்டி தூத்துனா, விதைகள் கிடைச்சுடும். இதனால, விதைச்செலவு குறைஞ்சுடுது'' என்ற பரத் வருமானம் பற்றிச் சொன்னார்.
3 மாதங்கள்... 90 ஆயிரம் ரூபாய்!
''30 சென்ட்ல இருக்கற வெண்டை அறுவடை முடிஞ்சிருக்கு. ஒரு அறுப்புக்கு ஏறக்குறைய 60 கிலோ வரைக்கும் கிடைச்சுது. எனக்கு மொத்தம் 22 அறுப்பு மூலமா 1,300 கிலோ காய் கிடைச்சுது. ஒரு கிலோ 13 ரூபாய்ல இருந்து 18 ரூபாய் வரைக்கும் வித்துச்சி. சராசரியா 15 ரூபாய் கிடைக்கும். அப்படி பார்த்தா... 1,300 கிலோ மூலமா, 19 ஆயிரத்து 500 ரூபாய் கிடைச்சுது. வருஷத்துல மூணு முறை இப்படி வெண்டை போட்டுடுவேன்.
கீரை மொத்தம் 75 சென்ட்ல இருக்கு. இதுல தனியா 15 சென்ட்ல இருக்கற கீரை இன்னும் அறுவடைக்கு வரல. 60 சென்ட் கீரை மூலமா... 3 ஆயிரத்து 800 கட்டு கீரை அறுவடை செஞ்சு, கட்டு 6 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல, 22 ஆயிரத்து 800 ரூபாய் கிடைச்சுது. இந்த 60 சென்ட் கீரையில ஊடுபயிரா போட்டிருந்த வெள்ளரி, முள்ளங்கி, நூக்கல் எல்லாத்துலயும் சேர்த்து 5,800 ரூபாய் கிடைச்சுது. இதுல ஊடுபயிரா இருக்கற அவரையில 300 கிலோ கிடைச்சுது. கிலோ 20 ரூபாய் வீதம் விற்பனை செய்ததுல... 6 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. மிளகாய்ல 7 ஆயிரத்து 500 ரூபாய் கிடைச்சுது. ஆகக்கூடி மூணு மாசத்துல கிடைக்கிற மொத்த வருமானம்... 61 ஆயிரத்து 600 ரூபாய்.
மாடு வளர்க்கறதால... பால் மூலமா மாசம் 9 ஆயிரம் 660 ரூபாய் கிடைக்குது. இதையே மூணு மாசத்துக்கு கணக்குப் போட்டா..
28 ஆயிரம் 980 ரூபாய் கிடைக்குது. ஆக, 1 ஏக்கர் 70 சென்ட் நிலத்துல இருக்கற பயிர் மற்றும் மூணு கறவை மாடுகள் மூலமா, 90 ஆயிரத்து 580 ரூபாய் கிடைக்குது. மூணு மாசத்துக்கான செலவு 23,200. லாபம்...
67 ஆயிரத்து 380 ரூபாய். மாசத்துக்கு 22 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம கிடைக்கும்'' என்ற பரத், நிறைவாக, ''எவ்வளவு நல்ல விலை கிடைச்சாலும், ஒரே காயை அதிகப் பரப்புல சாகுபடி செய்ய மாட்டேன். கலந்து பயிர் செய்றதால எனக்கு விலை கிடைக்கலைங்கிற பிரச்னை இல்லை. நிறைய பேர் என்கிட்ட 'நல்ல படிப்பு படிச்சுட்டு விவசாயத்தை ஏன் பாக்குற’னு கேக்குறாங்க. அதுக்காக நான் ஒரு நாளும் வருத்தப்பட்டதில்லை. மழை மட்டும் கைகொடுத்தா, இன்னும் கூடுதலாவே என்னால சம்பாதிக்க முடியும். நல்ல மனநிறைவோட எனக்கு பிடிச்ச வேலையை சந்தோஷமா செஞ்சுட்டு இருக்கேன்'' என்று புன்னகையோடு விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, பரத்,
செல்போன்: 99766-92219.

ஆயுளைக் கூட்டும் அற்புத அரிசி !


பலகாரத்துக்கேற்ற
 ரகம், சாதத்துக்கு ஏற்ற ரகம், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்ற ரகம்… என்று பாரம்பரிய நெல் ரகங்கள் ஒவ்வொன்றுக்குமே ஒவ்வொரு சிறப்பு குணமுண்டு. இதற்காகவே, இயற்கை வழி முறையில் விவசாயம் செய்பவர்கள் இப்படிப்பட்ட ரகங்களைத் தேடிப்பிடித்து பயிர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்… போன்ற நோய்களை விரட்டும் மருத்துவ குணமுள்ள ‘காலா நமக்’ எனப்படும் பாரம்பரிய நெல் ரகத்தை சாகுபடி செய்து வருகிறார், திருவண்ணாமலை மாவட்டம், பெரிய கொழப்பளூர் கிராமத்தைச் சேர்ந்த மருத்துவர் மணி.
இவர், 25.1.2012 தேதியிட்ட இதழில், வெளியான ‘வறட்சியிலும் வாடாத வரகு… பாடில்லாமல் தருமே வரவு!’ கட்டுரை மூலமாக வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான்.
கல்வி கொடுத்த ஐ.ஆர்.-8!
”நான், எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சிட்டு, பி.யூ.சி. படிக்க தாத்தாகிட்ட பணம் கேட்டேன். ‘படிக்கப் போக வேண்டாம், தறி நெய்ற வேலையைப் பார்’னு சொல்லிட்டார். அந்த சமயத்துலதான் ஐ.ஆர்.-8 நெல் ரகத்தை அறிமுகப்படுத்துனாங்க. அதை சாகுபடி செய்றதுக்கு ஏக்கருக்கு 400 ரூபாய் கூட்டுறவு சங்கம் மூலமா கடனும் கொடுத்தாங்க. ரேடியோவுல இந்த விஷயத்தைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, ‘கூட்டுறவுக் கடனை வாங்கிக் கொடுங்க ஒரு ஏக்கர்ல பயிர் வெச்சு, வழக்கமா விளையுற 15 மூட்டையை உங்களுக்குக் கொடுத்துடறேன். மீதியை நான் எடுத்துக்கிறேன்’னு தாத்தாகிட்ட கேட்டேன். அவரும் வாங்கிக் கொடுத்தார்.
ஐ.ஆர்.-8 ரகத்தை சாகுபடி பண்ணுனப்போ, ஒரு ஏக்கர்ல 80 மூட்டை (75 கிலோ) நெல் கிடைச்சது. அதுல 40 மூட்டையை வீட்டுக்குக் கொடுத்திட்டு, 40 மூட்டையை வித்துதான் நான் படிச்சேன். அதுக்கப்பறம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துல பேராசிரியரா வேலை பார்க்கும்போதுதான், ரசாயன விவசாயத்தோட பாதிப்பைத் தெரிஞ்சுக்கிட்டேன். அதனால, திரும்பவும் இயற்கை முறை விவசாயத்துக்கே திரும்பிட்டேன்.
எனக்கு இயற்கை விவசாயம் செய்யவும், விவசாயத்துல புதுவிதமான தொழில்நுட்பங்களைச் சிந்திக்கவும் தூண்டி விட்டது, நம்மாழ்வாரும்… பசுமை விகடனும்தான்” என்று முன்கதை சொன்னவர், தொடர்ந்தார்.
‘இப்ப 40 ஏக்கர்ல இயற்கை விவசாயம் செஞ்சுக்கிட்டிருக்கேன்.
5 ஏக்கர்ல தென்னை, மா, குமிழ் இருக்கு. ஒன்றரை ஏக்கர்ல வெட்டிவேர்; ஒன்றரை ஏக்கர்ல பசுந்தீவனம்; 10 ஏக்கர்ல வரகுனு இருக்கு. 14 ஏக்கர்ல இருந்த பொன்னியை அறுவடை பண்ணியாச்சு. ரெண்டு ஏக்கர்ல சீரக சம்பா நெல் இருக்கு. அரை ஏக்கர்ல அடுத்த போகத்துக்கு நாத்து விட்டிருக்கேன். அரை ஏக்கர்ல கருங்குறுவை நெல்லும், நாலு ஏக்கர்ல ‘காலா நமக்’ நெல்லும் அறுவடைக்குத் தயாரா இருக்குது. மீதி ஒரு ஏக்கர்ல கட்டடமும் வண்டிப்பாதையும் இருக்கு” என்றவர், ‘காலா நமக்’ ரகத்தைப் பற்றிச் சொன்னார்.
புத்தருக்குப் பிடித்த ரகம்!
”காலா என்ற சொல்லுக்கு ஹிந்தியில ‘கருப்பு’னு அர்த்தம். ‘நமக்’னா ‘உப்பு’னு அர்த்தம். உடம்புக்கு மொத்தம் 72 வகையான தாது உப்புகள் தேவையாம். அதுல கிட்டத்தட்ட 40 தாது உப்புகள் இந்த காலா நமக் ரக நெல்லுல இருக்கறதா சொல்றாங்க.
மூளை நரம்பு இயங்காமை, சிறுநீரகப் பிரச்னை, கேன்சர், தோல் சம்பந்தமான நோய்கள், ரத்த சம்பந்தமான நோய்கள்னு நிறைய நோய்கள் இந்த ரக அரிசியை சாப்பிட்டா கட்டுப்படும்.
புத்தர் இந்த அரிசியில செஞ்ச உணவை மட்டும் சாப்பிடுவாராம். இப்பவும் புத்த பிட்சுக்கள் எங்க போனாலும், இந்த நெல்லையும், அரிசியையும் கையோட எடுத்துக்கிட்டுப் போறாங்க. அவங்கள்லாம் அதிக வயசு வாழறதுக்குக் காரணம் இந்த அரிசிதான்” என்று வரலாற்றுத் தகவல்களைச் சொல்லி பிரமிப்பூட்டியவர், காலா நமக் நெல் சாகுபடி செய்யும் முறைகளைச் சொன்னார். அவற்றை இங்கே தொகுத்திருக்கிறோம்.
ஏக்கருக்கு 30 கிலோ விதை!
காலா நமக் ரகத்தின் வயது 120 நாட்கள். ஆடி முதல், கார்த்திகை வரை உள்ள மாதங்களில் சாகுபடி செய்யலாம். சாதாரண நடவு முறையில் ஏக்கருக்கு 30 கிலோ விதைநெல் தேவைப்படும். ஒரு ஏக்கருக்குத் தேவையான நாற்றுகளை உற்பத்தி செய்ய, 5 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். 50 கிலோ மட்கிய தொழுவுரத்தைப் போட்டு, ரெண்டு சால் சேற்று உழவு செய்து நிலத்தை சமப்படுத்திக் கொள்ள வேண்டும். 100 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் அமுதக்கரைசல் கலந்து, அதில் 30 கிலோ விதைநெல்லை சணல் சாக்கில் இட்டு கட்டி, 12 மணி நேரம் ஊறவைத்து எடுத்து… தண்ணீரை வடித்து 12 மணி நேரம் இருட்டறையில் வைத்திருக்க வேண்டும். பிறகு நான்கு அங்குல உயரத்துக்கு நாற்றங்காலில் தண்ணீர் கட்டி விதைக்க வேண்டும்.
12 மணி நேரம் கழித்து, நாற்றங்காலில் உள்ள தண்ணீரை வடித்து விட வேண்டும். இது போல நான்கு நாட்களுக்குச் செய்ய வேண்டும். இந்த சமயத்தில் முளைப்பு எடுத்து விடும். அதற்குப் பிறகு தண்ணீரை வடிக்க வேண்டியதில்லை. 10-ம் நாள், 10 லிட்டர் தண்ணீருக்கு, ஒரு லிட்டர் வடிகட்டிய மாட்டுச் சிறுநீரைக் கலந்து தெளித்தால், பூச்சி-நோய் தாக்குதல் இருக்காது. நாற்றும் நன்றாக வளர்ந்து வரும். 25 முதல் 30 நாட்களுக்குள் நடவுக்குத் தயாராகி விடும்.
நாற்று தயாராகும் சமயத்திலேயே நடவு வயலையும், தயார் செய்துவிட வேண்டும். நடவு வயலில் இரண்டு சால் சேற்று உழவு செய்து சமப்படுத்தி, ஏக்கருக்கு 200 கிலோ தொழுவுரத்தை இட்டு, சாதாரண முறையில் அரையடி இடைவெளியில் குத்துக்கு, இரண்டு மூன்று நாற்றுக்களாக நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 20-ம் நாளில் தொழுவுரம் இடவேண்டும். 25-ம் நாளில் கைகளால் களை எடுக்க வேண்டும். அதற்குமேல் பயிர் வளர்ந்து மூடிக் கொள்வதால், களைகள் வளர்வதில்லை.
மகசூலைக் கூட்டும் மோர்க் கரைசல்!
90-ம் நாளில் கதிர் பிடிக்கத் துவங்கும். இச்சமயத்தில் 10 லிட்டர் தண்ணீருக்கு, ஒரு லிட்டர் மோர் (ஒரு வாரம் வரை புளிக்க வைத்தது) என்ற விகிதத்தில் கலந்து… ஏக்கருக்கு 10 டேங்க் தெளித்துவிட வேண்டும். இதனால், சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்படும். 105-ம் நாளுக்கு மேல் கதிர் முற்றத் துவங்கும். 110-ம் நாள் தண்ணீர் கட்டுவதை நிறுத்தி, 120-ம் நாளில் அறுவடை செய்யலாம்.
ஏக்கருக்கு 54 ஆயிரம் ரூபாய் !
நிறைவாகப் பேசிய மணி, ”தூருக்கு இருபதுல இருந்து இருபத்தஞ்சு சிம்புகளும், ஒரு சிம்புக்கு நூத்தி இருபதுல இருந்து, நூத்தம்பது மணிகளும் இருந்துச்சு. அறுவடை செஞ்சப்போ, ஏக்கருக்கு 20 மூட்டை (75 கிலோ) கிடைச்சுது. எப்பவும் நான் அரிசியா மாத்திதான் விப்பேன்.
நான் மருத்துவரா இருக்கறதால, என்கிட்ட சிகிச்சைக்காக வர்றவங்களே பெரும்பாலும் வாங்கிடறாங்க. மீதியை பசுமை அங்காடிகள் மூலமா விற்பனை பண்ணிடறேன்.
ஒரு மூட்டைக்கு 45 கிலோ அரிசி வீதம் 20 மூட்டைக்கு 900 கிலோ அரிசி கிடைக்கும். ஒரு கிலோ 60 ரூபாய்னு வித்தா… 54 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். செலவு போக, 39 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும்” என்று சொல்லி சந்தோஷமாக விடை கொடுத்தார்.
தொடர்புக்கு,
மணி, செல்போன்: 96294-66328.

 மகசூலைக் கூட்டும் கழுநீர்!
மணி, மாட்டுக் கொட்டகை கழுவிய நீரையும் உரமாகப் பயன்படுத்தி வருகிறார். அது பற்றிப் பேசிய அவர், ”இயற்கை விவசாயத்துக்காக நாட்டுமாடுகளை வெச்சுருக்கேன். வழக்கமா எரு மட்டும் போடுற நிலத்தைவிட, ஆட்டுக்கிடை மடக்குற நிலத்துல அதிக மகசூல் கிடைக்கும். அதுக்கு காரணம் ஆடுகளோட மூத்திரமும் நிலத்துல விழறதுதான்.
இதை வெச்சே… மாட்டுச் சாணத்தையும், மூத்திரத்தையும் சேர்த்தே வயல்ல விடலாம்னு நினைச்சேன். அதுக்காக, 60 அடி நீளம், 20 அடி அகலம், 8 அடி ஆழத்தில் கான்கிரீட் தொட்டி கட்டியிருக்கேன். மாடு கட்டுற இடத்துல கிடைக்கற மூத்திரம், சாணத்தைக் கழுவி இந்த தொட்டியில விட்டு, நாலு நாள் தேக்கி வெச்சா அதுல நிறைய நுண்ணுயிரிகள் பெருகிடும். அந்தத் தண்ணியை வாரம் ஒரு தடவை நெல் வயலுக்கு விடுறப்போ மகசூல் கூடுது. இந்தத்தொட்டி மேல ஆடு, கோழி, புறானு வளர்க்கப் போறேன். அதுங்களோட எச்சமும் சேர்றதால… இன்னும் சத்துள்ள உரத்தண்ணி கிடைக்கும்” என்று தொழில்நுட்ப தகவல்களைப் பகிர்ந்தார்.

சோலார் பம்ப்செட்டுக்கு 80% மானியம்… வாரிக் கொடுக்கும், பொறியியல் துறை…

தற்போதைய சூழ்நிலையில், விவசாயப் பரப்பு குறைந்துகொண்டே வருவதற்கு… வறட்சி மற்றும் இயற்கைச் சீற்றங்கள் என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், விவசாயத் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதும் முக்கிய காரணம். அதனால், விவசாயத்தில் உழவு முதல் அறுவடை வரையில் பலவிதமான இயந்திரங்களின் தேவை அவசியமாகிக் கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப பல கருவிகளும் சந்தைக்கு வந்த வண்ணம் உள்ளன.

இப்படிப்பட்ட கருவிகளை வாடகைக்கு விடுவதன் மூலமாகவும், மானியம் கொடுத்து சொந்தமாக வாங்க ஏற்பாடு செய்வதன் மூலமாகவும்… இயந்திரங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் வேலையைத் தொடர்ச்சியாக செய்து வருகிறது, தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறை. இத்துறையின் செயல்பாடுகள் பற்றி, வேலூர் மாவட்ட வேளாண் பொறியியல் துறையின் செயற்பொறியாளர் இன்பநாதன் சொன்ன தகவல்கள் இங்கே இடம்பிடிக்கின்றன.
நிலத்தைச் சமன்படுத்த 910 ரூபாய்…
”விவசாயிகளுக்கு மிகவும் குறைந்த நாட்களுக்கு மட்டுமே தேவைப்படும் புல்டோசர், டிராக்டர், அறுவடை இயந்திரம்… போன்ற கருவிகளைக் குறைந்த கட்டணத்தில் வாடகைக்குக் கொடுத்து வருகிறோம். நீர்ப்பாசனத்தை முறையாக செய்வதற்கு நிலம் சமமாக இருக்க வேண்டும். அப்படி நிலத்தைச் சமன்படுத்து வதற்கு பயன்படுத்தப்படும் புல்டோசர் இயந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கான வாடகை, 910 ரூபாய். சேற்று உழவு, புழுதி உழவு செய்வதற்குத் தேவையான டிராக்டருக்கு ஒரு மணி நேரத்துக்கு 370 ரூபாய். டயர் மூலமாக இயங்கக்கூடிய நெல் அறுவடை இயந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு 910 ரூபாய் என நிர்ணயம் செய்திருக்கிறோம். இக்கருவிகளை வாடகைக்குக் கேட்டு ஒரே நேரத்தில் பலர் அணுகும்போது, பதிவு முன்னுரிமை அடிப்படையில், அனுப்பி வைப்போம்.
நிலத்தடி நீரைக் கண்டுபிடிக்கும் கருவி!
தவிர, பாசனக் கிணறுகளில் இருக்கும் பாறைகளை, வெடி வைத்து உடைத்து ஆழப்படுத்தும் கருவிகளும் உண்டு. இக்கருவிக்கு ஒரு நாளுக்கு 250 ரூபாய் வாடகை. கிணறு, போர்வெல் போன்றவற்றை அமைப்பதற்கு முன்பாக எங்கள் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால்… நீரோட்டம் உள்ள பகுதிகளையும் ஆய்வு செய்து கொடுக்கிறோம். அதற்காக, விவசாய நிலங்களுக்கு 500 ரூபாய் கட்டணமும், மற்ற இடங்களுக்கு 1,000 ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டியிருக்கும்.
புதிய கருவிகளுக்கு 50% மானியம்!
வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் கருவிகள் வாங்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதிகபட்ச மானியமாக… பவர் டில்லருக்கு 45 ஆயிரம் ரூபாய்; டிராக்டருக்கு 45 ஆயிரம் ரூபாய்; ரோட்டவேட்டருக்கு 20 ஆயிரம் ரூபாய்; டிராக்டர் மூலம் இயங்கும் இயந்திரங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய்; ஒருங்கிணைந்த கதிர் அறுவடை இயந்திரத்துக்கு 4 லட்சம் ரூபாய் என வழங்கப்படுகிறது. தவிர, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்துக்கு வந்துள்ள நெல் நடவு இயந்திரம், நேரடி நெல் விதைக்கும் கருவி, தென்னை மட்டையைத் தூளாக்கும் கருவி, களை எடுக்கும் கருவிகள், பயிர் பாதுகாப்புக் கருவிகள், பல வகை தானியம் அடிக்கும் கருவிகள்… போன்றவற்றுக்கு 50% மானியம் உண்டு.
பயிற்சியும் உண்டு..!
வேலூர், திருச்சி, திருவாரூர், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய ஆறு மாவட்டங்களில் டிராக்டர் பழுதுபார்க்கும் மையங்கள் உள்ளன. இம்மையங்களில்… எழுதப் படிக்க தெரிந்த கிராமப்புற இளைஞர்களுக்கு வேளாண் கருவிகள் பராமரித்தல் மற்றும் பழுது பார்த்தல் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இப்பயிற்சியில் சேர்பவர்களுக்கு ஊக்கத்தொகையும் உண்டு. ஒவ்வோர் ஆண்டும் ஒரு குழுவுக்கு 50 பேர் வீதம், இரண்டு குழுக்களுக்கு 3 மாத காலம் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி தேவைப்படுவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
இளைஞர்களுக்கு முழு மானியத்தில் இயந்திரம்!
‘உழவர் குழுக்கள்’ திட்டத்தின் கீழ் 16 இளைஞர்களை ஒன்றாகச் சேர்த்து குழு அமைத்து… அவர்களுக்கு இயந்திரங்களை இயக்குவது, இயந்திர நடவுக்கான நாற்றுகளை உற்பத்தி செய்வது போன்ற தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொடுக்கிறோம். இத்திட்டத்தின் கீழ், நான்கு பவர் டில்லர்கள், நான்கு நெல் நடவு இயந்திரங்கள், நான்கு களை எடுக்கும் இயந்திரங்கள் என 12 இயந்திரங்களை 100 சதவிகித மானியத்தில் கொடுக்கிறோம். இக்குழுக்களை எங்களின் கண்காணிப்பில் வைத்து, தேவையான ஆலோசனைகளைக் கொடுத்து வருகிறோம். இதுபற்றிய விவரங்கள் தேவைப்படுபவர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
சோலார் பம்ப் செட்டுக்கு 80% மானியம்!
மின்சாரப் பற்றாக்குறையால் பாசனம் தடைபடும் பிரச்னையைப் போக்க, போர்வெல் மற்றும் கிணறுகளில்
5 ஹெச்.பி. திறன் கொண்ட சோலார் பம்ப் செட்டுகள் அமைத்துக்கொள்ள 80% மானியம் வழங்கப்படுகிறது. விவசாயி தனது பங்காக 20% தொகை யையும் அதற்கான வரித்தொகையையும் செலுத்த வேண்டும். அதாவது, போர்வெல் பாசனமாக இருந்தால், வரியுடன் சேர்த்து, 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவாகும். இதில் 3 லட்சத்து, 35 ஆயிரத்து 200 ரூபாய் மானியமாகக் கிடைக்கும். பயனாளி தனது பங்காக 1 லட்சத்து 4 ஆயிரத்து 800 ரூபாய் செலுத்த வேண்டும்.
கிணற்றுப் பாசனத்துக்கு வரியுடன் சேர்த்து, 5 லட்சத்து ஆயிரத்து 500 ரூபாய் செலவாகும். இதில் 3 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மானியமாகக் கிடைக்கும். பயனாளி தனது பங்காக, 1 லட்சத்து 17 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும்.  இத்திட்டத்தில் பயன்பெற… 200 முதல் 300 அடி ஆழத்தில் தண்ணீர் இருக்க வேண்டும். கண்டிப்பாக சொட்டு நீர்ப்பாசனம் அமைத்திருக்க வேண்டும் அல்லது சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பதாக உத்தரவாதம் கொடுக்க வேண்டும்” என்று மிகவும் விரிவாகப் பேசிய இன்பநாதன்,
”இன்றையச் சூழ்நிலையில் ஆள்பற்றாக்குறை, மின்தட்டுப்பாடு போன்ற பிரச்னைகளைச் சமாளிக்க இதுபோன்ற கருவிகள், இயந்திரங்கள் அவசியம். அதனால், அரசு வழங்கும் சலுகைகளை முறையாக விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அழைப்பு வைத்தார்!

கால்நடைகளில் வெப்ப மூச்சு திணறல்

கடுமையான வெயில் காரணமாக கால்நடைகளில் வெப்ப மூச்சு திணறல் (panting) காணப்படும். கீழ்கண்ட யுக்திகள் பலன் கொடுக்கும்.
1. கால்நடை தீவனத்தில் ALKAKARB என்னும் சோடா உப்பை
பயன்படுத்தலாம்.
2. Kemtrace Cr, Elecrolytes தீவனத்தில் கலந்து கொடுக்கலாம்.
3. சுத்தமான தண்ணீர் கால்நடைகளுக்கு எல்லா நேரமும்
கிடைக்க செய்ய வேண்டும்.
4. லேசான காற்று இருக்கும் பொழுது பண்ணையில் foggers
பயன் படுத்தலாம்.
5. முடிந்தவரை தீவனத்தை வெப்பம் குறைவாக இருக்கும்
மாலை நேரங்களில் அளிப்பது நல்லது.
Udhayashankar Veeramani's photo.
Udhayashankar Veeramani's photo.
Udhayashankar Veeramani's photo.
Udhayashankar Veeramani's photo.

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

Programme

Programme Coordinator
******************
Krishi Vigyan Kendra
Kattupakkam,
Kattankulathur (Post),
Kancheepuram (District),
Tamil Nadu - 603 203 .
Telephone : 044-27452371




திங்கள், 21 ஏப்ரல், 2014

அசோலா தீவன வளர்ப்பு



கால்நடைகளின் உணவுத் தேவையான அசோலா தீவன வளர்ப்பில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

அதிக விளைச்சல் தரும் புதிய தீவனப்புல் ரகங்களின் வருகையால், வைக்கோல் மற்றும் தானியங்களின் விகிதம் குறைந்து, கால்நடைகளுக்கு தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், விளைநிலங்கள் இருப்பிடங்களாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறி வருவதால் தீவனத்திற்கு தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.

தீவன தட்டுப்பாட்டை சரிசெய்யும்

இத்தகைய சூழ்நிலையில், கால்நடைகளுக்கு தேவையான நிறைய சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ள ''அசோலா'' போன்ற சிறிய வகை தாவரங்களை வளர்ப்பதன் மூலம், கால்நடைகளுக்கான தீவனத் தேவையை சமாளிக்க முடியும் என்கின்றனர் கால்நடை பரமாரிப்புத்துறையினர். அசோலாவை வளர்க்க சிறிய அளவிலான இடவசதி போதும் என்பதால், தீவன வளர்ப்பில் கரூர் மாவட்ட விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபடுகின்றனர்.

அரவக்குறிச்சி வட்டாரத்தில் உள்ள சின்னதாராபுரம், நஞ்சைகாளக்குறிச்சி, புளியம்பட்டி, செளந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில், அசோலா வளர்ப்பிற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் இலவசமாக வழங்கி விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகின்றனர் கால்நடை பராமரிப்புத் துறையினர்.

இதன் மூலம் வளர்க்கப்படும் அசோலா தீவனத்தை உண்ணும் கால்நடைகள், அதிகளவு பால் கறப்பதாகவும், கோழிகள் அதிக எடையோடு வளர்வதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மாவுச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகமாக நிறைந்த தீவனமாக இருக்கும் அசோலாவை, குறைவான நீரைக் கொண்டும் வளர்க்க முடியும் என்கின்றனர் கால்நடை பராமரிப்புத் துறையினர். பொதுவாக முக்கோணம் அல்லது வட்டவடிவில் இருக்கும் அசோலா தீவனத்தின் இலைகள் சிறியதாகவும், ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தது போன்று இருக்கும் என்பது சிறப்பு.


கால்நடைகளுக்கான தீவனத் தட்டுப்பாட்டை சரிசெய்ய, மாற்று வழிகள் மூலம் தீவன வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபடுவது வரவேற்பக்குரியதும், பாராட்டுக்குரியதுமாகும்.

வியாழன், 17 ஏப்ரல், 2014

வெள்ளாடுகளில் நோய் மேலாண்மை

ஆடுகளை பாதிக்கும் நோய்கள்:
 
நச்சுயிரி நோய்கள்

கோமாரி நோய்

அறிகுறிகள்
  • நாக்கு, மடி மற்றும் குளம்புகளுக்கிடையில் கொப்புளமும் புண்ணும் காணப்படுதல், தீவனம் எடுக்க இயலாமை, காய்ச்சல், குட்டிகளில் இறப்பு, சினை ஆடுகளில் கருச்சிதைவு ஏற்படுதல்.
சிகிச்சை
    1. சமையல்சோடா உப்புக் கலந்த நீரில் கால் மற்றும் வாய்ப்புண்களை கழுவி மருந்திடுதல்.
    2. போரிங் பவுடருடன் கிளிசரின் கலந்து வாயில் தடவவேண்டும்.
வெக்கை சார்பு நோய்
  • இது செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளைத் தாக்கும் மிகக்கொடிய தொற்றுநோய் ஆகும்.
அறிகுறிகள்
  • வாய்ப்புண், மூச்சுத்திணறல், கழிச்சல், கண் மற்றும் மூக்கிலிருந்து நீர் வடிதல், காய்ச்சல்.
தடுப்பு முறை
  • தடுப்பூசி போடுதல் அவசியம்.
 ஆட்டு அம்மை
  • வெள்ளாடுகளை விட செம்மறியாடுகளையே அதிகம் தாக்குகிறது.
அறிகுறிகள்
  • உதடு, மூக்கு, கண் இமை, காது, காலின் அடிப்பகுதி, மடி, இனப்பெருக்க உறுப்பு போன்ற இடங்களில் முத்துப்போன்ற அம்மைக் கொப்புளங்கள் காணப்படுதல், காய்ச்சல், உணவு உட்கொள்ளாமை.
நீலநாக்கு நோய்ள

அறிகுறிகள்
  • காய்ச்சல், சளி, தும்மல், இருமல், சுவாசிப்பதில் சிரமம், சளி கொட்டியாவதால் மூக்கடைப்பு ஏற்படுதல், நான்கு நாட்களில் உதடு, மூக்கு, நாக்கு, குளம்பின் மேல் பகுதி மற்றும் கீழ்த்தாடை வீங்குதல், நாக்கு நீல நிறமாக மாறுதல், தீவனம் உட்கொள்ளாமை மற்றும் ஒரு வாரத்தில் இறந்து விடுதல்.
சிகிச்சை
  • போரிங் பவுடரைத் தேங்காய் எண்ணெயில் கலந்து புண்ணுக்கு தினம் இரு முறை போடவேண்டும்.
  • நோய் எதிர்ப்பு மருந்துகள் 5 நாட்களுக்குள் கொடுக்கவேண்டும்.
  • மென்மையான தீவனங்களை கொடுக்கவேண்டும்.
நுண்ணுயிரி நோய்கள்

அடைப்பான்

அறிகுறிகள்
  • எந்தவித நோய் அறிகுறிகளும் இல்லாமல் திடீர் இறப்பு, இறந்தபின் ஆசனவாய், மூக்கு, காது போன்றவைகளிலிருந்து உறையாத கருஞ்சிவப்பு இரத்தம் வெளியேறுதல்.
தடுப்பு முறை
  • இறந்த ஆடுகளை ஆழமாகக் குழிவெட்டி சுண்ணாம்புத் தூள் தெளித்து மூடிவிடவேண்டும். தடுப்பூசி போடுதல் அவசியம்.
தொண்டை அடைப்பான்

அறிகுறிகள்
  • பாதிக்கப்பட்ட ஆடுகளில் அதிகக் காய்ச்சல், மூச்சுவிட சிரமம், இருமல், கீழ்த்தாடையில் வீக்கம், திடீரென இறந்து விடுதல்.
சிகிச்சை
  • ஆரம்பகால நோய்க்கு நோய் எதிர்ப்பு மருந்து கொடுத்தல் மற்றும் நோய் தீர்க்கும் முன் தடுப்பூசி போடுதல் அவசியம்.
துள்ளுமாரி நோய்
  • எல்லா வயது ஆடுகளையும் பாதிக்கும். ஆனால் இளம் வயது ஆடுகளே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன. மழைக்குப்பின் புதிதாக முளைத்த பசுமையான புல்வெளியில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகளுக்கு இந்நோய் ஏற்படும்.
அறிகுறிகள்
    1. ஆடுகள் மேயாமல் சோர்ந்து வயிற்று வலியால் பற்களைக் கடிக்கும்.
    2. சாணம் இளகி, இரத்தம் கலந்திருக்கும்.
    3. ஆடுகள் நடக்கும் போது கால்கள் பின்னி, கழுத்து விரைத்து, கண்கள் பிதுங்கி, மயங்கி தலை சாய்ந்து கீழே விழும்.
    4. இறப்பதற்கு முன் வலிப்பு ஏற்பட்டு துள்ளி விழும்.
தடுப்பு முறைகள்
  1. சூரிய உதயத்திற்குப் பின் ஆடுகளை 1 மணி நேரம் கழித்து மேய்ச்சலுக்கு அனுப்பவேண்டும்.
  2. பருவமழைக்கு முன் தடுப்பூசி போடுதல் அவசியம்.
ஒட்டுண்ணி நோய்கள்

அக ஒட்டுண்ணிகள்

பரவுதல்
  • மேய்ச்சலின் போது ஆடுகளின் வயிற்றுக்குள் செல்கின்றன.
அறிகுறிகள்
  • இரத்தசோகை, பசியின்மை, எடை குறைதல், தள்ளாடி நடத்தல், தாடை வீங்குதல், உரோமம் கொட்டுதல், வயிற்றுப்போக்கு.
தடுப்பு முறைகள்
  • குடற்புழு நீக்கம் செய்தல்
  • சாணத்தை அப்புறப்படுத்தி, தரையைக் கழுவுதல்
  • கிருமி நாசினி மருந்தைப் பயன்படுத்தி சுத்தம் செய்தல்.
புற ஒட்டுண்ணிகள்

உண்ணி, பேன், தெள்ளுப்பூச்சி மற்றும் சிற்றுண்ணிகள் (mite) ஆகும்.

பாதிப்புகள்
  1. தோல் தடித்தல், சொறி உண்டாகுதல், முடி உதிர்தல், இரத்த சோகை, இரத்த ஒட்டுண்ணிகள் பரவுதல், தேய்த்துக் கொள்ளுதல், கடித்துக் கொள்ளுதல், அஜீரணம், இளைத்து எடைக்குறைதல் போன்றவையாகும்.
  2. மருந்துக் குளியல், தெளித்தல் () தூவுதல் முறை, இவற்றிற்கு கீழ்க்கண்ட மருந்துகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
  3. மாலத்தியான்  0.5 சதவிகிதம் சுமித்தியான் 1/100 (தெளிக்கும்  முறை)
  4. பியூட்டாக்ஸ் 0.02 சதவிகிதம் லிண்டேன் 0.03 சதவிகிதம்
  5. ஐவர்மெக்டின் 0.2 மி.கி / கி.கி உடல் எடைக்கு
ஒரு செல் நுண்ணுயிரி நோய்கள்

இவற்றில் ஆட்டுக் குட்டிகளை அதிகம் தாக்கும் இரத்தக் கழிச்சல் நோய் முக்கியமானதாகும்.

அறிகுறிகள்
  • காய்ச்சல்
  • சளி மற்றும் இரத்தத்துடன் கழிச்சல்
  • வாலைத் தூக்கி முக்குதல்.
தடுப்பு முறை
  • தரை ஈரமில்லாமல் உலர்ந்த நிலையில் இருக்கவேண்டும்.
  • குட்டிகளுக்கு பாலில் ஆம்பரோலியம் கலந்துக் கொடுத்தல்
  • குட்டிகள் சானத்தை நக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். 10 விழுக்காடு அம்மோனியாவை கொட்டிலில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
  • கன்று வீச்சு நோய்
  • டெட்டானஸ்
  • சுழல் நோய்
ஆடுகளின் எடை அதிகரிப்பதற்கும், குட்டிகளில் இறப்பை தவிர்க்கவும் குடற்புழு நீக்கம் செய்வது அவசியம்.
குடற்புழு நீக்க அட்டவணை
ஆடுகளின் வயது
பரிந்துரைகள்
2வது மாதம்
நாடாப்புழுக்களுக்கான மருந்து
3வது மாதம்
நாடாப்புழுக்களுக்கான மருந்து
4வது மாதம்
நாடாப்புழுக்களுக்கான மருந்து
5வது மாதம்
உருண்டைப்புழுக்களுக்கான மருந்து
6வது மாதம்
உருண்டைப்புழுக்களுக்கான மருந்து
9வது மாதம்
உருண்டை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
12வது மாதம்
தட்டைப் புழுக்களுக்கான மருந்து
ஆறு மாதம் வரை ஆட்டுக்குட்டிகளுக்கு மாதம் ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்யவேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதாவது பருவமழைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு முறையும், பருவ மழையின் போது ஒரு முறையும், பருவ மழைக்குப்பின் இருமுறையும் கொடுக்கவேண்டும்.
மாதம்
பரிந்துரைகள்
ஜனவரி - மார்ச்
தட்டைப்புழுவிற்கான மருந்து
ஏப்ரல் - ஜீன்
உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
ஜீலை - செப்டம்பர்
தட்டைப் புழுவிற்கான மருந்து
அக்டோபர் - டிசம்பர்
உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை.
  1. ஆடுகளுக்கு தகுந்த குடற்புழு மருந்தைத் தேர்வு செய்யவேண்டும்.
  2. தூள் மருந்தைப் பயன்படுத்தும் பொழுது வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது கரையாத மருந்துத் துகள்களும் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.
  3. அதிகாலையில், வெறும் வயிற்றுடன் உள்ள ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்.
  4. மருந்துக் கலவையை வாயின் வழியாக ஊற்றும் பொழுது புரையேறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
  5. குடிநீரில் குடற்புழுநீக்க மருந்தும் நோய் எதிர்ப்பு மருந்தும் ஒன்றாக கலந்துக் கொடுக்கக்கூடாது.
  6. குடற்புழுக்களின் வகைகளையும் முட்டைகளையும் அறிந்து மருந்து கொடுப்பது சிறந்தது.
  7. தொடர்ந்து ஒரே மருந்தைக் கொடுக்காமல் மாற்றித் தருவது அவசியம்.
வெள்ளாடுகளுக்கான தடுப்பூசி அட்டவணை
.
எண்
நோய் மற்றும் தடுப்பூசியின் பெயர்
முதல் தடுப்பூசி
தொடர் தடுப்பூசிகள்
சிறப்புக் கவனம்
1.
பிபிஆர் நோய் (பெஸ்ட்டெஸ்பெட்டிட்ஸ் ரூமினென்ட்ஸ்)
3-4 மாதம்
ஆண்டுக்கு ஒரு முறை
தகுந்த நோய்ப் பாதுகாப்பு நோய் கட்டுப்பாட்டு முறைகளைக் கையாள வேண்டும்.
2.
கோமாரி நோய் தடுப்பூசி (திசு வளர் கோமாரித் தடுப்பூசி)
2 மாத வயதில்
ஆண்டுக்கு ஒரு முறை
நோய்க்கிளர்ச்சியின் போது பாதிக்கப்படாத ஆடுகளுக்கும் அண்டைக் கிராமகால்நடைகளுக்கும் தடுப்பூசி அளித்தல் அவசியம்.
3.
துள்ளுமாரி நோய் தடுப்பூசி (துள்ளுமாரி நோய் தடுப்பூசி : துள்ளுமாரி டாக்சாய்டு ஊசி)
6 வார வயதில்
ஆண்டுக்கு ஒரு முறை
மழைக்காலத்திற்கு முன்னரும், குட்டி ஈனும் பருவங்களில் தாய் ஆடுகளுக்கும் தடுப்பூசி அளித்தல் அவசியம்.
4.
ஆட்டம்மை தடுப்பூசி (வீரியம் குறைக்கப்பட்ட ஆட்டம்மை உயிர்த் தடுப்பூசி)
3-6 மாத வயதில் (நோய் காணும் பகுதிகளில்)
ஆண்டுக்கு ஒரு முறை (நோய்க் காணும் பகுதிகளில் மட்டும்)
கோடைக்காலத்திற்கு முன்னர் நோய் காணும் பகுதிகளில் ஒரு தடுப்பூசி அவசியம்.
5.
அடைப்பான் நோய் தடுப்பூசி
(
அடைப்பான் ஸ்டோர் தடுப்பூசி)
நோய்க் கிளர்ச்சியின் போது மட்டும் 6 மாத வயதில்
நோய் அடிக்கடி தோன்றும் பகுதிகளில் வருடம் ஒரு முறை, மற்ற பகுதிகளில் தேவையில்லை.
நோய்க்காணும் பகுதிகளில் மழைக்காலத்திற்கு முன்னர் தடுப்பூசி போடவேண்டும்.
6.
டெட்டனஸ் ஜன்னி
தடுப்பூசி (டெட்டனஸ் டாக்சாய்டு தடுப்பூசி)
குட்டி ஈன 6-8 வாரத்திற்கு ஒரு முறை
-
குட்டிகள் பிறந்து 48 மணி நேரத்திற்கு பின்.
7.
தொண்டை அடைப்பான் தடுப்பூசி (பார்மலின் வழி செயலிழக்கப்பட்ட தொண்டை அடைப்பான் தடுப்பூசி)
6 மாத வயதில் நோய் காணும் பகுதிகளில் மட்டும்)
ஆண்டுக்கு ஒரு முறை
மழைக்காலத்திற்கு முன்னர் ஒரு தடுப்பூசி அளித்தல்